கொரோனாவின் தாக்கம் இன்று உலகம் முழுவதும் பல நாடுகளில் இருந்து வந்தாலும், இந்தியாவில் மிக மோசமான பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது. பலி எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகின்றது. இது இன்னும் மிக மோசமாகலாம் எனவும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இதனை இன்னும் மோசமாக்கும் விதமாக ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருந்து தட்டுப்பாடு, போதிய மருத்துவமனை வசதிகள் என பலவும் மக்களை பாடாய்படுத்தி வருகின்றன.
இதனால் பலரும் இந்தியாவுக்கு இது மிக மோசமான காலமே என எச்சரித்து வருகின்றனர். இது ஒரு புறம் எனில் நிதி நெருக்கடி, பணவீக்கம், ஜிடிபி குறித்த கவலைகளும் அச்சுறுத்தி வருகின்றன.
மிகப்பெரிய சவால்
இதற்கிடையில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், சுதந்திர போராட்டத்திற்கு இந்தியா சந்திக்கும் மிகப்பெரிய சவால் என்று கூறியுள்ளார். இது குறித்து வெளியான அறிக்கையில், சுதந்திர போராட்டத்திற்கு பிறகு இந்தியா சந்தித்த மிகப்பெரிய சவால்களில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றாகத் தான் இருக்கும்.
பொருளாதார சரிவு
சிகாகோ பல்கலைகழகத்தின் சார்பில் நடந்த கூட்டத்தில் பேசியபோது, கொரோனாவின் முதல் கட்ட தாக்கத்தின்போதே இந்தியாவில் மிக பெரிய பொருளாதார சரிவு ஏற்பட்டது. தற்போது இரண்டாம் கட்ட தாக்கம் என்பது பொருளாதார ரீதியிலும், மக்களுக்கும் பல சவால்களை கொடுத்துள்ளது. தினசரி 3 லட்சத்திற்கும் அதிகமான பாதிப்புகள் உள்ளன. இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.
மக்களுக்கு போதிய உதவி கிடைக்கவில்லை
கொரோனா மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது. மகாராஷ்டிரா அரசால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஆக்சிஜனை கொடுக்க முடியவில்லை. பல்வேறு இடங்களில் மக்களுக்கு உதவ முடியவில்லை. கொரோனா தொற்று முடிந்தவுடன் நாம் சமூகத்தினை நோக்கி கேள்வி கேட்காவிட்டால், இது மிகப்பெரிய பிரச்சனையை நம்மிடம் விட்டு செல்லும்.
திவால் நடவடிக்கை
இந்த பெருந்தொற்று அனைவரையும் ஒன்று சேர்த்துள்ளது. யாரும் தனித்து விடப்படவில்லை. நாட்டில் சீர்திருத்தம் என்பது மறைமுகமாக இருக்காமல் நேரடியாக இருக்க வேண்டும். மேலும் சிறு குறு நடுத்தர துறைகளுக்கு விரைவாக திவால் செயல்முறையை அரசு அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதோடு பேச்சு சுதந்திரம், விமர்சிக்கும் சுதந்திரம் நமக்கு அவசியம். 21ம் நூற்றாண்டு இது நம்மை தயார்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.