கொரோனா தொற்றில் இருந்து தட்டுத்தடுமாறி மெல்ல மெல்ல இந்திய பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தை மீண்டு வரும் நிலையில் ரஷ்யா - உக்ரைன் மத்தியிலான போர் காரணமாகக் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் பணவீக்கத்தின் உயர்வால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது என அரசு அதிகாரி தெரிவித்துள்ளார்.
கச்சா எண்ணெய் தொடர்ந்து 110 டாலருக்கு மேல் இருக்கும் காரணத்தால் விலைவாசி உயர்ந்து பணவீக்கம் நாட்டின் வளர்ச்சியைப் பாதிக்கும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது. இதன் மூலம் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது.
கச்சா எண்ணெய்
இந்தியா வெளிநாட்டுக் கச்சா எண்ணெய் இறக்குமதியை மட்டுமே நம்பியிருக்கும் நிலையில், ஒரு மாதத்திற்குக் கச்சா எண்ணெய் விலை 110-120 டாலர் வரையில் இருந்தால் நாட்டின் பணவீக்கம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு நாட்டின் வளர்ச்சி கடுமையாகப் பாதிக்கப்படும் என அரசு அதிகாரியே தெரிவித்துள்ளார்.
நிலக்கரி
இதேபோல் இந்தியா தனது மின்சார உற்பத்திக்கு வெளிநாட்டு நிலக்கரியை நம்பியிருக்கும் நிலையில், நிலக்கரி விலையும் உயர்ந்துள்ளது. இதனால் இந்தியாவில் ஓரே நேரத்தில் எரிபொருள் மற்றும் மின்சாரம் விலை உயர துவங்கியுள்ளது. இது நாட்டின் வர்த்தக வளர்ச்சி மட்டும் அல்லாமல் சாமானிய மக்களையும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்கும்.
மின்சார உற்பத்தி
சர்வதேச சந்தையில் நிலக்கரி விலை கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் 196 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் மின்சார உற்பத்தி நிறுவனங்கள் நிலையான கட்டணத்தில் மின்சாரத்தை அளித்து வந்தால் விலை உயர்வின் மூலம் ஏற்பட்ட நிதி சுமையைச் சமாளிக்க முடியாது. இதன் மூலம் மின்சார உற்பத்தி நிறுவனங்கள் வாங்கிய கடனை திரும்பப் பெற முடியாது. இதனால் வராக்கடனாக மாறும்.
விலைவாசி உயர்வு
இதேபோலத் தான் சிமெண்ட், ஸ்டீல், பேப்பர் என அனைத்து முக்கியப் பொருட்களின் விலையும் தற்போது உயர்த்த வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. இதனால் விலை, கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது, இதனால் விலைவாசி உயர்ந்து பணவீக்கம் அதிகரிப்பது தவிர்க்க முடியாது.
கடன்
பணவீக்கம் அதிகரிப்பதால் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை மற்றும் நிதிப் பற்றாக்குறையும் அதிகரிக்கும், இதனால் மத்திய அரசின் கடன் வாங்கும் அளவும் தேவையும் அதிகரிக்கும். இது வட்டி விகிதங்களில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். ஆனால் மத்திய அரசு கடன் வாங்காமல் அரசு சொத்துக்களை விற்பனை செய்தும், குத்தகை வாயிலாக நிதியை திரட்ட முயற்சி செய்து வருகிறது.