கொரோனா வைரஸுக்கு எதிராக பல நாடுகளும் கோடிக் கணக்கில் பணத்தை வாரி இறைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அந்த வரிசையில் தற்போது இந்தியாவும் இணைந்து இருக்கிறது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சுமாராக 1.7 லட்சம் கோடி ரூபாய்க்கு பிரதான் மந்திரி கரீப் கல்யான் யோஜனா திட்டத்தை விளக்க இருக்கிறார்.
இன்சூரன்ஸ்
இந்த பிரதான் மந்திரி கரீப் கல்யான் யோஜனா திட்டத்தின் கீழ் நேரடி பணப் பரிமாற்றங்களும் உண்டாம். அதோடு ஒவ்வொரு சுகாதாரத் துறை பணியாளருக்கும் (Health workers) 50 லட்சம் ரூபாய் வரைக்குமான மருத்துவ இன்சூரன்ஸ் வழங்க இருக்கிறார்களாம்.
அரிசி கோதுமை
சுமார் 80 கோடி மக்கள் இந்த பிரதான் மந்திரி கரீப் கல்யான் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் வருவார்களாம். இந்த திட்டத்தின் கீழ் இருக்கும் ஒவ்வொருவருக்கும் 5 கிலோ அரிசி அல்லது கோதுமை இலவசமாக வழங்க இருக்கிறார்களாம். இது வழக்கமாக வழங்கப்படும் ரேஷன் பொருட்கள் இல்லாமல் கூடுதலாக வழங்கப்படுவதாம்.
பருப்பு
இது போக பிரதான் மந்திரி கரீப் கல்யான் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் ஏதாவது ஒரு வகை பருப்பும் ஒரு கிலோ, அடுத்த 3 மாதங்களுக்கு தர இருக்கிறார்களாம். இவைகளை இரண்டு தவணைகளாக திட்டத்தின் கீழ் இருப்பவர்கள் எடுத்துக் கொள்ளலாம் என்றார் நிதி அமைச்சர்.
6000 ரூபாய்
இந்தியாவின் முதுகு எலும்பாக இருக்கும் விவசாயிகளுக்கு பிரதான் மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் 6000 ரூபாய் வழங்கப்படுகிறது. தற்போது முதல் தவணையை கொடுத்துக் கொண்டு இருக்கிறார்களாம். இதனால் சுமாராக 8.69 கோடி விவசாயிகள் பயன் அடைவார்கள் என்றார் நிர்மலா சீதா ராமன்.
ஊரக வேலை வாய்ப்புத் திட்டம்
மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் இருக்கும் 5 கோடி குடும்பங்களுக்கு கூலியை உயர்த்தி இருக்கிறார்களாம். இதனால் ஒரு வேலையாளுக்கு 2000 ரூபாய் வருமானம் அதிகரிக்குமாம்.
நேரடி பணப் அரிமாற்றம்
அரசே நேரடியாக பணத்தை பரிமாற்றம் செய்யும் வேலை 8 பாகங்களாக நடைபெறும் எனச் சொல்லி இருக்கிறார் நிதி அமைச்சர். விவசாயிகள்,
ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் இருப்பவர்கள், விதவைகள், ஏழை பென்ஷன்தாரர்கள், திவ்யாங் (மாற்றுத் திறனாளிகள்),
ஜன் தன் திட்டத்தின் கீழ் இருக்கும் பெண்கள், உஜ்வாலா திட்டத்தின் கீழ் இருக்கும் பெண்கள் மற்றும் குடும்பத்தினர்கள்,
சுய உதவிக் குழுவினர்கள், EPFO கீழ் இருக்கும் அமைப்பு சார்ந்த தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள்.
1000 ரூபாய்
வயதான ஏழை எளிய குடிமக்கள், தங்கள் கணவர்களை இழந்த விதவை பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் (திவ்யாங்க் என்று ஹிந்தியில் சொல்கிறார்கள்) அடுத்த மூன்று மாதங்களுக்கு 1,000 ரூபாய் பெறுவார்கள் எனச் சொல்லி இருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
கேஸ் & 500 ரூபாய்
இந்தியாவில் வறுமை கோட்டுக்குக் கீழ் வாழும் 8.3 கோடி குடும்பங்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு இலவசமாக எல் பி ஜி கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படுமாம். ஜன் தன் கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு மாதம் 500 ரூபாய் வழங்க இருக்கிறார்களாம்.
சுய உதவிக் குழு கடன்
அதோடு இந்தியா முழுமைக்கும் இருக்கும், 63 லட்சம் பெண்கள் சுய உதவிக் குழுவுக்கு இதுவரை சொத்து பத்துக்கள் மற்றும் வங்கியில் பிணை இல்லாமல் 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கி வந்தார்கள். இனி 20 லட்சம் ரூபாய் வரை கடன் கொடுக்க இருக்கிறார்களாம்.
பி எஃப்
சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் 12 % பி எஃப் (ஊழியர் பங்கு + முதலாளி பங்கு) இரண்டுமே அடுத்த 3 மாதங்களுக்கு வழங்கப்படுமாம். இந்த அறிவிப்பு எல்லா நிறுவனங்களுக்கும் பொருந்தாது. 100 ஊழியர்களுக்கு கீழ் இருக்கும் கம்பெனிகளில், 90 சதவிகிதம் ஊழியர்கள் மாதம் 15,000 ரூபாய்க்கு கீழ் சம்பளம் வாங்குபவர்களாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட கம்பெனிகளில் வேலை பார்ப்பவர்களுக்குத் தான் பி எஃப் தொகையை மத்திய அரசு வழங்கும்.
கட்டுமான தொழிலாளர்கள்
கட்டிட மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கு என்று தனி நிதி இருக்கிறது. அந்த நிதியின் பெயர் Buildings and Other Construction Workers' Fund. அந்த நிதியை கொடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறார்களாம். எனவே விரைவில் அந்த நிதியும் வெளியே வரும் என எதிர்பார்க்கலாம்.
மருத்துவ செலவுகள்
அதே போல கொரோனா வைரஸ் தொடர்பான மருத்துவ பரிசோதனைகள், மருத்துவ மையங்கள் போன்ற மருத்துவ செலவுகளுக்கு, மாவட்ட மினரல் நிதியில் (District Mineral Fund) இருந்து செலவழித்துக் கொள்ளலாம் எனச் சொல்லி இருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமன்.