டெல்லி: கொரோனா வைரஸ் பரவலைத் கட்டுப்படுத்தும் நோக்கில் வரும் மார்ச் 31 வரையில் பயணிகள் ரயில் சேவையை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மக்களை பாடாய் படுத்தி வரும் கொரோனா வைரஸிலிருந்து மக்களை காக்க மத்திய மாநில அரசுகளும் தொடர்ந்து பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக பரவலை கட்டுப்படுத்த இன்று மக்கள் ஊரடங்கு கடை பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி இன்று பல ஆயிரம் ரயில் சேவைகள் கூட நிறுத்தப்பட்டிருந்தன.
இதையடுத்து தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வரும் 31 வரையில் பயணிகள் ரயில் சேவையினை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் சுமார் 13,000 பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அத்தியாவசிய தேவைகளுக்காக இயக்கப்படும் சரக்கு ரயில்கள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் ரயில்களில் பயணிப்பதன் மூலம் தொற்று அதிகரிக்கும் என்பதால், மத்திய அரசு இப்படி ஒரு முடிவினை எடுத்திருக்கலாம் என்றும் கூறபடுகிறது. இது தவிர மெட்ரோ ரயில் மற்றும் சில அதிவிரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக கொரோனா பயத்தின் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன. ஏனெனில் மக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதன் மூலம் தங்களை காத்துக் கொள்ள முடியும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் முன்னதாக 155 ரயில்கள் வரும் 31ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் முன்னதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுக்க 3,15,280 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே 13,591 பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் இந்தியாவில் 324 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து இந்தியாவில் 5 பேர் பலியாகியுள்ளனர்.
பரவி வரும் கொரோனாவினை தவிர்க்க மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள அத்தியாவசிய தேவை தவிர, மக்கள் பயனம் செய்வதை தவிர்க்க வேண்டும். இதனால் நமக்கும் நம்மை சுற்றியிருப்பவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்க முடியும். இன்றைய நாளில் மக்களின் அத்தியாவசிய போக்குவரத்து தேவையில் ஒன்றாக இருக்கும் பயணிகள் ரத்து, சற்று பொருளாதார ரீதியாக பின்னடைவை கொடுத்தாலும், கொரோனாவில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள வழிவகுக்கும். ஆக இதுவும் ஒரு நல்ல விஷயம் தான்.