உலகின் மிகப் பிரபலமான தொழில் அதிபர்களில் ஒருவரான எலன் மஸ்கின் நிறுவனம் தான் டெஸ்லா. அமெரிக்காவின் எலக்ட்ரிக் வாகன நிறுவனமான டெஸ்லா, சர்வதேச அளவில் எலக்ட்ரிக் வாகன பிரிவில் முக்கிய பங்கு வகித்து வருகிறது என்றால் அது மிகையகாது.
அதிலும் இன்றைய காலத்தில் பல இந்தியர்களுன் விருப்பமான தேர்வுகளில் ஒன்றாக உள்ளது டெஸ்லா. ஏனெனில் இதற்கென எரிபொருள் செலவு அதிகம் இல்லை. ஆனால் உலகின் மற்ற சொகுசு கார்களின் வசதிகள் அனைத்தும் இதில் உள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்கா தொழிற்சாலையில் இருந்து மட்டுமே வாகனங்களைத் தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்து வந்த டெஸ்லா, கடந்த ஆண்டின் இறுதியில் இருந்து சீனாவில் அமைக்கப்பட்ட புதிய தொழிற்சாலையில் இருந்தும் உற்பத்தியை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் பாதிப்பு
உலகம் முழுக்க தனது ருத்ர தாண்டவத்தை ஆடி வரும் கொரோனாவின் தாக்கம் உலகின் பல நாடுகளுக்கு பரவி வருகிறது. அதிலும் உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவிலும் மிகவேகமாக பரவி வரும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில் இதுவரை 26,892 பேர் தாக்கம் அடைந்துள்ளனர். இதனையடுத்து 348 பேர் பலியாகியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
பாதுகாப்பு நடவடிக்கை
இந்த நிலையில் அமெரிக்காவிலும் பல விதமான தடுப்பு நடவடிக்கைகளும், பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக பல நாடுகளுக்கு பயண சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் பல நிறுவனங்கள் தொழில் சாலைகள் என மக்கள் அதிகமாக கூடும் இடங்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளன.
கலிப்போர்னியா ஆலை மூடல்
இதனால் பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்து பணிபுரிய கூறி வருகின்றன. இப்படி ஒரு நிலையில் தான் நெருக்கடியை ஒப்புக் கொண்ட டெஸ்லா நிறுவனம் தனது கலிப்போர்னியா ஆலையை மார்ச் 23 அன்று மூடுவதாக உத்தரவிட்டுள்ளது. மற்ற நிறுவனங்களும் தொழில்சாலைகளும் மூடப்பட்ட நிலையில் டெஸ்லா நிறுவனம் மூடப்படாததால், பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. இதையடுத்து இப்படி ஒரு அறிவிப்பு வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இது அத்தியாவசிய வணிகம் அல்ல
மேலும் இது ஒரு அத்தியாவசியமான வணிகம் அல்ல என்று சுகாதார அதிகாரிகள் தரப்பிலும் கூறப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அதன் கலிப்போர்னியா தொழில் சாலையில் மருத்துவ வெண்டிலேட்டர்களை உருவாக்கவும் அவர் முன் வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.