பெங்களூரு: இந்தியாவில் ஐடி துறையில் தனக்கென ஒரு தனி இடத்தினை கொண்டிருக்கும் பெங்களூருவிலும் தற்போது கொரோனா வைரஸின் பயம் தொற்றிக் கொள்ள ஆரம்பித்துவிட்டது.
இதனை நிரூபிக்கும் விதமாக ஆரம்ப பள்ளிகளுக்கு எல்லாம் விடுமுறை கூட விடுக்கப்பட்டுள்ளது.
இது சீனாவின் வுகான் மாகாணத்தையே நம் கண் முன் கொண்டு வந்துள்ளது. பொருளாதாரத்தில் இரண்டாவது நாடான சீனாவே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா அதை எப்படி சமாளிக்க போகிறது என்ற பயம் ஒரு புறம். அதிலிருந்து எப்படி மக்களை தற்காத்துகொள்ள முடியும். இதற்காக எப்படியெல்லாம் நடவடிக்கை எடுக்கலாம் என பார்த்து பார்த்து நடவடிக்கை எடுத்து வரும் மாநில அரசுகள் ஒருபுறம்.
இந்தியாவில் பாதிப்பு
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவின் தாக்கம் குறித்து மக்கள் பீதியடைந்துள்ள இந்த நிலையில், இதுவரை இந்தியாவில் 50க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சில நாடுகளுக்கு செல்லவும் தற்காலிகமாக தடை செய்துள்ளது அரசு. இந்த நிலையில் கர்நாடாக மாநில அரசு ஊழியர்களுக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அவர்களை வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதிக்குமாறு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியது.
ஊழியர்களுக்கு அறிவுரை
மேலும் காய்ச்சல் மற்றும் இருமல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் உள்ள ஊழியர்களை வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதிக்குமாறு அறிவுறுத்தப்படலாம். குறிப்பாக நகரப்பகுதிகளில் உள்ள நிறுவனங்கள் இதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு சுகாதாரம் உள்ளிட்ட ஆலோசனைகளையும் வழங்கி வீட்டில் இருந்து பணிபுரிய செய்யலாம் என்றும் கர்நாடக அரசு கடந்த வாரம் அறிவுறுத்தி இருந்தது.
வணிகத்தில் பாதிப்பு ஏற்படலாம்
மென்பொருள் ஏற்றுமதியில் கணிசமான பங்குகளை கொண்டுள்ள பெங்களூரு ஐடி துறையில், கொரோனாவின் இந்த தாக்கத்தினால் பாதிப்புகள் ஏற்படக் கூடும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. குறிப்பாக சொல்லவேண்டுமானால் மென்பொருள் ஏற்றுமதியில் மூன்றில் ஒரு பங்கினை கொண்டிருக்கும், அதவாது 147 பில்லியன் டாலர்களை தன்னகத்தே கொண்டிருக்கும் பெங்களூரு தகவல் தொழில்நுட்ப துறையில் இந்த கொரோனாவால் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
பயணங்களை தவிருங்கள்
ஏனெனில் கோவிட் -19 வைரஸால் கர்நாடாக அரசு வெளி நாடுகளுக்கு பயணங்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது. இதனால் வணிக ரீதியாக ஐடி நிறுவனங்கள் சில இடர்பாடுகளைக் மேற்கொள்ளக் கூடும். இது ஐடி நிறுவனங்களின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். மேலும் பிப்ரவரி 21 முதல் கொரோனா பாதிக்கப்பட்ட வெளிநாடுகளுக்கு சென்று வந்த ஊழியர்களின் லிஸ்டினையும் மாநில சுகாதாரத்துறை கோரியுள்ளது.
வெளி நாடுகளுக்கு போக வேண்டாம்
மேலும் ஐடி ஊழியர்களை கொரோனா தாக்கம் உள்ள நாடுகளுக்கு செல்ல வேண்டாம் எனவும், ஊழியர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டாம் எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக சீனா, ஈரான், தென் கொரியா, இத்தாலி மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளுக்கு பயணம் செயவதை மக்கள் தவிர்க்கவும் கர்நாடகாவின் சுகாதார துறை அமைச்சர் ஸ்ரீராமுலு கேட்டுக் கொண்டுள்ளார்.
பயணம் குறையலாம்
கடந்த 2019ம் ஆண்டில் மட்டும் 4.87 மில்லியன் மக்கள் பெங்களுருவியோல் இருந்து வெளி நாடுகளுக்கு பயணம் செய்துள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன. ஆக இதில் பெரும்பாலான பயணங்கள் தவிர்க்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 14% அதிகமாகும். எனினும் அது நடப்பு ஆண்டில் அது குறைய வாய்ப்புள்ளது.
பெங்களூரில் உள்ள நிறுவனங்கள்
பெங்களூருவில் இண்டெல், டெல், மைக்ரோசாப்ட், கூகுள், சாப் லேப்ஸ் உள்ளிட்ட பல பெரிய நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் அடிக்கடி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று வருவர். ஆனால் தற்போது பயணங்கள் தடை செய்யப்பட்டுள்ளதால், பெரும்பாலான வணிக நடவடிக்கைகள் பாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இன்னும் யாரெல்லாம் இருக்காங்க
இது தவிர இன்ஃபோசிஸ், விப்ரோ, அசென்சர், இண்டெல் மற்றும் இன்னும் பல டெக்னாலாஜி நிறுவனங்களும் பெங்களூரில் உள்ளன. ஆக கர்நாடக அரசு அறிவிப்பால் இவற்றில் பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள் வெளி நாடுகள் செல்வதை நிறுத்தி வைக்கலாம். ஆனால் இதன் தாக்கம் நிச்சயம் வணிகத்தில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
பாதிப்பு எவ்வளவு?
இந்த நிலையில் சில நிறுவனங்கள் தங்களது சில ஊழியர்களை வீட்டிலிருந்து பணிபுரிய அறிவுறுத்தியுள்ளதாகவும், சில நிறுவனங்கள் தங்களது கூட்டங்களை வீடியோ கான்பரன்சிங் மூலமாகவும் தங்களது பணிகளை செய்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும் இதனால் எந்தளவுக்கு பாதிப்புகள் இருக்கும் என்ற கணிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.