இந்தியாவில் ஏற்கனவே நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசின் இலக்கினை இது எட்டிவிட்டது. இனியும் அதிகரித்தால் அது பெரிய பிரச்சனையாகக் மாறக்கூடும் என்றும் கருதப்படுகிறது.
இந்த நிலையில் அமெரிக்கா ஈரான் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதே தவிர, இன்னும் குறைந்த பாடில்லை.
அதிலும் அமெரிக்கா எந்தவொரு நிபந்தனையுமின்றி நாங்கள் பேச்சு வார்த்தகைக்கு தயார் என்று கூறிய நிலையில், ஈரான் மீண்டும் அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தியுள்ளது, மற்ற நாடுகளையும் ஈரானுக்கு எதிராக திருப்பியுள்ளது.
தீடீர் தாக்குதல்
அமெரிக்கா ஈரானுடன் பேச்சு வார்த்தைக்கு தயாராக இருப்பதாக கூறிய நிலையில், ஈரானும் அதை ஒப்புக் கொண்டது. இந்த நிலையில் அமெரிக்கா படைகள் முகாமிட்டுள்ள பகுதியில் மீண்டும் பல ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது ஈரான். இதனால் பலர் காயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும் உயிரிழப்புகள் பற்றி எந்தவொரு அறிக்கையும் தெரியவில்லை.
வலுக்கும் போராட்டம்
ஈரான் ஒரு புறம் தொடர்ந்து அச்சுறுத்தி வருவதால், தற்போது ஈரானுக்கு எதிராக மூன்று பெரிய நாடுகள் அணி திரண்டுள்ளன. தற்போது கனடா, உக்ரைன், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கைகோர்த்துள்ளன. ஆக விரைவில் அமெரிக்கா கூட்டணியைச் சேர்ந்த இந்த நாடுகள், ஈரானுக்கு எதிராக மாறலாம் என்றும் கூறப்படுகிறது.
போர் பதற்றம்
ஏற்கனவே பதற்ற நிலையில் உள்ள மத்திய கிழக்கு பகுதியில் ஈரானின் இந்த வெறிச் செயலால் மீண்டும் தீ பற்றி எரிய ஆரம்பித்துள்ளன. எந்த நேரம் வேண்டுமானாலும் போர் வரலாம் என்ற நிலையே நிலவி வருகிறது. ஒரு புறம் இந்த போர் பதற்றம் என்றால், வளைகுடா வழியாக நடைபெறும் ஆயில் வர்த்தகமும் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆசிய நாணயங்கள்
இதனால் எண்ணெய் விலை அதிகரிக்குமோ, இதனால் தங்கள் பொருளாதாரம் பாதிக்குமோ என்ற அச்ச நிலையும் சர்வதேச அளவில் நிலவி வருகிறது. இதனால் ஆசிய நாணயங்கள் பெரும் கொந்தளிப்பை கண்டுள்ளன. ஏனெனில் பழையபடி மத்திய கிழக்கு பகுதிகளில் பிரச்சனை விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளதே இதற்கு முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது.
வீழ்ச்சி கண்ட கரன்சிகள்
ஆசிய நாடுகளில் உள்ள கரன்சிகளின் மதிப்பானது கடந்த வாரத்தில் பெரும் வீழ்ச்சியை கண்டன. அமெரிக்கா ஈரான் தாக்குதலால் கச்சா எண்ணெய் விலை தாறுமாறான ஏற்றம் கண்டது, இதன் விளைவாக பல்வேறு நாடுகளின் நாணய மதிப்பும் படு வீழ்ச்சி கண்டது. குறிப்பாக இந்திய ரூபாயின் மதிப்பும் படுவீழ்ச்சி கண்டது.
உயரலாம்
மத்திய கிழக்கு பகுதிகளில் தொடரும் இந்த கொந்தளிப்பின் காரணமாக கச்சா எண்ணெய் விலை மேலும் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பல ஆசிய நாடுகளின் கரன்சி மதிப்பான ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இப்பிரச்சனையானது தொடரும் பட்சத்தில் இன்னும் கரன்சிகள் வீழ்ச்சி காணலாம் என்றும் கூறப்படுகிறது.
தற்போது விலை
தற்போது பிரெண்ட் ஆயில் விலையானது பேரலுக்கு 65.08 டாலராக வர்த்தகமாகி வருகிறது. இதே டபள்யூடிஐ கச்சா எண்ணெய் விலையானது தற்போது 59.19 டாலராக வர்த்தகமாகி வருகிறது. கடந்த வாரத்தில் 65 டாலர்கள் வரை சென்ற இதன் விலையானது கடந்த வெள்ளிக்கிழமையன்று 58 டாலர்களை தொட்ட நிலையில், தற்போது சற்று அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.
இந்தியாவுக்கு பிரச்சனை
ஆக பிரச்சனை மீண்டும் அதிகரிக்கும் பட்சத்தில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உச்சம் தொடலாம் என்றும் கூறப்படுகிறது. அதிலும் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகள் கச்சா எண்ணெய்க்காக இறக்குமதியையே பெரிதும் நம்பி இருப்பதால், இதன் எதிரொலி மிகக் கடுமையாக இருக்கலாம் என்றும் எதிப்பார்க்கப்படுகிறது.
வர்த்தக பற்றாக்குறை
இது குறித்து டாய்ச் வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் ஜூலியானா லீ, ஆசிய பொருளாதாரங்கள் மோசமடைவதை நாம் காணலாம். அதிலும் அதிகரித்து வரும் எண்ணெய் விலையால் வர்த்தக பற்றாக்குறையும் அதிகரித்து வரும் ஆபத்து உள்ளதாகவும் சுட்டிக் காட்டியுள்ளார்.
இன்னும் மோசமான நிலையை சந்திக்க கூடும்
இவ்வாறு அதிக எண்ணெய் விலையால் அதிகம் பாதிக்கப்படும் மூன்று ஆசிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் ஏற்கனவே நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரித்துள்ள நிலையில், மீண்டும் கச்சா எண்ணெய் விலையால் பிரச்சனை விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது. ஆக கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு நிலைமையை இன்னும் மோசமாக்க கூடும். பொருளாதார வளர்ச்சி குறைந்து நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிக்கும்போது நாடு இன்னும் மோசமான நிலையை சந்திக்க கூடும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
வீழ்ச்சி காணலாம்
இந்தியாவின் இந்த மோசமான நிலையால் இந்திய ரூபாயின் மதிப்பு 74 ரூபாயாக வீழ்ச்சி காணக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். தற்போதைய நிலையில் ரூபாயின் அதிகபட்ச வீழ்ச்சி 74.48 ரூபாயாகும். இது கடந்த 2018 அக்டோபரில் வீழ்ச்சி கண்டது குறிப்பிடத்தக்கது.
ஊழியர்கள் நாடு திரும்பலாம்
மத்திய கிழக்கு பகுதிகளில் நிலவி வரும் பற்றாக்குறை அப்பகுதியில் உள்ள இந்திய பணியாளர்களை நாடு திரும்ப வழி வகுக்கும். அவ்வாறு நாடு திரும்பினால் ரூபாயும் பெரும் சரிவை சந்திக்க கூடும். ஆக இதுபோன்ற விஷயங்களும் இந்தியாவுக்கு பிரச்சனையாகவே உள்ளது.
முக்கிய டேட்டாக்கள்
இப்படி ஒரு மோசமான நிலையில் இன்று இந்தியாவின் சிபிஐ டேட்டா வெளியாக உள்ளது. இது ஜனவரி 14 அன்று சீனாவின் வர்த்தக டேட்டா, ஜப்பானின் பேலன்ஸ் பேமென்ட்ஸ், இந்தியாவின் மொத்த விலை குறியீடு வெளியாக உள்ளது. ஜனவரி 15ல் இந்தியாவின் வர்த்தக குறியீடு, ஜனவரி 17ல் சீனாவின் ஜிடிபி உள்ளிட்ட முக்கிய டேட்டாக்கள் வெளியாக உள்ளன.
ரூபாயில் மாற்றம்
ஆக சர்வதேச அளவில் வெளியாகவிருக்கும் இந்த குறியீடுகளால், இந்தியாவின் கரன்சி மதிப்பு அதிகளவில் ஏற்ற இறக்கம் காணலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.