உலகமே லாக்டவுனால் முடங்கி போயுள்ள நிலையில், அதிலும் அனைத்து போக்குவரத்து முடங்கியுள்ள நிலையிலும், இந்த கொரோனா மட்டும் சுதந்திரமாய் நாடு விட்டு நாடு சென்று கொண்டிருக்கிறது.
அதோடு மட்டும் அல்லாமல் பல லட்சம் மக்களை தன் வசப் படுத்திக் கொண்டுள்ளது.
இப்படி மக்களை படாதபாடு படுத்தி எடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், மறுபுறம் முக்கிய தொழில்துறையையும் முடக்கியுள்ளது.
இவ்வளவு தேக்கமா?
இந்த நிலையில் கொரோனா அச்சம் காரணமாக அனைத்து உலகளாவிய வினியோகச் சங்கிலிகள் பாதிக்கப்பட தொடங்கியுள்ளன. ஏனெனில் கொரோனாவின் தாக்கம் சர்வதேச அளவில் மக்களை பாடாய்படுத்தி வரும் நிலையில், அது தற்போது இந்தியா ஆடைத்துறையும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. இது புதியதாக எந்த வர்த்தகத்தினையும் செய்ய முடியாமல் போனாலும், ஏற்கனவே கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகையானது சுமார் 15,300 கோடி ரூபாய் உள்ளதாகவும் Apparel Export Promotion Council இடி-க்கு அளித்துள்ள தெரிவித்துள்ளது.
ஏற்றுமதி நாடுகள் பாதிப்பு
AEPC இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், 65% ஆடை ஏற்றுமதியாளர்களின் நிலுவைத் தொகையானது 15,300 கோடி ரூபாய் வெளிநாட்டவர்களிடம் சிக்கியுள்ளதாகவும் அதில் தெரிவித்துள்ளது. AEPC தலைவர் சக்திவேல் நமது முக்கிய பாரம்பரிய சந்தைகளான ஐரோப்பா மற்றும் அமெரிக்கா கொரோனாவினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் இந்தியாவில் ஆடைத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஆர்டர்கள் தள்ளி வைப்பு
ஆக ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படும் நாடுகள் அனைத்தும் கொரோனாவினால் லாகடவுன் செய்யப்பட்ட நிலையில், வெளிநாடுகளில் ஆர்டர்கள் ஒத்தி வைக்கப்படுகின்றன. மேலும் கொரோனாவின் காரணமாக மக்கள் கையில் பணப்புழக்கம் குறைந்துள்ளது. இதனால் நுகர்வும் குறைந்துள்ளது. இதனால் பொருட்கள் அதிகளவில் விற்பனையாகவில்லை. இதனால் விற்பனையாளர்கள் அதிகளவில் தள்ளுபடி கேட்கிறார்கள். அதாவது விலை குறைவாக கேட்கிறார்கள் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தலைவிதி என்ன?
இதுபோன்ற பிரச்சனைகளை நாங்கள் ஒரு போதும் கண்டதில்லை. மேலும் இந்த துறையின் தலைவிதி என்ன? என்று தெரியவில்லை. ஏற்கனவே மந்தமான பொருளாதாரத்தின் மத்தியில் ஜிஎஸ்டி விகிதம் மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கும் இத்துறையில் தற்போது இப்படி ஒரு பிரச்சனை பூதாகரமாக கிளம்பியுள்ளது. கொரோனாவால் எங்களது விநியோகச் சங்கிலி முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. எங்கள் பொருட்களை விற்கும் சில்லறை நிலையங்கள் மூடப்பட்டால் நாங்கள் ஊழியர்களுக்கு எங்கிருந்து பணம் கொடுப்போம் என்றும் இத்துறை ஆய்வாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இருட்டு கல்லறை
வெளி நாடுகளில் பரவி வரும் கொரோனாவினால் கடந்த 2-3 மாதங்களாகவே அவர்கள் ஏற்றுமதி செய்த பொருட்களுக்கு இன்னும் நிலுவையை செலுத்த வில்லை. இது பெரும் பணம் புழங்கிக் கொண்டிருந்த இத்துறைக்கு பெருத்த அடியாகும். வரவேண்டிய தொகைகளும் வந்து சேரவில்லை. அதே நேரம் தற்போது புதிய ஆர்டர்களையும் ஒத்தி வைத்துள்ளனர். இது சுரங்கப் பாதையின் முடிவில் வெளிச்சமில்லா கல்லறை என்றும் AEPC முன்னாள் தலைவர் மகு தெரிவித்துள்ளார்.
பல லட்சம் பேரின் வாழ்வாதாரம் பாதிக்கும்
இந்தியா உலகின் நான்காவது பெரிய ஜவுளி மற்றும் ஆடை உற்பத்தி துறையாகும். இது அதிகளவு ஏற்றுமதி மட்டும் அல்ல. அதிகளவு வேலை வாய்ப்பினைக் கொடுக்கும், அதாவது சுமார் 12.9 மில்லியன் மக்களுக்கு வேலை வாய்ப்பினை வாரி வழங்குகிறது. அதோடு மட்டும் இத்துறையை சார்ந்து பல்வேறு துணைத் துறைகளும் வேலையிழந்து தவிக்கின்றனர். ஆக இது பலவேறு மக்களின் வாழ்வாதாரத்தினை பாதிக்கும். ஆக இத்துறையில் ஏதேனும் தாக்கம் ஏற்பட்டால் அது உலகம் முழுக்க எதிரொலிக்கும் என்றும் சக்திவேல் எச்சரித்துள்ளார்.