உலக நாடுகளுக்குப் பெரும் தலைவலியாக இருக்கும் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயரும் எனச் சந்தை வல்லுனர்கள் கணித்துள்ளது. சரி ஒரு பேரல் கச்சா எண்ணெய் எந்த அளவிற்கு உயரும் என்பது தான் தற்போது முக்கியமான கேள்வியாக உள்ளது.
ரஷ்யா - உக்ரைன் போரின் துவக்கத்தில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 200 டாலர் வரையில் உயரும் எனப் பல அறிவிப்புகள் வெளியானது மறக்க முடியாது..
ஆனால் இப்போது நிலைமை மாறியுள்ளது...
கச்சா எண்ணெய்
பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை புதன்கிழமை ஒரு நாள் வர்த்தகத்தில் மட்டும் 107 டாலரில் இருந்து 114 டாலர் வரையில் உயர்ந்து மிகப்பெரிய மாற்றத்தைப் பதிவு செய்தது எண்ணெய் வர்த்தகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இன்று பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 1 சதவீதம் வரையில் சரிந்து 107.3 டாலராகவும், WTI கச்சா எண்ணெய் 1.06 சதவீதம் சரிந்து 102.7 டாலராக உள்ளது.
ரஷ்யா - உக்ரைன் போர்
ரஷ்யா - உக்ரைன் போர் உச்சத்தில் இருந்த மார்ச் மாதத்தில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 139 டாலர் வரையில் உயர்ந்து 14 வருட உச்சத்தைப் பதிவு செய்தது. சுமார் 13 வாரங்களாகக் கச்சா எண்ணெய் விலை உயர்வாகவே உள்ளது. ஆனால் விலை பெரிய அளவில் குறைந்திருக்கச் சில முக்கியக் காரணங்களும் உள்ளது.
185 டாலர் வரை
இதனால் கச்சா எண்ணெய் சந்தை வல்லுனர்கள் அடுத்த 6 மாத காலத்தில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 90 டாலர் முதல் 185 டாலர் வரையில் உயர வாய்ப்பு உள்ளது. ரஷ்யாவில் இருந்து தான் கச்சா எண்ணெய் விநியோகம் துவங்கியுள்ளதே, பின்பு ஏன் விலை உயர்கிறது..?
அவசரக்கால கச்சா எண்ணெய் இருப்பு
தற்போது கச்சா எண்ணெய் விலை குறைய மிக முக்கியமான காரணம் அமெரிக்க அரசு எரிபொருள் விலை தாக்கத்தைக் குறைக்க வேண்டும் என்பதற்காகத் தனது அவசரக்கால கச்சா எண்ணெய் இருப்பை விநியோகம் செய்து வருகிறது. இதனாலேயே கச்சா எண்ணெய் விலை 102 டாலராக உள்ளது.
அமெரிக்கா
ஆனால் இந்த அவசரகால கச்சா எண்ணெய் விலை இருப்பு நீண்ட நாட்களுக்குத் தாக்குப் பிடிக்காது. இதனால் அமெரிக்காவும் வெளி சந்தையில் இருந்து தான் வாங்கவேண்டிய நிலை உருவாகும் அப்போது கச்சா எண்ணெய் விலை உயர வாய்ப்புகள் உள்ளது.
முக்கியப் பிரச்சனை
இதற்கிடையில் கச்சா எண்ணெய் விநியோகத்தையும் உற்பத்தி அளவையும் பாதிக்க ரஷ்யா - உக்ரைன் போரைத் தாண்டி முக்கியமான மற்றொரு காரணமும் தற்போது உருவாகியுள்ளது.
லிபியா
லிபியா நாட்டின் பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டும் என மக்கள் போராட்டத்தில் குதித்துள்ள காரணத்தால் கச்சா எண்ணெய் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் அந்நாட்டின் கச்சா எண்ணெய் உற்பத்தி ஒரு நாளுக்கு 5 லட்சம் பேரலாகக் குறைந்தது.
மக்கள் போராட்டம்
மேலும் போராட்டம் தொடர்ந்து அதிகரிக்கும் காரணத்தால் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிகள் பாதிக்கப்படும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. இதனால் உற்பத்தி அளவு தொடர்ந்து குறையும் காரணத்தால் சர்வதேசச் சந்தையில் புதிய நெருக்கடி உருவாகியுள்ளது.
OPEC நாடுகள்
இதற்கிடையில் ஐரோப்பிய யூனியன் ரஷ்யா கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்வதை உடனடியாக நிறுத்த ஆலோசனை செய்து வருகிறது. இதேபோல் OPEC நாடுகள் அதிக வருமானம் பெற வேண்டும் என்பதற்காக உற்பத்தி அளவை அதிகரிக்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளது.
இந்தியா
இதன் மூலம் கச்சா எண்ணெய் விலை 185 டாலர் வரையில் உயர அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது. இதனால் இந்தியாவில் பெட்ரோல் விலை 200 ரூபாயை தாண்டவும் வாய்ப்பு உள்ளது. இதேபோல் நீண்டகால அடிப்படையில் 2023ல் 95 டாலரும், 2024ல் 85 டாலரில் தான் கச்சா எண்ணெய் இருக்கும் என்ற கணிப்பில் எவ்விதமான மாற்றமும் இல்லை.