ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாகக் கச்சா எண்ணெய் விநியோகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், உலக நாடுகளில் கச்சா எண்ணெய் இருப்பும் வேகமாகக் குறைந்து வருவதால் இதன் விலை வேகமாக உயர துவங்கியுள்ளது.
இதைத் தாண்டி தற்போது கச்சா எண்ணெய் விலை உயர மிக முக்கியமான காரணமும் உண்டு. இதேவேளையில் கச்சா எண்ணெய் விலையால் இந்திய பொருளாதார வளர்ச்சி சின்னாபின்னமாகும் நிலை உருவாகியுள்ளது.
இதை விட முக்கியமாக முன்னாள் காங்கிரஸ் அரசு எதிர்கொண்ட பிரச்சனையை மோடி அரசு தற்போது எதிர்கொண்டு வருகிறது.
ரஷ்யா மீது தடை
ரஷ்யா மீது உலக நாடுகள் ஏகப்பட்ட தடையை விதித்து வரும் நிலையிலும் தொடர்ந்து உக்ரைன் நாட்டிற்குள் ரஷ்ய படைகள் முன்னேறி வருகிறது. ஏற்கனவே உக்ரைன் நாட்டின் 2வது பெரிய நகரத்தில் வான்வழியாகத் தாக்குதல் நடத்தி வருகிறது.
பேச்சுவார்த்தை
ரஷ்ய படைகள் விரைவில் உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவ்-ஐ கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ரஷ்யா - உக்ரைன் மத்தியில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஏற்கனவே நடந்த பேச்சுவார்த்தையில் எவ்விதமான தீர்வும் எட்டப்படாத நிலையில் தாக்குதலை மீண்டும் அதிகரித்துள்ளது ரஷ்யா
எரிபொருள் தடை
இதேவேளையில் அமெரிக்கா மற்றும் NATO அமைப்பில் இருக்கும் நாடுகள் தனது கடைசி ஆயுதமான ரஷ்யா மீது எனர்ஜி எக்ஸ்போர்ட் தடை, அதாவது கச்சா எண்ணெய் முதல் அனைத்து எனர்ஜி சார்ந்த விஷயத்தை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் தடை விதிக்கத் திட்டமிடப்பட்டு வருகிறது.
112 டாலர்
இந்தத் தடை மூலம் ரஷ்யாவுக்கும், உலக நாடுகளுக்கும் மத்தியில் இருக்கும் ஒரே தொடர்பை அறுக்க முடியும் என அமெரிக்கா நம்புகிறது. இதனாலேயே தற்போது கச்சா எண்ணெய் விலை 112 டாலர் வரையில் அதிகரித்துள்ளது.
காங்கிரஸ் 2014
2014ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கான காரணங்களில் பெட்ரோல் டீசல் விலை, மந்தமான பொருளாதார வளர்ச்சியும் முக்கியமானதாக இருந்தது யாரும் மறந்திருக்க முடியாது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்த 2004 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் 34.16 டாலரில் இருந்து 110 டாலர் வரையில் உயர்ந்தது. இது கிட்டதட்ட 222 சதவீதம் உயர்வு.
நரேந்திர மோடி
ஆனால் மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த 2014ஆம் ஆண்டு முதல் கச்சா எண்ணெய் விலை 109 டாலரில் இருந்து தொடர்ந்து சரிந்த காரணத்தால், வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் வளர்ச்சி அடைய வாய்ப்புகள் உருவானது.
பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி
2014ஆம் ஆண்டுக்கு பின்பு மோடி தலைமையிலான அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி ஆகியவற்றின் மூலம் எரிபொருள் விலை குறைந்தது மூலம் உருவான வளர்ச்சி வாய்ப்பை பயன்படுத்த முடியாமல் போனது. இதனால் இந்திய பொருளாதாரம், வேலைவாய்ப்பு சந்தை, வர்த்தகம் தொடர்ந்து மந்த நிலைக்குத் தள்ளப்பட்டது.
கொரோனா, ஒமிக்ரான்
இந்தச் சூழ்நிலையில் கொரோனா, ஒமிக்ரான் மூலம் இந்தியா மட்டும் அல்லாமல் உலக நாடுகள் அனைத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இக்காலகட்டத்தில் இந்தியாவின் மொத்த கடன் அளவும், நிதி பற்றாக்குறை அளவும் அதிகரித்துள்ளது. ஆனால் 2009ல் உலகளவில் ஏற்பட்ட நிதி நெருக்கடி காலகட்டத்தைக் காங்கிரஸ் அரசு சிறப்பான முறையில் கையாண்டது குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் - ரஷ்யா போர்
தற்போது உக்ரைன் - ரஷ்யா போர் மூலம் கச்சா எண்ணெய் விலை 112 டாலரைத் தொட்டு உள்ளது, 2014ல் காங்கிரஸ் அரசுக்கு வந்த அதே பிரச்சனை தற்போது மோடி அரசு எதிர்கொண்டு உள்ளது. காங்கிரஸ் கச்சா எண்ணெய் விலை உயர்வை எண்ணெய் பத்திரங்கள் மூலம் கணிசமாகக் கட்டுப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல், டீசல் விலை
மோடி அரசு தற்போது தினசரி சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு இணையாகப் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வரும் நிலையில், 5 மாநில தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகக் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்தும் எரிபொருள் விலை உயராமல் உள்ளது.
5 மாநில தேர்தல்
5 மாநில தேர்தல் முடிவுக்குப் பின்பு மோடி அரசு கட்டாயம் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தும், ஏனெனில் பிஜேபி அரசு கட்டாயம் காங்கிரஸ் அரசு போல் எண்ணெய் பத்திரங்கள் வெளியிட்டு எண்ணெய் நிறுவனங்களின் சுமையைக் குறைக்காது.
மக்கள் தலையில் சுமை
இதனால் விலை சுமை கட்டாயம் சாமானிய மக்கள் தலையில் தான் விழும். விமான எரிபொருள் விலை சுமார் 5 முறை உயர்த்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது, எனவே ஒரு லிட்டர் பெட்ரோல் விலை கட்டாயம் 120 ரூபாயை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு ஏற்குமா..?
மேலும் மத்திய அரசு ஏற்கனவே அதிகப்படியான நிதிப்பற்றாக்குறையில் இருக்கும் காரணத்தாலேயே அரசு சொத்துக்கள், அரசு நிறுவனப் பங்குகளை விற்பனை செய்தும் நிதி திரட்டி வருகிறது. இந்நிலையில் கச்சா எண்ணெய் விலை சுமையை மத்திய அரசு ஏற்க வாய்ப்புக் குறைவு, இதனால் கடைசியில் மக்கள் வாங்கும் பெட்ரோல், டீசல் விலையைத் தான் அரசு உயர்த்தும்.