கொரோனா வைரஸ் உலகிலுள்ள பெரும்பாலான மக்களை பல வழிகளில் பாதித்துக் கொண்டு இருக்கிறது
அதிலும் குறிப்பாக மாத சம்பளம் வாங்கு சம்பள ஏழைகளை, எகத்தாலமாக மிரட்டிக் கொண்டு இருக்கிறது இந்த கொடிய கொரோனா வைரஸ்.
அடுத்த சில மாதங்களில் ஏற்கனவே பார்த்துக் கொண்டிருக்கும் வேலை இருக்குமா? பார்த்த வேலைக்கு சம்பளம் கையில் கிடைக்குமா என எல்லோரும் பதறிக் கொண்டு இருக்கிறார்கள்.
உழைப்புக்கு என்ன விலை
ஆனால் ஒரு சிலரோ, இந்த வருடம், நிறுவனத்துக்கு அவ்வளவு உழைத்துக் கொடுத்தேன், இவ்வளவு ரூபாய் லாபம் ஈட்டிக் கொடுத்தேன், எப்படியும் ஒரு 10,000 சம்பள உயர்வு கிடைக்கும், டீம் லீடர் ஆகிவிடலாம் என்று எல்லாம் கனவில் மிதந்து கொண்டு இருந்தவர்களுக்கு எல்லம் பெரிய இடியை இறக்கி இருக்கிறது இந்த கொரோனா வைரஸ்.
சம்பள உயர்வு
இது ஏப்ரல், மே மாதங்கள் என்பதால், பொதுவாகவே, ஊழியர்கள் தங்களின் சம்பள உயர்வுக்காக காத்திருப்பார்கள். இந்த கொரோனா வைரஸ் வந்ததினால் சம்பள உயர்வா? அப்படின்னா? என்று கேட்கும் அளவுக்கு நிலைமை மோசமாகி இருக்கிறது. இதில் இந்தியாவின் மிகப் பெரிய ஐடி கம்பெனிகளில் ஒன்றான இன்போசிஸ் நிறுவனமும், இந்த பட்டியலில் இணைந்து இருக்கிறது.
நோ புரோமோஷன்
கொரோனா வைரஸின் தாக்கத்தினால், தற்போது இன்போசிஸ் நிறுவன ஊழியர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு போன்ற நல்ல காரியங்களை எல்லாம் சஸ்பெண்ட் செய்து இருக்கிறது இன்ஃபோசிஸ் நிர்வாகம். கடந்த ஒரு வருட காலமாக உழைத்த உழைப்புக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு எதிர்பார்த்த ஊழியர்களுக்கு எல்லாம் மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது இந்த நடவடிக்கை.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்
இன்போசிஸ் நிறுவனம் இப்படி தன் ஊழியர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுகளை எல்லாம் சஸ்பெண்ட் செய்வதற்கு முன்பே இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம், தன் ஊழியர்களுக்கு சம்பள உயர்வுகளை நிறுத்தி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சொன்னதை செய்வோம்
இன்போசிஸ் நிறுவனம் தன் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு & ப்ரொமோஷன்களைக் கொடுக்கவில்லை என்கிற வருத்தமான செய்தி ஒரு பக்கம் வந்தாலும், மறு பக்கம், வேலைக்கு தேர்வு செய்திருக்கும் அத்தனை பேரையும் வேலையில் எடுத்துக் கொள்ள இருப்பதாகச் சொல்லி நல்ல பெயர் எடுத்து இருக்கிறது.
டிசிஎஸ் 40,000
இன்போசிஸ் நிறுவனம், வேலைக்கு தேர்வு செய்தவர்களை எல்லாம், வேலையில் சேர்த்துக் கொள்வதாகச் சொல்வதற்கு முன்பே, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம், தான் தேர்வு செய்த 40,000 பேரையும் வேலையில் சேர்த்துக் கொள்ள இருப்பதாக சொன்னதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
வாழ்த்துக்கள்
இந்தியாவின் இரு பெரிய ஐடி கம்பெனிகளும், தங்கள் ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வுகளைக் கொடுக்கவில்லை என்பதும் வருத்தம் தான். இருப்பினும், வேலைக்கு தேர்வு செய்தவர்களை வேலையில் சேர்த்துக் கொள்வதும் ஒரு வித ஆறுதலாக இருப்பது குறிப்பிடத்தக்கது.