மும்பை: மும்பை நாக்பூர் மற்றும் யவத்மாலில் புதிய வழக்குகள் கண்டறியப்பட்ட பின்னர், மகாராஷ்டிராவில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வழக்குகள் எண்ணிக்கை சனிக்கிழமையோடு 26 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் அம்மாநிலத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் தோப், சனிக்கிழமையன்று மாநிலம் முழுவதும் உள்ள மால்கள், வணிக வளாகங்கள் என அனைத்தும் மூடப்படும் என்றும் அறிவித்திருந்தார்.
எனினும் மக்களின் அடிப்படை தேவையான மளிகை பொருட்களினை விற்கும் அடிப்படை மளிகை கடைகள் திறந்திருக்கும் என்றும் கூறியுள்ளார்.
மால்கள் மற்றும் பலவற்றை மூட உத்தரவு
இந்த நிலையில் பள்ளிகள், கல்லூரிகள், நகராட்சிகள், பஞ்சாயத்துக்கள் உள்பட அனைத்தும் மார்ச் 31 வரை மூடப்பட வேண்டும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் தற்போது முதல் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்புகள் வரையில் தேர்வுகள் நடத்தப்பட்டால், அவற்றை தள்ளிவைக்கும் படியும், அட்டவணைப்படி 10 மற்றும் 12 வகுப்புகளுக்கு மட்டும் தேர்வுகளை நடத்தவும் தோப் கூறியுள்ளார்.
வெளிநாடுகளில் திரும்பியவர்
மும்பையில் கடந்த சனிக்கிழமையன்று நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர்கள் கஸ்தூர்பா மருத்துவமனையில் அனுமதிக்க்கப்பட்டுள்ளனர். அவர்களின் உடல் நிலை சீராக உள்ளது என்றும் பிஎம்சி இயக்குனர் சுகாதார தஷா ஷா தெரிவித்துள்ளார். முன்னதாக சமீபத்தில் துபாயில் இருந்து திரும்பிய இருவருக்கே கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
பலருக்கு பாதிப்பு
இதுவரையில் இம்மாநிலத்தில் புனேவில் 10 பேரும், மும்பையில் எட்டு பேரும், நாக்பூரில் 4 பேரும்., யவத்மாலில் 2 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தானே மற்றும் அகமது நகரில் தலா ஒருவருக்கும் கொரோனா தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களை விசாரித்த போது அமெரிக்கா, துபாய் பிரான்ஸ், பிலிப்பைன்ஸ் மற்றும் கத்தாரிலிருந்து வந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
பீதியடைய வேண்டாம்
எனினும் மக்கள் இது குறித்து யாரும் பீதியடைய வேண்டாம். ஏனெனில் நீங்கள் ஒரு வேளை வெளி நாட்டிலிருந்து திரும்பியிருந்தால், உடனடியாக மருத்துவமனையை அணுகி பரிசோதனை செய்து கொள்ளுங்கள். மேலும் எந்த அறிகுறியும் இல்லையென்றாலும் கூட 14 நாட்கள் தனிமையில் இருங்கள் என்றும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
திரையரங்குகளும் மூடல்
இதே போல கொரோனா வைரசை தொற்றுநோய் என்று உத்தரகாண்ட் அரசாங்கம் அறிவித்துள்ளது. மேலும் உத்தரகாண்டில் அனைத்து திரையரங்குகள் மற்றும் கல்லூரிகள் வருகிற 31ந்தேதி வரை மூடப்படுவதாகவும் அறிவித்துள்ளது. எனினும், மருத்துவ கல்லூரிகள் தொடர்ந்து திறந்திருக்கும் என உத்தரகாண்ட் மந்திரி மதன் கவுசிக் அறிவித்துள்ளார்.