சவுதியின் எண்ணெய் நிறுவனமான அராம்கோ மீது வெற்றிகரமான ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஹவுத்தி போராளிகள் அறிவித்துள்ளனர்.
சவுதியின் முக்கிய வணிகமாக இருக்கும் எண்ணெய் வணிகத்தினை சீர்குலைக்கும் விதமாக, சவுதி அரேபியாவின் செங்கடல் நகரமான ஜெட்டாவில் உள்ள சவுதி அராம்கோ எண்ணெய் நிறுவனம் மீது, ஹவுத்தி படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. .
இந்த தாக்குதலில் அராம்கோவின் ஒரு எண்ணெய் உற்பத்தி நிலையம் வெடித்து சிதறியதாக தகவல்கள் வெளியாகின.
சவுதி அராம்கோ மீது தாக்குதல்
விடியற்காலையில் நடந்த இந்த தாக்குதல் நடந்ததாகவும் கூறப்படுகிறது. அராம்கோ, அதன் எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொழிற்சாலைகள் பெரும்பாலும் சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில், ஜெட்டாவிலிருந்து 1,000 கி.மீ தொலைவில் உள்ளன. ஆக இந்த தாக்குதலினால் நிச்சயம் உற்பத்தி பாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு
உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தியாளர் மீது இப்படி தாக்குதல் நடந்திருப்பது, உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்படுமே என்ற கவலையும் எழுந்துள்ளது. இந்த நிலையில் சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலையானது மீண்டும் உச்சம் தொட ஆரம்பித்துள்ளது.
WTI கச்சா எண்ணெய் நிலவரம்
தொடர்ச்சியாக இன்றோடு கடந்த ஐந்து தினங்களாகவே ஏற்றம் கண்டு வரும் WTI கச்சா எண்ணெய் விலையானது, தற்போது 1.88% ஏற்றம் கண்டுள்ளது. தற்போது பேரலுக்கு 67.38 டாலர்களாகவும் வர்த்தகமாகி வருகின்றது. இது இன்று அதிகபட்சமாக 67.98 டாலர்களை தொட்ட நிலையில், இன்னும் சற்று ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகிறது.
பிரெண்ட் கச்சா எண்ணெய் நிலவரம்
பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையும் தொடர்ச்சியாக இந்த தாக்குதலுக்கு பிறகு ஏற்றம் கண்டு வருகிறது. தற்போது இதன் விலையானது 1.92% ஏற்றம் கண்டுள்ளது. தற்போது பேரலுக்கு 70.69 டாலர்களாகவும் வர்த்தகமாகி வருகின்றது. இது இன்று அதிகபட்சமாக 71.38 டாலர்களை தொட்ட நிலையில், தற்போது சற்று குறைந்துள்ளது. எனினும் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலையானது ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகிறது.
இவ்வளவு உற்பத்தி பாதிப்பா?
சவுதியின் ராஸ் தனுரா துறைமுகத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. இந்த டெர்மினலில் இருந்து ஒரு நாளைக்கு சுமார் 6.5 மில்லியன் பேரல் எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இது சுமார் 7% தேவையாகும். இது உலகின் மிகவும் பாதுகாக்கப்பட்ட ஒரு பகுதியாகவும் இருந்து வந்த நிலையில், இதன் மீது தான் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனினும் இந்த தாக்குதலினால் எவ்வளவு சேதம் என்பது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.
உற்பத்தி குறைவு
ஏற்கனவே கொரோனா காலத்தில் தேவை குறைந்த நிலையில், ஓபெக் நாடுகள் உற்பத்தியினை வெகுவாக குறைத்துள்ளன. இந்த நிலையில், தற்போது, இந்த தாக்குதல் காரணமாக உற்பத்தியும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த சமயத்தில் உலகம் முழுவதிலும் இருந்து தேவை மீண்டு வர ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலையானது கிடு கிடு ஏற்றத்தினைக் காண தொடங்கியுள்ளது.
அதிக இறக்குமதி
இதற்கிடையில் இந்தியா அதிகளவிலான எண்ணெய் இறக்குமதி செய்து வரும் நாடாக உள்ளது. அதிலும் குறிப்பாக சவுதியிடம் முக்கிய இறக்குமதியாளராக இந்தியா இருந்து வருகிறது. இந்த நிலையில் இதில் ஏதேனும் பாதிப்பு இருக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏற்கனவே இங்கு பெட்ரோல் டீசல் விலையானது இங்கு சில நகரங்களில் 100 ரூபாயினை தொட்டுள்ள நிலையில், இனி விலை எப்படியிருக்குமோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.