டெல்லி: இந்தியாவில் நிலவி வந்த மந்த நிலைக்கு மத்தியில் கடந்த ஆண்டே வாகனத் துறையானது படு வீழ்ச்சி கண்டது. இதனால் லட்சக்கணக்கானோர் தங்களது வேலையினை இழந்துள்ளனர்.
இந்த நிலையில் நடப்பு ஆண்டிலும் வாகன உற்பத்தியானது 8.3% குறையலாம் என பிட்ச் சொல்யூசன்ஸ் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
இதற்கு காரணம் சீனாவில் தோன்றியுள்ள கொரோனா வைரஸ் என்றும் கூறப்படுகிறது.
உற்பத்தி நிறுத்தம்
ஏனெனில் சீனாவிலுள்ள ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தொற்றுதலுக்கு பயந்து தங்களது உற்பத்தியை நிறுத்தியுள்ளன. மேலும் மக்களும் ஒன்று கூடும் இடங்களை தவிர்க்குமாறு அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளதோடு, இவ்வாறு கட்டுப்படுத்தினால் தான் இந்த வைரஸ் பரவல் கட்டுப்படும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதே போன்று இந்தியாவில் இருந்தால் இதே கொள்கையை இந்தியாவும் பின்பற்றலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்தியாவில் பாதிப்பு மிகப்பெரியதாக இருக்கும்
ஆனால் சீனாவினைப் போன்று, இந்தியாவில் சுகாதார பாதுகாப்பு முறை ஒரு பெரிய அளவிலான தொற்று நோயை சமாளிக்க போதுமானதாக இல்லை. ஆக ஆட்டோமொபைல் துறையில் ஏற்படும் பாதிப்பும் மிகப்பெரியதாக இருக்கும் என்றும், ஏனெனில் சீனாவுடன் ஒப்பிடும்போது இந்த வைரஸ் நாட்டில் மிக வேகமாக பரவக்கூடும் என்றும் பிட்ச் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
பற்றாக்குறை ஏற்படலாம்
மேலும் இந்தியாவுக்கு மிகப்பெரிய அளவில் வாகன உதிரிபாகங்களை சீனாவில் இருந்து வழங்கப்படுவதால், சீனாவில் இருந்து இறக்குமதி குறைந்துள்ள நிலையில், இந்தியாவில் இது ஒரு பற்றாக்குறையை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது வாகன உற்பத்தியாளர்கள் தங்கள் வாகனங்களை மெதுவாகவோ அல்லது உற்பத்தியை நிறுத்தவோ கட்டாயப்படுத்தலாம்.
உற்பத்தி வீழ்ச்சி
மேற்கண்டதன் விளைவாக இந்தியாவில் 2020ம் ஆண்டில் வாகன உற்பத்தியானது 8.3% வீழ்ச்சி காணும் என்று மதிப்பிட்டுள்ளதாக பிட்ச் நிறுவனம் கூறியுள்ளது. இது கடந்த 2019ம் ஆண்டில் 13.2% ஆக குறைந்ததாக கூறப்படுகிறது. மேலும் புதிய வாகனங்களுக்கான தேவை 2020ம் ஆண்டில் பலவீனமாக இருப்பதால் வாகன உற்பத்தி மேலும் குறையும் என்று நம்புவதாக பிட்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பட்ஜெட் கொள்கைகள் ஏற்றம் அளிக்கலாம்
இந்தியாவுக்கு தேவையான வாகன உதிரி பாகங்களில் 10 -30% சீனா தான் வழங்குகிறது. மேலும் எலக்ட்ரானிக் வாகன பிரிவை பார்க்கும் போது இதில் இரண்டு மூன்று மடங்கு அதிகம் என்றும் கூறப்படுகிறது. எனினும் 2020 பட்ஜெட்டில் எலக்ட்ரானிக் வாகனங்களுக்கு முன் வைக்கப்பட்ட கொள்கைகள், எலக்ட்ரானிக் வாகன உற்பத்தி அதிகரிப்புக்கு வழிவகுக்கலாம் என்று பிட்ச் நம்புவதாகவும் தெரிவித்துள்ளது.