கொரோனா இப்படியே பரவினால், அடுத்த சில ஆண்டுகளில் மனித இனத்தில் ஒரு பெரும் பகுதியே காணாமல் போகலாம் என்கிறார்கள்.
மறு பக்கம், கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட கார்ப்பரேட் நிறுவனங்கள் தொடங்கி குட்டி குட்டி கம்பெனிகள் வரை தங்களால் முடிந்தவைகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இப்போது டாடா ட்ரஸ்ட் மீண்டும் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு கொரோனா போராட்ட களத்தில் இறங்கி இருக்கிறது.
500 கோடி
டாடா ட்ரஸ்ட் அமைப்பு 500 கோடி ரூபாயை இந்த கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் செலவழிக்க இருப்பதாகச் சொல்லி இருக்கிறது. இதற்கு முன்பே, டாடா குழும நிறுவனங்கள், அடுத்த சில மாதங்களுக்கு, தன் ஊழியர்கள், தற்காலிக பணியாளர்கள் மற்றும் ஒப்பந்ததார்களுக்கு முழு பேமெண்டைக் கொடுப்பதாகச் சொன்னது குறிப்பிடத்தகக்து
என்ன செய்யப் போகிறார்கள்
இந்த 500 கோடி ரூபாயில், மருத்துவமனைகளில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து சிகிச்சை கொடுக்கும் ஊழியர்களை பாதுகாக்கும் உபகரணங்கள், respiratory systems, கொரோனா வைரஸ் சோதனை கிட்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கு என்று சிகிச்சை மையங்கள், சுகாதார ஊழியர்களை பயிற்றுவிப்பது என பல விஷயங்களுக்கு செலவழிக்க இருக்கிறார்களாம்.
ரத்தன் டாடா
"இந்தியா மற்றும் உலக அளவில் நிலைமை மோசமாக இருக்கிறது. இதற்கு உடனடி நடவடிக்கைகள் தேவை. நாட்டுக்குத் தேவையான நேரங்களில் டாடா ட்ரஸ்ட் மற்றும் டாடா குழும நிறுவனங்கள் உதவி இருக்கின்றன. முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது தேவை அதிகரித்து இருக்கிறது. " என உருக்கமாகப் பேசி இருக்கிறார் ரத்தன் டாடா.
கடுமையான சவால்
மேலும் "இந்த இக்கட்டான சூழலில், கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட, அவசியத் தேவைகளை உடனடியாக களம் இறக்க வேண்டும் என நம்புகிறேன். இந்த கொரோனா வைரஸ், மனித இனம் சந்திக்கும் மிகப் பெரிய மற்றும் மிக கடுமையான சவாலாக இருக்கும்" எனச் சொல்லி இருக்கிறார் ரத்தன் டாடா.
ஏழை எளிய மக்கள்
டாடா ட்ரஸ்ட், டாடா குழுமம் மற்றும் டாடா குழும கம்பெனிகள் லோக்கல் பார்ட்னர்கள், உலக பார்ட்னர்கள் மற்றும் அரசுகளுடன் இணைந்து கொரோனாவுக்கு எதிராக போராடிக் கொண்டு இருக்கிறார்களாம். இந்த குழு, ஏழை எளிய மக்களுக்கு உதவ இருப்பதாக டாடா தரப்பிலிருந்து வெளி வந்த ஸ்டேட்மெண்ட் சொல்லி இருக்கிறது.