கொரோனா தொற்றுக் காரணமாக உலகம் முழுவதிலும் பெரிய அளவில் வர்த்தகப் பாதிப்பை எதிர்கொண்ட ஒரு துறை என்றால் அது பயணிகள் விமானப் போக்குவரத்துத் துறை தான். ஆம், கொரோனா பரவும் அச்சத்தால் அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன் உட்படப் பல உலக நாடுகள் சர்வதேச எல்லைகளை மூடி விமானப் போக்குவரத்துக்குத் தடை விதித்துள்ளது.
இதன் எதிரொலியாகப் பல முன்னணி விமான நிறுவனங்களும் வர்த்தகம் மற்றும் வருவாய் இல்லாமல் தவித்து வந்த நிலையில் செலவுகளைக் குறைக்க வேண்டும் எனப் பல ஆயிரம் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தனர். இதனால் உலகம் முழுவதும் பல கோடி விமானப் பைலட்கள் மற்றும் பணிப்பெண்கள் தங்களது வேலைவாய்ப்பை இழந்து தவித்தனர்.
ஆனால் கடந்த சில மாதங்களாகப் பல நாடுகளில் பல கடுமையான கட்டுப்பாடுகளுடன் உள்நாட்டு விமானப் போக்குவரத்துக்கும், சில நாடுகள் குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும் வெளிநாட்டுப் பயணத்திற்குத் தனது உள்நாட்டு மற்றும் சர்வதேச வான்வழி எல்லைகளைத் திறந்துள்ளது.
3 மாதம்
கடந்த 3 மாதத்தில் பல நாடுகள் தனது உள்நாட்டு விமானப் போக்குவரத்தை துவங்கியுள்ள நிலையில் உலக விமானப் போக்குவரத்து நிறுவன பங்குகள் பட்டியலில் டாப் 10 இடத்தில் 9 இடத்தைச் சீன நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளது.
சர்வதேச விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் மத்தியில் இதுபோன்ற நிகழ்வு எப்போதும் நிகழந்தது இல்லை என்பதல் அரபு மற்றும் ஜெர்மானிய விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் ஆதிர்ச்சி அடைந்துள்ளது.
சீனா
இந்தக் கொரோனா காலத்தில் ஜூன் காலாண்டில் உலகம் முழுவதும் கொரோனா உடன் போராடி பொருளாதாரத்தில் பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொண்ட வேளையில், சீனா கொரோனாவில் பாதிப்பில் இருந்து வெளியேறி வர்த்தகம் மற்றும் சேவைத்துறை இயல்பு நிலைக்குத் திரும்பத் துவங்கியது. இதன் எதிரொலியாகவே சீன பொருளாதாரம் ஜூன் காலாண்டில் 3.2 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்திருந்தது.
விமானப் போக்குவரத்து
இந்த 3 மாத காலத்தில் மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பிய காரணத்தால் சீனாவின் உள்நாட்டு விமானப் பயணத்தில் பெரிய அளவிலான உயர்வு ஏற்பட்டு டாப் 10 பயணிகள் விமானப் போக்குவரத்து நிறுவன பங்குகள் பட்டியலில் 9 இடங்களைச் சீன நிறுவனங்கள் கைப்பற்றி ஆதிக்கம் செய்கிறது.
மேலும் சீனாவின் முன்னணி விமான நிறுவனமாக இருக்கும் ஏர் சைனா இரட்டை இழக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. மேலும் சீனாவின் மலிவு விலை விமானச் சேவை நிறுவனமான Spring Airlines இக்காலக்கட்டத்தில் அதிகப்படியாக 22 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்து முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
இந்திய நிறுவனம்
டாப் 10 நிறுவன பங்குகள் பட்டியலில் 9 இடங்களைச் சீன நிறுவனங்கள் பிடித்த நிலையில் மீதமுள்ள ஓரேயொரு இடத்தை இந்திய நிறுவனமான இண்டிகோ பிடித்துள்ளது.
இந்தியாவில் உள்நாட்டு விமானச் சேவை துவங்கப்பட்ட நாளில் இருந்து தனியார் விமானப் போக்குவரத்து நிறுவனமான இண்டிகோ அதிகப்படியான பயணிகளை ஈர்த்து வருகிறது. இதனால் உலகின் டாப் 10 பட்டியலுக்குள் இண்டிகோவும் நுழைந்துள்ளது.
290 விமான நிறுவனங்கள்
உலகளவில் சர்வதேவ பயணிகள் விமானப் போக்குவரத்து சேவை அளிக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை 290, இந்த நிறுவனங்களின் வர்த்தகம் 2024ஆம் ஆண்டில் தான் இயல்பு நிலைக்குத் திரும்பும் எனக் கணிப்புகள் வெளியாகியுள்ளது.