சுவிஸ்: Credit Suisse நிறுவனத்தின் புதிய தலைமை நிதி அதிகாரியாக வரும் அக்டோபர் 1 முதல் திக்ஷித் ஜோஷி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல் செப்டம்பர் 19 முதல் Credit Suisse குழுமத்தின் தலைமை இயக்க அதிகாரியாக பிரான்செஸ்கா மெக்டொனாக் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்
கடந்த மாதம் Ulrich Koerner தலைமை நிர்வாகியாக நியமிக்கப்பட்டதை அடுத்து தற்போது மற்றொரு உயர் நிர்வாக மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.
தீக்ஷித் ஜோஷி
Credit Suisse நிறுவனத்தின் புதிய தலைமை நிதி அதிகாரியாக பொறுப்பேற்கும் தீக்ஷித் ஜோஷி கடந்த ஐந்து ஆண்டுகளாக டாய்ச் வங்கியில் குழு பொருளாளராக பணியாற்றியவர். அங்கு அவர் வங்கியின் மறுசீரமைப்பு மற்றும் அதன் இருப்புநிலையை மாற்றியமைப்பதில் குறிப்பிடத்தக்க பங்கை கொண்டிருந்தார்.
30 ஆண்டு அனுபவம்
தீக்ஷித் ஜோஷி தனது 30 ஆண்டுகால அனுபவத்தில் பல்வேறு மூத்த முதலீட்டு வங்கி பதவிகளை வகித்துள்ளார் என்பதும், பல இடங்களில் பணிபுரிந்து பல வணிகங்களின் மேலாண்மை மற்றும் சவாலான மாற்ற முயற்சிகளுக்கு பங்களித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஸ்டாண்டர்ட் வங்கியில் பணி
2010ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பார்க்லேஸ் கேப்பிட்டலில் இருந்து EMEA ஈக்விட்டிஸ் வணிகத்தின் விற்பனை, வர்த்தகம், ஆராய்ச்சி மற்றும் கட்டமைப்பு ஆகியவற்றில் தலைமை தாங்குவதற்காக Deutsche Bank தீக்ஷித் ஜோஷி சேர்ந்தார். அவர் 1992ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் ஸ்டாண்டர்ட் வங்கியில் தனது வாழ்க்கையை தொடங்கினார்.
திருப்புமுனை
முதலீட்டு வங்கி வணிகங்களின் பரந்த அனுபவம் உடைய தீக்ஷித் ஜோஷி தற்போது Credit Suisse நிறுவனத்தில் இணைந்துள்ளதால், இந்நிறுவனம் ஒரு திருப்புமுனையை பெற்றுள்ளது. இவர் முதலீட்டு வங்கியை மிகவும் போட்டித்தன்மையுள்ள வங்கியாகவும், மேலும் நிலையான சந்தை வணிகமாகவும் மாற்றுவதில் வல்லவர் என Credit Suisse நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பட்டம்
ஜோஷி தென்னாப்பிரிக்காவில் உள்ள விட்வாட்டர்ஸ்ராண்ட் பல்கலைக்கழகத்தில் புள்ளியியல் மற்றும் ஆக்சுவேரியல் அறிவியலில் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.