பெர்லின்: கொரோனா வைரஸ், சாதி மத பேதம், நாடுகள் கண்டங்கள், ஏழை பணக்காரன் என எதையும் கண்டு கொள்ளாமல் உலகம் முழுக்க சமத்துவமாக பரவிக் கொண்டு இருக்கிறது.
உலகம் முழுக்க சுமார் 2 லட்சம் பேர் இந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள், சுமார் 8,270 பேர் மரணமடைந்து இருக்கிறார்கள்.
ஆனால் கொரோனாவில் கோர தாண்டம் ஓய்ந்ததாகத் தெரியவில்லை. இப்போது மெல்ல தனி மதர்களையும், அவர்களின் வாழ்வாதாரங்களையும் தாக்கத் தொடங்கி இருக்கிறது.
சீனா உதாரணம்
கடந்த ஜனவரி 2020 மற்றும் பிப்ரவரி 2020 இரண்டு மாத காலத்தில் நடந்த சில்லறை விற்பனையை, 2019 ஜனவரி பிப்ரவரி மாதங்களுடன் ஒப்பிட்டால் சுமார் 20.5 % வியாபாரம் சரிந்து இருக்கிறது. அதே போல தொழில் துறை உற்பத்தியும் சுமார் 13.5 % சரிந்து இருக்கிறது. அவ்வளவு ஏன் நிரந்தர சொத்துக்களில் செய்யப்படும் முதலீடுகள் கூட 25 % சரிந்து இருக்கிறதாம். இப்போதைக்கு சீனா உடனடியாக எழுந்து வரும் என்கிற நம்பிக்கை இல்லை.
மற்ற நாடுகள்
சீனாவைப் போலத் தான் மற்ற எல்லா நாடுகளுக்கும் உற்பத்தி தொடங்கி வீட்டில் சேவைத் துறை வரை, பொருளாதாரம் அடி வாங்கிக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால் இனி விழ இருக்கும் அடிகள், வியாபாரிகள் மீது மட்டும் விழாது. நம்மைப் போன்ற வெகுஜன மக்கள் மீதும் விழும் என்பது தான் வருத்தமான உண்மை.
வேலை பறி போகலாம்
இந்த கொடூரமான கொரோனா வைரஸால், உலக அளவில் ஒரு பொருளாதார நெருக்கடி உருவாகலாம். இந்த பொருளாதார நெருக்கடியால் சுமாராக 25 மில்லியன் (2.5 கோடி வேலை வாய்ப்புகள் அழியலாம்) எனச் சொல்லி இருக்கிறது சர்வதேச தொழிலாளர் அமைப்பு (International Labour Organisation).
2008 - 09
கடந்த 2008 - 2009 பொருளாதார நெருக்கடி காலங்களில், சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த கொள்கை முடிவுகளைக் கொண்டு வந்தது போல, இப்போது தக்க நடவடிக்கைகளை எடுத்தால், வேலை இல்லா திண்டாட்டத்தை கணிசமாக குறைக்க முடியும் எனச் சொல்லி இருக்கிறது சர்வதேச தொழிலாளர்கள் அமைப்பு.
அழைப்பு
பணி இடங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களைப் பாதுகாப்பது, பொருளாதாரத்தை ஊக்குவிப்பது, வேலை மற்றும் வருமானத்துக்கு உதவுவது போன்றவைகளுக்கு, உடனடியாகவும், பெரிய அளவிலும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை எடுக்க சர்வதேச தொழிலாளர் அமைப்பு அழைப்பு விடுத்து இருக்கிறது. இன்னும் இந்த கொரோனா என்ன கொடுமை எல்லாம் செய்யப் போகிறதோ தெரியவில்லையே..?