2021-22ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கை தயாரிப்புப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் மத்திய அரசு பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தைக்காகப் பல்வேறு ஊக்கத்திட்டங்களை ஏற்கனவே அதிகளவில் அறிவித்துள்ள நிலையில், இந்தப் பட்ஜெட் அறிக்கையில் அதிகளவிலான அறிவிப்புகள் தனிநபர் சார்ந்த அறிவிப்பாக இருக்கும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்தப் பட்ஜெட் அறிக்கையில் வருமான வரிச் சலுகை அதிகமாக இருக்கும் என ஒரு தரப்பு விவாதம் செய்து வரும் நிலையில், மறுபுறம் நிதிப் பற்றாக்குறை அதிகமாக இருக்கும் காரணத்தால் வருமான வரியில் எவ்விதமான சலுகையும் இருக்காது எனக் கூறிவருகின்றனர்.
இந்நிலையில் கொரோனாவால் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்ட மக்களுக்கு நிதியியல் சலுகை அளிக்கும் விதமாகக் கொரோனா சிகிச்சைக்காகச் செலவு செய்த தொகைக்கு வருமான வரிச் சலுகை இந்தப் பட்ஜெட்டில் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இந்தச் சலுகை பெற கொரோனா சிகிச்சை பெற்ற நபர் எவ்விதமான ஹெல்த் இன்சூரன்ஸ்-ம் பெற்று இருக்கக் கூடாது என்பது முக்கிய விதிமுறையாக இருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
பட்ஜெட் அறிக்கை தயாரிப்புப் பணிகள் துவங்குவதற்கு முன்பாகவே வருவாய்த் துறைக்குக் கொரோனா சிகிச்சைக்காகச் செலவு செய்த தொகைக்கு வருமான வரிச் சலுகை அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது 80DD, 80U, 80DDB பிரிவின் கீழ் மருத்துவச் சிகிச்சைகளுக்கான செலவுகளுக்கு வருமான வரிச் சலுகை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் இந்தக் கொரோனா காலத்தில் PM CARES திட்டத்திற்கு நன்கொடை வழங்கிய தொகைக்கு 80G பிரிவின் கீழ் 100 சதவீதம் வரிச் சலுகை உள்ளது குறிப்பிடத்தக்கது.