அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவும் போர் காரணமாக கச்சா எண்ணெயின் விலை ஜூன் 11-ம் தேதியான இன்றைய தினம் கடுமையாக அதிகரித்துள்ளது. இதனால் சர்வதேச சந்தைகளில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. விலை அதிகரிப்பு இந்திய பொருளாதாரத்திற்கு கவலையளிக்கும் விஷயமாக மாறியிருக்கிறது. ஏனெனில் நாம் 85 சதவீதத்திற்கும் அதிகமான கச்சா எண்ணெய்யை வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்கிறோம். தொடர்ந்து விலை உயர்ந்தால் ரூபாய் மதிப்பு சரிவதோடு, பணவீக்கமும் அதிகரிக்கும். இதனால் எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் உற்பத்தி துறை என பல்வேறு துறைகளில் தாக்கம் ஏற்படும்.
பிரண்ட் கச்சா எண்ணெய் விலை சுமார் 2.5% அதிகரித்து பேரல் 1-க்கு, 95.40 டாலருக்கு விற்பனையாகிறது. WTI கச்சா எண்ணெய் 2.9 சதவீதம் அதிகரித்து 92.63 டாலருக்கு விற்பனையாகிறது.
இந்த விலை அதிகரிப்பிற்கு காரணம் அமெரிக்கா, ஈரானின் பல பகுதிகளில் புதிய தாக்குதலை நடத்தியது. இதனால் இரு நாடுகளும் ஒப்புக்கொண்ட தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்து விடுமோ என்ற பயம் உலகளவில் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க தாக்குதலைத் தொடர்ந்து, அதற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்பதற்காக ஈரான் ராணுவம், எண்ணெய் டேங்கர்கள் மற்றும் வர்த்தகக் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லக்கூடாது என அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஒருவேளை இந்த அறிவிப்பை மீறி கப்பல்கள் சென்றால் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

ஈரான் இப்படி ஒரு எச்சரிக்கையை விடுத்திருந்தாலும், இன்னும் ஹார்மோஸ் ஜலசந்தி வழியாகத்தான் தொடர்ந்து அமெரிக்க கப்பல்கள் சென்று வருவதாக அந்நாட்டு ராணுவம் தங்கள் அதிகாரபூர்வ X பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளது. மேலும் தன் நாட்டுப் போர்க்கப்பல்கள் தாக்கப்பட்டதாக வரும் செய்திகளையும் அமெரிக்கா மறுத்துள்ளது.
உலகெங்கிலும் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெயில் ஐந்தில் ஒரு பங்கு இந்த சிறிய கடல்வழி பாதையின் மூலமாகத்தான் உலக நாடுகளை சென்றடைகிறது. இந்நிலையில் இந்த பாதையை மூடிவிட்டால் மீண்டும் உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் சப்ளை செய்யப்படுவதில் பிரச்சனை ஏற்படும். இது உலகப் பொருளாதாரத்திற்கு நல்லதல்ல.
இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் போர் உலக நாடுகளை பாதித்ததோடு, அந்தந்த நாடுகளையும் கடுமையாக பாதித்துள்ளது. அமெரிக்கா சேமித்து வைத்திருந்த கச்சா எண்ணெய் அளவு 7.2 மில்லியன் பேரல்களுக்கும் அதிகமாக குறைந்துள்ளது. இந்த பிரச்சனைக்கு மத்தியில் சுமார் 4 மில்லியன் பேரல்கள் மட்டுமே குறையும் என்று ஆய்வாளர்கள் கணித்திருந்த நிலையில், அதை விட அதிகமான பேரல்கள் குறைந்திருக்கிறது. அமெரிக்காவின் முக்கிய எண்ணெய் சேமிப்பு மையமாக இருக்கும் ஓக்லஹோமாவின் குஷிங்கிலும் கச்சா எண்ணெய் கையிருப்பு குறைந்துள்ளது.
பணவீக்கம் ஏற்பட்டு ஒரு துறை பாதிப்படையும்போது அதை சார்ந்த மற்ற துறைகளும் பாதிப்படையும். இதைத்தான் பொருளாதாரத்தில் பாஸ் த்ரு எஃபெக்ட் என்று கூறுவார்கள். எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்தால் பெட்ரோல், டீசல் விலையும் தொடர்ந்து உயரும். அப்படியானால் பெயிண்ட் மற்றும் டயர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படும். ஏனெனில் பெட்ரோலிய பொருட்கள் தான் பெயிண்ட் தயாரிப்பதற்கு மூலப்பொருட்களாக இருக்கிறது. அதேபோல ஏவியேஷன் டர்பைன் ஃப்யூயல் என்று சொல்லப்படுகிற விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருள் விலை அதிகரித்தாலும் அதை ஈடுகட்ட டிக்கெட் விலை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications