COVID-19 என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கொடிய கிருமித்தொற்றால் இத்தாலியில் இருவர் பலியானதைத் தொடர்ந்து, நோய் பரவியுள்ள இடங்களில் போக்குவரத்துத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அங்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.
பொருளாதாரம் பாதிக்கலாம்
இது ஒரு புறம் எனில் நாட்டின் வடக்குபகுதியில் பலத்த பயணக் காட்டுப்பாடுகளுடன் உள்ளதாகவும், இதனால் அந்த நாட்டின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக சொல்லவேண்டுமானால் வடக்கு இத்தாலியின் லோம்பார்டியில் உள்ள பல நகரங்கள் பூட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
குறைந்த மக்களுக்கு மட்டுமே அனுமதி
மேலும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே உள்ளேயும் வெளியேயும் அனுமதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் வடக்கு இத்தாலியானது தொழில்துறையினரின் மையமாகும். அதிலும் குறிப்பாக லோம்பார்டி மட்டும் அதில் 40% பங்கினை கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மிலன் ஒரு முக்கிய நகரம்
இதே இத்தாலியில் மற்றொரு முக்கிய நகரம் மிலன் ஆகும். இது நாட்டின் மிக முக்கிய நிதி மையாமாகும். மேலும் பிற சேவைகளின் முக்கிய தளமாகவும் விளங்குகிறது. கொரோனாவால் தடை செய்யப்பட்ட பகுதிகள் மிலன் இல்லை என்றாலும், முக்கிய சுற்றுலா தளங்களாக கருத்தப்படும் கதீட்ரல், ஓபரா ஹவுஸ் லா ஸ்கலா போன்ற முக்கிய சுற்றுலா மற்றும் கலாச்சார தளங்கள் மூடப்பட்டுள்ளன.
முக்கிய பேஷன் தளம்
உலகின் முக்கிய பேஷன் மையங்களில் மிலனும் ஒன்றாகும். குறிப்பாக பிப்ரவரி பிற்பகுதியில் பேஷன் வீக் தப்பிப்பிழைத்தது என்றே கூறலாம். ஏனெனில் இந்த பேஷன் வீக்குக்கு பிறகு தான் இந்த கொரோனா தாக்கம் ஏற்பட்டது என்றும் கூறப்படுகிறது. இந்த தாக்கம் கொஞ்சம் முன்பு வந்திருந்தால் இந்த நிகழ்வில் பெரும் பிரச்சனைகள் வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
வேலைக்கு வராதீர்கள்
மேலும் இத்தாலியில் சிறப்பு அனுமதி பெறாதவர்கள் நோய் பரவியுள்ள இடங்களுக்குச் செல்ல முடியாது. இத்தாலியின் வடக்குப் பகுதியில் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அதிகம் பதிவாகியுள்ளதாகவும், இதனால் நிறுவனங்கள் அதன் ஊழியர்களை வீட்டில் இருக்கும்படிக் கேட்டுக்கொண்டுள்ளதாகவும், அதே நேரம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பள்ளிகள் மூடப்பட்டிருப்பதுடன் பொது நிகழ்ச்சிகள் தடை செய்யப்பட்டுள்ளனவாம்.
இது வாழ்வா சாவா போராட்டம் தான்
ஏற்கனவே தொடர்ந்து மெதுவான வளர்ச்சியுடன் போராடி வரும் இத்தாலி, சுகாதரத்திலும் நெருக்கடியை சந்தித்துள்ளது. இது இன்னும் நெருக்கடிக்கு கொண்டு செல்லும். மேலும் மந்த நிலைக்கு வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆக எப்படி பார்த்தாலும் இத்தாலிய பொருளாதாரம் ஒரு மோசமான நிலையிலேயே உள்ளது. கடந்த 2019ம் ஆண்டில் மொத்த பொருட்களின் உற்பத்தி மற்றும் சேவைகளின் வளர்ச்சி 15 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போலவே இருந்தது. சொல்லப்போனால் 2007ல் நெருக்கடிக்கு முன்னதாக எட்டப்பட்ட 4% வளர்ச்சியை விட குறைவாகவே இருந்தது.
முக்கிய பிரச்சனையே வேலையின்மை
இத்தாலியில் வேலையின்மை என்பது ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. குறிப்பாக 25 வயதிற்குட்பட்ட இளைஞர்களுக்கான வேலையின்மை விகிதம் 28.9% ஆகும். இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இத்தாலி பலவீனமான வளார்ச்சியுடன், உலகளாவிய வளர்ச்சியிலும் போராடி வருகிறது. குறிப்பாக கடந்த ஆண்டில் இறுதி காலாண்டில் ஜிடிபி விகிதம் 0.3% வீழ்ச்சி கண்டது. ஆக இது மேலும் வேலையின்மையை அதிகரிக்க வழிவகுக்கும்.
ஜிடிபி சுருங்கும்
மேலும் நடப்பு காலாண்டிலும் நிச்சயம் ஜிடிபி விகிதம் சுருங்கிவிடும். எனவே தொழில்நுட்ப ரீதியில் மந்த நிலையில் இருக்கும் இத்தாலி தொடர்ச்சியாக இரண்டு காலாண்டுகளிலும் ஜிடிபி விகிதம் வீழ்ச்சியை காணும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த வைரஸ் தாக்கம் இல்லாவிட்டாலும் இத்தாலி நிச்சயம் வீழ்ச்சி கண்டிருக்கும் என்பது உண்மை என்றாலும், தற்போது கொரோனா தாக்கத்தினால் பொருளாதார நடவடிக்கைகள் மேலும் பாதிக்கப்படும். ஆக பொருளாதாரத்தில் நிச்சயம் முரண்பாடுகளுக்கு இது வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது.
சுற்றுலா பகுதிகளில் இதுவரை தாக்கம் இல்லை
இத்தாலி முழுமையாக எவ்வளவு பாதிக்கப்படும் என்பது கொரோனாவின் தாக்கத்தினை பொறுத்து தான் அமையும் என்றும் கூறப்படுகிறது. கொரோனா தாக்கம் சுற்றுலா துறையையும் கடுமையாக பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை. மலைகளில் பனிச்சறுக்கு தவிர, இது முக்கிய பருவம் அல்ல என்றாலும், இதுவரை சுற்றுலாப் பகுதிகளில் கொரோனா தாக்கம் இல்லை என்பது கொஞ்சம் சந்தோஷப்படக்கூடிய விஷயமே.
வேகமாக பரவலாம்
எனினும் கோடைகாலம் மாறும்போது இந்த கொடிய வைரஸ் இன்னும் வேகமாக மற்ற பகுதிகளுக்கும் பரவக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. இந்த நிலையில் ஏற்கனவே வடக்கு இத்தாலிக்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் வரும் காலத்தில் சுற்றுலா துறை இன்னும் படுமோசமாக பாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பூஜ்ஜியத்தை தொடலாம் என்றும் பேராசிரியர் பெரோட்டி கூறியுள்ளார்.
வர்த்தகம் விரைவில் மீண்டு வராது
அப்படி எனினும் கொரோனாவின் தாக்கம் மீண்டாலும், கோடைகாலத்தில் வர்த்தகமும் விரைவில் மீண்டு வராது. ஆக இது ஒரு நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தும். இது மீண்டும் ஒரு பெரிய பிரச்சனையாகவே விஸ்வரூபம் எடுக்க கூடும் என்றும் பெரோடி தெரிவித்துள்ளார். ஏற்கனவே இத்தாலியில் நிலவி வரும் நிலையால் வட்டி குறைப்பையும் எதிர்பார்க்க முடியாது.
இரு பெரும் சவால்கள்
இத்தாலி முன்பு பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் சவாலை மட்டுமே எதிர்கொண்டு வந்தது. தற்போது கொரோனாவின் தாக்கத்தினையும் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஆக இத்தாலிக்கு பல சவால்கள் உள்ளன. ஆக இந்த கொடிய தொற்றுதலானது நீண்ட காலத்திற்கு தொடர்ந்தால் பிரச்சனைகள் அதிகமாகும். இத்தாலிக்கு இது நீண்டகாலத்திற்கு பெரும் பிரச்சனையாக அமையும் என்றும் ஆய்வாளர்கள் மத்தியில் கூறப்படுகிறது.