நாட்டில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் ஏற்கனவே 21 நாள் லாக்டவுன் செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியா முழுவதும் முடங்கி போயுள்ளது.
அத்தியாவசியம் தவிர அனைத்து தொழில்சாலைகள், நிறுவனங்கள், சேவை நிறுவனங்கள் என அனைத்தையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனால் பெரும்பாலான துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்ட துறைகளில் உணவு துறையும் ஒன்று.
உணவு துறை பாதிப்பு
எப்படி எனில் NRAI மதிப்பீட்டின் படி, 5,00,000 உறுப்பினர்கள் 80,000 கோடி ரூபாய் வரை இழக்கக்கூடும் என்றும் மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில் அவர்கள் 100 நாட்களுக்கு மேல் வாடகை மற்றும் பராமரிப்பு கட்டணங்களை கைவிடுமாறும் மால்கள் மற்றும் நில உரிமையாளர்களிடம் கேட்டுக் கொள்கின்றனர். அதாவது ஜூன் இறுதி வரை இதனை செயல்படுத்த உணவக உரிமையாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
குத்தகை
இது எந்தளவுக்கு கைகொடுக்கப் போகிறது என்று தெரியவில்லை. ஏனெனில் நாட்டில் உள்ள 90% உணவகங்கள் குத்தகைக்கு தான் இயக்கப்படுகின்றன. இதில் சுமார் மால்களில் மட்டும் சுமார் 20% உணவகங்கள் அமைந்துள்ளன. மீதமுள்ளவை உயர் தெருக்களிலும், முக்கிய வணிகப்பகுதிகளிலும் உள்ளன. மேலும் வடிவமைப்பை பொறுத்து உணவகங்கள் தங்கள் வருமானத்தில் 15 - 30% வரை வாடகையை செலுத்துகின்றன.
கூடுதல் கட்டணம்
மால்களில் உள்ள சில உணவகங்கள் கூடுதலாக கேம் (CAM) 5 - 6% கூட செலுத்த வேண்டியிருக்கும். 3000 சதுர அடி கொண்ட விற்பனை நிலையத்துக்கு CAM செலவுகள் 2.5 லட்சம் ரூபாய் அவரை அதிகமாக இருக்கும்,. இருப்பினும் குத்தகை செலவு என்பது ஒரு உணவகத்திற்கான ஊதியம் மற்றும் எரிசக்தி செலவுகள் தவிர, மிகப்பெரிய நிலையான செலவுகள் என மொத்த செலவுகளில் 20 -25% உள்ளது.
விருப்பமான செலவு
மக்கள் வெளியே உணவகங்களில் சாப்பிடுவதை மிக விருப்பமான செலவாகக் கருதப்படுகிறது. ஆனால் தற்போது நிலவி வரும் பொருளாதார மந்த நிலைக்கு மத்தியில், உணவகங்களுக்கு மக்கள் வருவதை குறைத்துள்ளனர். இதோடு உணவு டெலிவரி நிறுவனங்களும் தங்களது உணவுகளை டெலிவரி செய்வதை குறைத்துள்ளன.
உணவகங்கள் மூட வாய்ப்பு
இந்த நிலையில் நாட்டில் இன்னும் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கும் நிலையில் தற்போது செய்யப்பட்டுள்ள லாக்டவுன் நீட்டிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 50% உணவகங்கள் மூட வாய்ப்புள்ளது. இதனால் ஸ்விக்கி, சோமேட்டோ நிறுவனங்கள் தங்களது உணவு டெலிவரி வர்த்தகத்தில் மேலும் பிரச்சனையை சந்திக்க கூடும். ஏற்கனவே 10% வர்த்தகத்தினை மட்டுமே செய்கிறார்கள். இந்த நிலையில் இது மேலும் மோசமான நிலையை உருவாக்க கூடும்.
ஆபத்தில் உள்ள வேலைகள்
இதெல்லாவற்றையும் விட இத்துறையில் பணி புரியும் மக்களும் வேலையிழக்கும் அபாயம் நிலவி வருகிறது. உணவகங்கள், டெலிவரி என இத்துறையில் சுமார் ஆரம்பத்தில் 1.5 மில்லியன் பேர் தங்களது வேலையினை இழக்கக்கூடும். எனினும் இத்துறையில் சுமார் 7.3 மில்லியன் மக்களின் வேலை ஆபத்தில் தான் உள்ளது.