இந்தியாவில் நிலவி வரும் நெருக்கடியான நிலையில் இருக்கும் வேலையாவது நிலைக்குமா? எப்போது பறிபோகுமோ? என்ற நிலையே இருந்து வருகின்றது.
இன்று பல நிறுவனங்களிலும் இதே நிலை தான். எனினும் ஐடி துறையில் நிலைமையே வேறு. ஏனெனில் புதிய பல ஒப்பந்தந்தகளை ஐடி நிறுவனங்கள் செய்து வருகின்றன.
இதனால் ஐடி நிறுவனங்கள் புதியதாக பணியமர்த்தலையும் செய்து வருகின்றன. இது உண்மையில் நிலவி வரும் நெருக்கடியான நிலைமைக்கு மத்தியிலும் நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது. இன்னும் சில நிறுவனங்கள் வீட்டில் இருந்து ஊழியர்களை பணி செய்ய கூறி வரும் நிலையில், இதுவும் ஐடி ஊழியர்களுக்கான வாய்ப்பினை அதிகப்படுத்தியுள்ளது.
பணியமர்த்த திட்டம்
இதற்கிடையில் தான் கிரெடிட் சூசி நிறுவனம் இந்தியாவில் 1000 ஐடி ஊழியர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதே போல் சுவிஸ் வங்கியும் டெவலப்பர்ஸ் மற்றும் பொறியாளர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளது. குறிப்பாக சைபர் செக்யூரிட்டி, டேட்டா அனலிஸ்ட், கிளவுட், ஏபிஐ டெவலப்மெண்ட், மெஷின் லேர்னிங், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில்நுட்ப திறன் கொண்ட ஊழியர்களையும் பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
வளர்ச்சி அதிகரிக்கும்
கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் சுவிஸ் வங்கி 2000 ஐடி பணியாளர்களை பணியமர்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த வளர்ச்சி விகிதமானது ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சியடையும் என்றும், இந்தியாவில் இந்த எண்ணிக்கையை அதிகரிக்க இவ்வங்கி முயன்று வருவதாகவும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கிரெடிட் சூசி இந்தியாவுக்கு உதவி
இந்தியாவில் தொடர்ந்து நாங்கள் எங்களது வளர்ச்சியை மேம்படுத்தி வருகின்றோம். எங்களது வலுவான குழுவில், ஐடி திறனுள்ள சிறந்த ஊழியர்களை மேலும் சேர்க்க விரும்புகிறோம். அதோடு ஊழியர்களின் திறமை மேம்படுத்தும் சூழலை வழங்குகிறோம். இந்த கொரோனா காலத்திலும் கிரெடிட் சூசி நிறுவனம், கன்சர்ன் இந்தியா பவுண்டேஷன் மற்றும் கிவ் இந்தியா மூலம் 7.5 கோடி மதிப்பிலான உதவியை செய்ய ஒப்புக் கொண்டுள்ளது.
மருத்துவமனைகளுக்கு உதவி
இதன் மூலம் மும்பை, டெல்லி, புனே மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் முக்கியமான மருத்துவ உபகரணங்களை வாங்குவதற்காக உதவிகளை வழங்கி வருகின்றது. இது தவிர கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், கிரெடிட் சூசி ஊழியர்களும் 2.8 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நிதி திரட்டியும் கொடுத்துள்ளனர்.
மற்ற நிறுவனங்களில் நிலவரம்?
ஐடி துறையில் ஹெச்சிஎல் டெக்னாலஜி, டிசிஎஸ், விப்ரோ, டெக் மகேந்திரா உள்ளிட்ட ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை பணியமர்த்தி வரும் நிலையில், இன்னும் பல ஆயிரம் ஊழியர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளன. இது இன்னும் அடுத்த சில காலாண்டுகளுக்கு தொடரும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.