இந்தியா கொரோனாவின் 2வது அலையில் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் நிலையில் இன்று ரிசர்வ் வங்கி பல முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
இதில் மிகவும் முக்கியமான 50,000 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் திட்டத்தை வெளியிட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் கொரோனா தொற்றை எதிர்த்துப் போராட உதவும் மருத்துவமனை, உற்பத்தி நிறுவனங்கள், இறக்குமதி மற்றும் விற்பனையாளர்களுக்குக் கடன் அளிப்பதைத் தாண்டி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளவர்கள் மருத்துவச் சிகிச்சைக்கான பணத்தை வங்கிகளிடம் இருந்து கடனாகப் பெற அனுமதி அளித்துள்ளது ரிசர்வ் வங்கி.
கொரோனா சிகிச்சைக்குக் கடன்
கொரோனா சிகிச்சைக்கான செலவுகளை ஈடு செய்ய முடியாதவர்களுக்கு இத்தகைய கடன் பெறும் உதவியாக இறுக்கும். மேலும் இக்கடன் 3 வருட காலமும், ரெப்போ விகித அடிப்படையிலான வட்டி விகிதத்தில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கடன் அளிக்கப்படும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
மார்ச் 31, 2022 வரை மட்டுமே
மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளவர்கள் மருத்துவச் சிகிச்சைக்கான சேவை மார்ச் 31, 2022 வரையில் மட்டுமே நடைமுறையில் இருக்கும் எனவும் மார்ச் 5ஆம் தேதி ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் அறிவித்தார். இதோடு மக்களின் உயிர் மற்றும் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றுவதே தற்போது மிகவும் முக்கியமானது எனத் தெரிவித்துள்ளார்.
கடன் மறுசீரமைப்பு 2.0 திட்டம்
இதோடு இந்தக் கொரோனா காலத்தில் கடனுக்கான வட்டி மற்றும் அசலை திருப்பிச் செலுத்த முடியாதவர்களுக்குக் கடன் மறுசீரமைப்பு 2.0 திட்டத்தின் கீழ் முதல் முறையாகக் கடன் சலுகை பெறத் திட்டமிடுவோருக்கும் கடனுக்கான ஈஎம்ஐ சலுகை அளிக்கப்படும் எனவும் ரிசர்வ் வங்கி கவர்னர் தெரிவித்துள்ளார்.
கொரோனா முதல் அலை
2020ல் கொரோனா தொற்றுக் காலத்தில் அறிவிக்கப்பட்ட கடன் மறுசீரமைப்பு 1.0 திட்டத்தின் கீழ் சலுகை பெற்றவர்கள் 2 வருடத்திற்குக் குறைவான அளவில் சலுகை பெற்று இருந்தால் கடன் மறுசீரமைப்பு 2.0 திட்டத்தைப் பயன்படுத்தி அதிகப்படியாக 2 வருடம் வரை அதை நீட்டிக்க முடியும்.
கடனுக்கான ஈஎம்ஐ சலுகை
இதன் மூலம் ஒருவர் கடனுக்கான ஈஎம்ஐ செலுத்தவிதில் சலுகை அல்லது கடன் செலுத்துவதற்கான கூடுதல் காலம் பெற முடியும். இந்தக் கடன் மறுசீரமைப்பு 2.0 திட்டம் என்பது கிட்டதட்ட 2020ல் அளிக்கப்பட்ட கடனுக்கான ஈஎம்ஐ சலுகை போன்றதே, மேலும் இந்தச் சலுகை பெற கடனாளர்கள் வங்கிக்குச் சென்றே இதைப் பெற முடியும்.