நாட்டின் எரிபொருள் உபயோகத்தில் பெரும்பாலானவற்றை இறக்குமதி செய்யும் இந்தியா, எரிபொருள் நாடுகளில் ஒரு பிரச்சனை எனில் இங்கு எரிபொருள் விலையானது தீயாய் பற்றிக் கொண்டு எரிகிறது. ஏனெனில் பெட்ரோல் டீசல் விலையானது அந்தளவுக்கு தாறுமாறாக அதிகரித்து வருகிறது.
ஏற்கனவே ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் பிரச்சனை இருந்து வந்த நிலையில், ஈரானின் புரட்சிப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் காசிம் சுலைமானி தாக்கப்பட்டு இறந்ததிலிருந்து, தற்போது பிரச்சனை மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது.
இது மத்திய கிழக்கு பகுதிகளில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, கச்சா எண்ணெய் விலையும் தாறுமாறாக ஏற்றம் கண்டு வருகிறது.
கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு
இப்படி ஒரு நிலை நெருக்கடியான நிலையில் ஈரானும் அமெரிக்காவும் இருக்கும் நிலையில், இதற்கிடையில் இந்தியா போன்ற கச்சா எண்ணெய் அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடுகள் பெரும் இழப்பை சந்திக்க நேரிட்டுள்ளது. இதற்கு முழுக்காரணமும் அமெரிக்கா தான் என்று கூறப்படுகிறது. சொல்லப்போனால் இதனால் கச்சா எண்ணெய் விலை 4.5 சதவிகிதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது.
விலையை ஊக்குவிக்கும் ஈரான் பதற்றம்
அதிலும் WTI கச்சா எண்ணெய் விலை 4.53 சதவிகிதம் அதிகரித்து, பேரலுக்கு 65.54 டாலர்களாக அதிகரித்தது. இதே பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையானது தற்போது பேரலுக்கு 69.17 டாலர்களாக வர்த்தகமாகி வந்தாலும் இன்று காலை 71.28 டாலர் வரை சென்று தற்போது சற்று இறக்கம் கண்டுள்ளது. மேலும் இந்த விலையை ஊக்கப்படுத்தும் விதமா,க அமெரிக்கா ஈரான் இடையிலான பதற்றங்கள் நாளுக்கு நாள், ஏன் மணிக்கு மணி கூடிக் கொண்டே போகின்றது.
அணுசக்தி ஒப்பந்த பிரச்சனை
கடந்த 2015ல் இருந்தே அமெரிக்காவிற்கும் ஈரானுக்கு இடையே ஏற்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் பிரச்சனை ஏற்பட்டது. இதில் சரியான சமரசம் ஏற்படாததால் அமெரிக்கா இதிலிருந்து விலகியது. அமெரிக்கா விலகியது முதலே அங்காளி பங்காளி சண்டையாக தொடர்ந்து வருகிறது. அதிலும் தொடர்ச்சியாக ஈரான் மீது பொருளாதார தடை, ஈரானிடன் எண்ணெய் வாங்கினால் வாங்கும் நாடுகளும் பொருளாதார தடை என அமெரிக்கா பயமுறுத்தி வந்தது. இதனால் பொருளாதார அடைப்படையில் ஈரான் நிலைகுலைந்து போனது.
துவண்டு போன பொருளாதாரம்
ஏனெனில் ஈரானின் முக்கிய பொருளாதார அம்சமாக கருதப்படும் எண்ணெய் வர்த்தகத்திலேயே அமெரிக்கா கைவைத்தால், ஈரானின் அடிமடியிலே கைவைத்தது போன்று ஈரான் உணர்ந்தது. ஏனெனில் பொருளாதாரத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த இரு நாடுகளுக்கு இடையே பிரச்சனை அவ்வப்போது இருந்து கொண்டே தான் இருந்து வந்தது. தற்போது மிகப்பெரிய வெடியாக வெடிக்க தொடங்கியுள்ளது.
பல பிரச்சனைகள்
அமெரிக்கா ஈரான் இடையேயான இருக்கும் பிரச்சினைகள் ஒன்று இரண்டு அல்ல, அது ஏராளம். குறிப்பாக அணு ஆயுத தவிர்ப்பு விவகாரம், யூரேனியம் செறிவூட்டல், பொருளாதார தடைகள் போன்ற பல விவகாரங்கள் காரணமாக இரு நாடுகளிடையே ஏற்கனவே அசாதாரண சூழல் நிலவி வந்தது. இந்த நிலையில் இப்படி ஒரு தாக்குதல் நடந்திருப்பது மேலும் பிரச்சனையை அதிகரித்துள்ளது.
இரு நாடுகளும் எச்சரிக்கை
அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்ட நிலையில், அமெரிக்கா ஈரானில் உள்ள 52 முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்துவோம் என சவால் விடுத்தது. இதற்காக அமெரிக்காவை பழி தீர்த்தே தீருவோம் என ஈரானும் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தது.
12 இடங்களில் தாக்குதல்
இந்த நிலையில், ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது ஈரான் 12க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. குறிப்பாக
ஈராக்கின் அல்-ஆசாத் மற்றும் இர்பில் பகுதிகளில் உள்ள அமெரிக்க விமானப்படைகள் முகாம் மற்றும் அதன் கூட்டணி படைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
பறக்கும் எண்ணெய் விலை
இது வரை அமெரிக்கா மட்டுமே தாக்குதல் நடத்தி வந்த நிலையில், அமெரிக்காவுக்கு பதிலடியாக ஈரானும் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதால், மத்திய கிழக்கு நாடுகளில் உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை 4 சதவிகிதத்துக்கும் மேலாக உயர்ந்துள்ளது.
ஈரானில் விமானம விபத்து
மேலும் தற்போது ஈரான் நாட்டின் தெஹ்ரானில் உள்ள இமாம் கொமையினி விமான நிலையத்திலிருந்து சுமார் 170 பயணிகளுடன் புறப்பட்ட உக்ரைன் நாட்டு விமானம், விபத்துக்கு உள்ளானதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும் இது தாக்குதலா தற்செயலாக நடந்த விபத்தா அல்லது தாக்குதலா என்ற அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. எனினும் இந்த விமானத்தில் தொழில் நுட்ப கோளாறுகள் காரணமாக விபத்து நடந்திருக்கலாம் என்றும் முதல்கட்ட அறிக்கை வெளியாகியுள்ளது. ஏற்கனவே எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல தற்போது இந்த விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுக்கு பாதிப்பு
அமெரிக்கா ஈரானின் இந்த பிரச்சனையால், அதிகளவில் எண்ணெய் இறக்குமதி செய்து வரும் இந்தியா, மேலும் அதிக தொகையை எரிபொருளுக்காக செலவிட வேண்டியிருக்கும். ஏற்கனவே எரிபொருள் விலைகள் தாறுமாறாக ஏறிக் கொண்டிருக்கும் நிலையில், இது மேலும் விலை அதிகரிப்பை ஏற்படுத்தலாம் என்றும் கருதப்படுகிறது. இதனால் சில்லறை பணவீக்கம் மேலும் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது, ஆக மொத்தம் பிரச்சனை ஈரான் அமெரிக்காவில் என்றாலும், அதன் பலனையும் இந்தியா அனுபவிக்க வேண்டியுள்ளது.