டெல்லி: இந்திய மருத்துவ சந்தை சர்வதேச அளவில் கணிசமான இடத்தினை கொண்டுள்ள நிலையில், இந்தியாவில் கிட்டதட்ட 300 தொடவுள்ள கொரோனா தாக்கத்தினால், போதிய மருந்துகள் இருப்பு உள்ளதா? இந்தியா எப்படி இதனை சமாளிக்க போகிறது என்ற பல கேள்விகள் எழுகின்றன.
அதிலும் தற்போது இந்தியாவில் 283 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் 4 பேர் தாக்கம் இறந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இது இப்படி இருக்கையில் நாளுக்கு நாள் இதன் தாக்கம் கூடிக் கொண்டே செல்லும் நிலையில், இன்னும் எத்துனை பேரை இந்த வைரஸ் தாக்கும். சீனா அமெரிக்கா போன்ற முன்னணி நாடுகளே அரண்டு போயுள்ள நிலையில், இந்தியா எப்படி இதனை எதிர்கொள்ள போகிறது என்ற பல கேள்விகள் எழுகின்றன.
பல கேள்விகள்
அதிலும் இந்தியா, சீனாவினைப் போல் 10 நாளில் புதிய மருத்துவமனையைத் கட்டத்தான் முடியுமா? சரி சீனாவினைப் போல் மருந்து உற்பத்தியில் ஆவது முன்னிலையில் இருக்கிறோமா? மருந்துகள் போதிய அளவில் இருப்பு இருக்கின்றனவா? எப்படி இந்த நெருக்கடி நிலையை எதிர்கொள்ள போகிறோம் என்ற பல ஆயிரம் கேள்விகள் நம்முள் எழுகின்றன.
போதிய இருப்பு உள்ளது
ஆனால் இதற்கெல்லாம் பதில் சொல்லும் வகையில், இந்திய மருந்து சந்தையில் 57% பங்கினைக் கொண்ட, 24 முக்கிய உள்நாட்டு மருந்து நிறுவனங்களின் குழுவான இந்தியன் பார்மாசூட்டிகல் அலையன்ஸ் (Indian Pharmaceutical Alliance) சங்கம், போதுமான அளவு செயலில் உள்ள மருந்து பொருட்கள் இருப்பிடம் நம்மிடம் உள்ளதாக தெரிவித்துள்ளது.
சப்ளை செய்ய முடியும்
மேலும் அடுத்து வரும் மாதங்களுக்கு மருந்து போதிய அளவில் சப்ளை செய்து கொள்ள முடியும் என்றும் மருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து வெளியான செய்தியில், இந்தியன் பார்மாசூட்டிகல் அலையன்ஸ் இந்தியாவிலும் உலக அளவிலும் உள்ள நோயாளிகளுக்கு போதிய அளவு மருந்து கிடைப்பதை உறுதி செய்வதற்காக மாநில அரசுகள், இந்திய மருந்துச் தொழில் சங்கங்கள், மற்றும் மருந்து விநியோக சங்கிலியில் முக்கிய பங்குதாரர்கள் உள்ளிட்டவர்களுடனும், இந்திய அரசாங்கத்துடனும் நாங்கள் இணைந்து பணியாற்றி வருகிறோம்.
கவலை வேண்டாம்
மேலும் எங்களது உறுப்பினர்கள் ஆர்டர்களையும், மருந்துகளின் சரக்கு இருப்புகளையும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர் என்று தெரிவித்துள்ளது. ஆக நாங்கள் எந்தவொரு மருந்து பற்றாக்குறையையும் எதிர்கொள்ளவில்லை. ஆக மக்கள் கவலை கொள்ளத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளது அந்த அமைப்பு.