தமிழகம் முழுவதும் எஸ்பிஐ வங்கியில் பணம் டெபாசிட் செய்யும் மெஷின்களில் இருந்து நூதன முறையில் திருட்டு நடந்துள்ளது.
இந்த திருட்டின் மூலம் 48 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, எஸ்பிஐ பணம் டெபாசிட் செய்யும் மெஷின்கள் மூலம் தமிழகம் முழுவதும் பணம் நூதன முறையில் கொள்கையடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விசாரணை நடந்து வருகின்றது. இத்தகைய திருட்டு நடப்பது இதுவே முதல் முறை என்பதால் பல்வேறு குழப்பத்தினையும், சந்தேகத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.
வங்கிகளுக்கு இழப்பு
தமிழக்கத்தில் மொத்தம் 18 புகார்களில் 7 புகார்களில் மட்டுமே குறைந்த தொகை கொள்கையடிக்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்களுக்கு எந்த இழப்பும் இல்லை. ஆனால் வங்கிகளுக்கு பெரும் இழப்பு தான். ஏனெனில் தொழில் நுட்ப குறைப்பாட்டினால் தான் இந்த கொள்ளை நடந்துள்ளது.
எஸ்பிஐ மெஷின்களில் மட்டும் தான் அரங்கேற்றம்
ஆனால் இந்த குறைபாடானது தற்போது சரி செய்யப்பட்டுள்ளது. ஆக இனி இதுபோன்ற கொள்ளை நடக்காது. இதில் 3 - 4 பேர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எல்லா புகார்களிலும் சிசிடிவி இருக்கிறது. குறிப்பாக இந்த நூதன திருட்டானது எஸ்பிஐ வங்கி சிடிஎம் மெஷின்களில் மட்டும் தான் நடந்துள்ளது.
வேறு வங்கிகளில் நடந்துள்ளதா?
வேறு வங்கிகளிலும் இது போன்ற பிரச்சனை நடந்துள்ளதா? என்ற விசாரணையும் நடந்து வருகின்றது. மேலும் இந்த நூதன திருட்டு குறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் அல்ல கடந்த ஒரு வாரத்திற்குள் சில மாநிலங்களில் இதே போன்று சில சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
பணம் எடுக்க தடை
ஆக சம்பந்தப்பட்ட எஸ்பிஐ சிடிஎம் மெஷின்களில் பணம் எடுக்க முடியாது. பணத்தினை போடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வேளச்சேரி, தரமணி, வடபழனி, கீழ்ப்பாக்கம், ராமபுரம் உள்ளிட்ட பல இடங்களில் நிகழ்ந்துள்ளது. இது குறித்து மற்ற மாவட்டங்களிலும் விசாரணை நடந்து வருகின்றது என்றும் கூறியுள்ளார்.
நூதன முறையில் திருட்டு
இன்றைய காலத்தில் பல்வேறு மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சிகள் உள்ள நிலையில், அதுவும் நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கி மெஷினில் இது எப்படி சாத்தியம் வாருங்கள் பார்க்கலாம். இதற்கு முன்னர் ஏடிஎம் மெஷினில் உடைத்து திருடுவது, கார்டு குளோனிங் இது போன்ற பல சம்பபவங்கள் நடந்துள்ளது. ஆனால் முதல் முறையாக CDM மெஷின் மூலம் திருட்டு நடந்துள்ளது.
தொழில்நுட்ப விஷயம்
பணம் எடுக்கும்போதும், பணம் செலுத்தும்போதும், வங்கிக் கணக்கு மற்றும் மொபைல் எண்ணினை கொடுத்து பணத்தினை செலுத்தும்போது, நமது வங்கி எண் சரியானது என்பதை அறிய மெஷின் 20 நொடிகள் நேரம் எடுத்துக் கொள்ளும். அப்படி சரியாக இருக்கும் பட்சத்தில், 20 நொடிகளுக்கு பிறகு உங்கள் பணம் டெபாசிட் செய்யப்படும். வித்டிரா செய்யும்போதும் இதே தொழில் நுட்பம் தான் பயன்படுத்தப்படுகிறது.
20 நொடி கேப்
அப்படி 20 நொடிகளுக்குள் உங்கள் பணம் வித்டிராவல் செய்யும்போது நீங்கள் எடுக்காவிட்டால் சென்சார் மூடிவிடும். அதன் பிறகு உங்களது பணம் மீண்டும் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இதனால் வாடிக்கையாளர்களுக்கு இழப்பு ஏதும் இல்லை. ஆனால் மெஷினில் பணம் குறைந்துவிடும். இப்படி ஒரு தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி தான் மர்ம ஆசாமிகள் எஸ்பிஐயில் தங்களது கைவரிசையை காட்டியுள்ளனர்.
தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் தானோ?
இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் இந்த மெஷின்கள் வங்கியின் ஒப்புதல், ரிசர்வ் வங்கியின் ஒப்புதலுக்கு பிறகு தான் செயல்பாட்டுக்கு வரும். இதனை மானிட்டர் செய்ய பல தொழில்நுட்ப வல்லுனர்களும் உள்ளனர். இந்த சம்பவமானது இது குறித்த தொழில்நுட்பத்தினை அறிந்தவர்கள் மட்டுமே, இந்த திருட்டினை அரங்கேற்றியிருக்க முடியும் என்ற சந்தேகத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.