இந்தியாவில் புதிய கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நாட்டின் வர்த்தகம், உற்பத்தி, வேலைவாய்ப்பு, நிதி நிலை என அனைத்தும் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது. இந்தச் சூழ்நிலையில் அரசின் மிகப்பெரிய தனியார்மயமாக்கும் திட்டம் முழுமையாக நிறைவேறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
2020ஆம் ஆண்டு அரசு சொத்துகளையும், நிறுவனங்களையும் விற்பனை செய்து முதலீட்டை ஈர்க்க பல திட்டங்களை அரசு தீட்டியிருந்த நிலையில், மோசமான பொருளாதாரச் சூழ்நிலை இருக்கும் காரணத்தால் ஒத்திவைக்கப்பட்டது. இதேபோன்ற சூழ்நிலை தான் மீண்டும் உருவாகியுள்ளது.
தனியார்மயமாக்கும் திட்டம்
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் பல முக்கியமான தனியார்மயமாக்கும் திட்டங்கள் இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக் காரணமாகக் காலதாமதம் ஆகலாம். அதிகரித்துக் கொரோனா தொற்று அரசு சொத்துக்களை விற்பனை செய்ய நிச்சயமற்ற தன்மையை அரசுக்கு உருவாக்கியுள்ளது என்றால் மிகையில்லை.
நிதி பற்றாக்குறை
அரசின் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கான நிதி இல்லாத காரணத்தால், திட்டங்களை உடனடியாகச் செயல்படுத்த வேண்டி காரணத்தால் குறைந்த காலகட்டத்தில் நிதி திரட்டும் வகையில் அரசு கையிருப்பில் இருக்கும் நிறுவனப் பங்குகளை விற்பனை செய்து அரசு நிறுவனங்களைத் தனியார்மயமாக்குவது மிக முக்கியத் திட்டமாக இருந்தது.
கொரோனா தொற்று
ஆனால் இந்தக் கொரோனா தொற்று முதலீட்டுச் சந்தையையும், வர்த்தகச் சந்தையையும் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அரசு சொத்துக்களை விற்பனை செய்தாலும் மிகவும் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகும். ஆகவே அரசின் பல தனியார்மயமாக்கும் திட்டம் காலதாமதம் ஆகலாம்.
4 முக்கிய அரசு நிறுவனங்கள்
தற்போது ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம், ஷப்பிங் கார்பரேஷன், BEML போன்ற பல நிறுவனங்கள் தனியார்மயமாக்கத் தயாராக உள்ளது, மேலும் இந்த 4 திட்டங்கள் நடப்பு நிதியாண்டின் முதல் பாதியிலேயே முடிக்கத் திட்டமிடப்பட்ட நிலையில் கொரோனா தொற்று இலக்கை அடைய முடியாத நிலை உருவாக்கியுள்ளது.
பட்ஜெட் 2022 முக்கிய அறிவிப்பு
இதுமட்டும் அல்லாமல் 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் மத்திய அரசு நடப்பு நிதியாண்டில் 2 வங்கிகள் மற்றும் ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்தைத் தனியார்மயமாக்க முடிவு செய்து அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டது. இதற்கு ஊழியர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு நிலவிய போதும் அரசு இதைக் கட்டாயம் செயல்படுத்த வேண்டிய முடிவில் உள்ளது.
எல்ஐசி ஐபிஓ
இதேவேளையில் இந்தியாவின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி மும்பை பங்குச்சந்தையில் ஐபிஓ வெளியிட முடிவு செய்து அதற்கான பணிகளை மிகவும் தீவிரமாகச் செய்து வருகிறது. இதன் மூலம் அரசின் பிற திட்டங்கள் காலதாமதம் ஆனாலும் எல்ஐசி ஐபிஓ திட்டத்திற்கு எவ்விதமான பாதிப்பும் இருக்காது எனக் கணிக்கப்பட்டு உள்ளது.