உக்ரைன் நாட்டிற்கு மேற்கத்திய நாடுகளின் ஆதரவாக நிற்பதையும் தாண்டி, ரஷ்ய அதிபர் உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க அறிவிப்பு விடுத்த நிலையில், ரஷ்ய பாதுகாப்புப் படை துப்பாக்கி சுடு, பீரங்கி தாக்குதலைத் தாண்டி உக்ரைன் நாட்டின் கெய்வ், கார்கிவ் பகுதிகள் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதலைத் துவங்கியுள்ளது.
உக்ரைன்-க்கு அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய யூனியன் போன்ற பெரும்பாலான வல்லரசு நாடுகள் ஒத்துழைப்பு கொடுக்கும் நிலையில் ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இதனால் ரஷ்யா இந்தப் போரை 3 உலகப் போர் அளவுக்கு கொண்டு செல்லும் வாய்ப்பு இருப்பதாக உலக நாடுகள் அச்சத்தில் உள்ளது.
இந்த நிலையில் ரஷ்யா - உக்ரைன் போர் மூலம் முதல் பாதிப்பு என்ன தெரியுமா..?
ரஷ்யா
உலகிலேயே 3வது மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடாக ரஷ்யா இருக்கும் நிலையில், இந்தப் போர் மூலம் ஐரோப்பா, சீனா, இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கும். இதன் வாயிலாகவே புடின் போர் அறிவிப்பு வெளியிட்ட அடுத்த நொடியில் இருந்து பங்குச்சந்தை வீழ்ச்சிக்கு இணையாக கச்சா எண்ணெய் விலை உயர துவங்கியுள்ளது.
கச்சா எண்ணெய் விலை
இன்று காலை வர்த்தகத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர துவங்கியுள்ளது. WTI கச்சா எண்ணெய் விலை 4.44 சதவீதம் உயர்ந்து 96.19 டாலராக உள்ளது, இதேபோல் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 4.55 சதவீதம் உயர்ந்து 101.25 டாலராக உயர்வு, மேலும் பிரிட்டன் மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு ரஷ்யாவின் முக்கிய ஏற்றுமதி பொருளாக இருக்கும் இயற்கை எரிவாயு விலை 4.17 சதவீதம் உயர்ந்து 4.816 டாலராக உயர்வு.
பணவீக்கம் முதல் பொருளாதாரம் வரை
அனைத்து எரிபொருள் விலையும் 4 சதவீதம் முதல் 5 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து உலகின் அனைத்து நாடுகளிலும் உற்பத்தி மற்றும் விற்பனை பொருட்களின் விலை உயரும். இதனால் ஏற்கனவே மோசமாக இருக்கும் உலக நாடுகளின் பணவீக்கம் அதல பாதாளத்திற்குச் செல்லும், இதன் சங்கிலித் தொடர் பாதிப்பாக நாணய மதிப்பு, மக்களின் வாழ்வாதாரம், வருமான இழப்பு, வேலைவாய்ப்பு இழப்பு, பொருளாதாரச் சரிவு எனப் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
5 மாநில தேர்தல்
இந்த மோசமான சூழ்நிலையில் பிரதமர் மோடி அரசு 5 மாநில தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக வழக்கம் போல் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் வைத்துள்ளது. நவம்பர் 4ஆம் தேதி மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை குறைந்த பின்பு நவம்பர் 14 ஆம் தேதி முதல் இன்று வரையில் பெட்ரோல், டீசல் விலையில் எவ்விதமான விலை மாற்றத்தையும் செய்யவில்லை.
இந்தியா, பிரிட்டன்
85 - 90 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்டு இருந்த கச்சா எண்ணெய் விலை தற்போது 102 டாலர் வரையில் உயர்ந்துள்ளதால், தேர்தல் முடிவுக்குப் பின் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 120 -130 ரூபாய் வரையில் உயர வாய்ப்பு உள்ளது. இந்தியா எப்படிக் கச்சா எண்ணெய்க்காக உலக நாடுகளை நம்பியிருக்கிறதோ, பிரிட்டன் மற்றும் ஐரோப்பா இயற்கை எரிவாயுவுக்காக ரஷ்யாவை நம்பியுள்ளது.