சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது அனைவரது கனவாக இருந்தாலும் இது பலருக்கு சாத்தியப்படுவதில்லை.
கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய சேமிப்பு மட்டுமே சொந்த வீடு வாங்குவதற்கான இலக்கை அடைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வகையில் 19 வயது இளம்பெண் தனது காதலருடன் டேட்டிங் செல்வதற்கு பதிலாக பொறுப்புடன் இருந்து சொந்த வீடு வாங்கியுள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
சொந்த வீடு கனவு
தற்போதைய பொருளாதார நிலை அன்றாட செலவுக்கே பற்றாக்குறையாக இருக்கும் நிலையில் சொந்த வீடு வாங்குவது என்பது ஏழை எளிய மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு ஒரு கனவாகவே இருந்து வருகிறது. ஆனால் பிரிட்டனை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒலிவியா கில் என்பவர் தனது காதலருடன் இணைந்து எப்படி சொந்த வீடு வாங்கினேன் என்பதை விளக்கியுள்ளார்.
இளம் ஜோடி
ஒலிவியா கில் மற்றும் ஜாக் ஈகோட் ஜோடி கடந்த ஆண்டு ஜூலை மாதம் இரண்டு படுக்கை அறைகள் கொண்ட சொந்த வீட்டை வாங்கி உள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பு நேரத்தில் ஆடம்பரமான செலவுகளை தவிர்த்து வந்த இந்த ஜோடி பணத்தைச் சேமிக்கத் தொடங்கினார்கள்.
ஒலிவியா கில் - ஜாக் ஈகோட்
தங்கள் வயதுள்ள மற்ற ஜோடிகள் இளமையை அனுபவித்து கொண்டிருந்த நிலையில் இந்த ஜோடி அதிகபட்சம் பூங்காக்களில் நடைப்பயிற்சி செய்வதை மட்டுமே வெளியே செல்லும் ஒரு நிகழ்வாக கொண்டுள்ளனர். இப்போது 20 வயதாகும் ஒலிவியா இது குறித்து கூறிய போது, 'எங்களுக்கு சொந்த வீடு என்பது ஒரு கனவாக இருந்தது. ஆனால் இதற்காக நாங்கள் மிகப்பெரிய தியாகம் செய்ய வேண்டிய அவசியம் இருந்தது' என்று கூறியுள்ளார்.
தியாகங்கள்
நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு கூட்டுக் கணக்கை வங்கியில் தொடங்கினோம். இந்த கணக்கு தொடங்கிய பின்னர் சேமிப்பதற்கு ஒரு உந்துதலாக இருந்தது. எங்களுடைய சேமிப்புகள் நாளடைவில் அதிகரித்து வருவதை எங்கள் கண்களால் பார்க்க முடிந்தது. நாங்கள் சில தியாகங்கள் செய்து தான் இந்த கனவை அடைய முடிந்தது' என்று கூறினார்.
சேமிப்பு ஆர்வம்
ஊரடங்கு நேரத்தில் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் நாங்கள் வெறும் நடைபயணத்திற்கு மட்டுமே வெளியே சென்றோம். அனைத்து ஆடம்பர செலவுகளையும் தவிர்த்ததே எங்களது சேமிப்புக்கு உதவியாக இருந்தது . ஜோடியாக வெளியே செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் எங்களது சேமிப்பு ஆர்வம் அதற்கு தடை போட்டது.
அரசாங்க திட்டம்
அரசாங்கத்தின் 'ஹெல்ப் டு பை' என்ற திட்டத்தையும் நாங்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டோம். இங்கிலாந்து நாட்டில் சொந்த வீடு வாங்க விரும்புபவர்களுக்கு 5 சதவீத வைப்பு தொகையுடன் அரசாங்கம் இந்த திட்டத்தின் மூலம் உதவுகிறது. குறிப்பாக முதல் முறையாக வீடு வாங்குபவர்களுக்கு அரசாங்கம் சுலப தவணையில் கடன் தருகிறது.
வீட்டுக்கடன்
சொத்து மதிப்பில் 20% அல்லது 40 சதவீதம் வரை வீடு வாங்க அரசாங்கம் கடன் கொடுப்பதால் அந்த திட்டத்தை நாங்கள் பயன்படுத்திக் கொண்டோம். அரசாங்கத்தின் உதவி மூலம் நாங்கள் சேமித்து வைத்திருந்த தொகையை, எங்கள் கூட்டுக் கணக்கில் உள்ள தொகை ஆகியவை காரணமாக ஒரு மிகப்பெரிய தொகையை எங்களால் பெற முடிந்தது. அந்த தொகை தான் எங்களுடைய சொந்த வீட்டு கனவை நனவாக்கியது என்று கூறியுள்ளார்.
நண்பர்கள் உதவி
மேலும் எங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் எங்களுக்கு உதவி செய்தார்கள் என்றும் எங்கள் உழைப்பின் மூலம் சொந்த வீடு வாங்கியதை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம் என்று கூறியுள்ளார்.
இலக்கு
எந்த ஒரு நல்ல இலக்கையும் நாம் வைத்துக்கொண்டால் அந்த இலக்கை அடைவதற்காக நாம் கண்டிப்பாக சேமிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும், என்னுடைய அனுபவத்திலிருந்து நான் மற்றவர்களுக்கு கூறும் அறிவுரை இதுதான் என்றும் ஒலிவியா கூறியுள்ளார். உங்கள் இலக்கை அடைய சில சமயம் காலதாமதம் ஆகலாம். ஆனால் நீங்கள் சேமிப்பை விடாமல் தொடர்ந்து கொண்டே இருந்தால் நிச்சயம் ஒரு நாள் உங்கள் இலக்கை அடைந்துவிடலாம்' என்று ஒலிவியா கூறினார்.
ஆடம்பர செலவு
பப், ஹோட்டல் என ஆடம்பர செலவை தவிர்த்துவிட்டு சேமிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் நாங்கள் அத்தியாவசிய செலவு மட்டுமே செய்தோம் என்றும், எந்த ஒரு ஆடம்பர செலவும் செய்யாததால் இன்று எங்கள் கனவு நனவாகியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். ஒலிவியாவின் இந்த அனுபவம் மற்ற இளம் ஜோடிகளுக்கு ஒரு பாடமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.