சமீபத்திய காலமாக முதலீட்டாளர்கள் மத்தியில் கிரிப்டோகரன்சிகள் பெரும் குழப்பத்தினை ஏற்படுத்தி வருகின்றன எனலாம். எதிர்காலத்தில் தங்கத்திற்கு மாற்றாக இருக்கலாம் என்ற பெருத்த எதிர்பார்ப்புகள் இருந்து வந்தது.
ஆனால் இன்று தங்கத்திற்கு எதிர்மாறாக தொடர்ந்து கிரிப்டோக்கள் சரிவினைக் கண்டு வருகின்றன.
கிரிப்டோகரன்சி சந்தையில் தொடர்ந்து ஏற்பட்டுள்ள சரிவுக்கு மத்தியில் அதன் சந்தை மதிப்பு 9.83% குறைந்து, 1.40 டிரில்லியன் டாலராக சரிவினைக் கண்டுள்ளது.
தொடர் சரிவில் பிட்காயின்
குறிப்பாக கிரிப்டோகரன்சிகளில் முதன்மையான கரன்சியாக இருந்து வந்த பிட்காயின் மதிப்பானது, கடந்த 24 மணி நேரத்தில் இன்னும் மோசமான சரிவினைக் எட்டியுள்ளது. கடந்த 7 நாட்களில் மட்டும் பிட்காயின் மதிப்பானது 19.63 சதவீதம் சரிவினைக் கண்டுள்ளது. இதே கடந்த 24 மணி நேரத்தில் 7% மேலாக மோசமான சரிவினைக் கண்டுள்ளது. இது இன்னும் சரியலாமோ என்ற அச்சத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கும் மேலாக சரிவு
ஏனெனில் பிட்காயின் மதிப்பானது அதன் ஆல் டைம் உச்சத்தில் இருந்து பாதிக்கும் மேலான சரிவினைக் கண்டுள்ளது. இதன் ஆல் டைம் உச்சமான 69000 டாலர்களுடன் ஒப்பிடும்போது, இன்று காலை நிலவரப்படி 29,763.13 டாலர்கள் வரையில் சென்றும் தற்போது 31,631.25 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. நடப்பு ஆண்டில் பிட்காயினும் இதுவரையில் 32.27 சதவீதம் சரிவினையே கண்டுள்ளது.
எத்தேரியம்
இதே மற்றொரு முக்கிய கரன்சியான எத்தேரியமும் காலையில் 7 சதவீதத்திற்கும் மேலாக குறைந்து, 2317 டாலர்களாக வர்த்தகமாகியது. எனினும் தற்போது 2.17 சதவீதம் சரிந்து, 2399.58 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இன்று அதிகபட்சமாக 2466.6 டாலர்கள் வரையில் சென்ற எத்தேரியம், குறைந்தபட்சமாக 2200.2 டாலர்கள் வரையிலும் தொட்டுள்ளது. இதன் ஆல்டைம் லோ 1701.10 டாலர்களாகும். நடப்பு ஆண்டில் இதுவரையில் 36.07 சதவீதம் சரிவினையே கண்டுள்ளது.
நிபுணர்களின் கருத்து என்ன?
முதலீட்டாளர்களிடையே உள்ள மிகுந்த அச்சத்திற்கு மத்தியில், கிரிப்டோகரன்சிகளில் உள்ள தங்களது மொத்த கையிருப்புகளை விற்பனையாளர்கள் விற்பனை செய்து வருவதாகவும் தெரிகிறது. இது சந்தையில் பெரும் சரிவினைக் தூண்டுகின்றது. இதன் காரணமாகத் தான் இன்று காலையில் பிட்காயின் மதிப்பானது ஜூலை 2021க்கு பிறகு 30,000 டாலர்களுக்கு கீழாக வர்த்தகமாகி வருகின்றது.
புதிய முதலீட்டாளர்கள் தயக்கம்
முதலீட்டாளர்கள் இனியும் தங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படாமல் இருக்க சந்தையில், தங்களது ஆர்டர்களை குறைத்து வருகின்றனர். இது மேற்கொண்டு தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றது. மேலும் புதிய முதலீட்டாளர்கள் தற்போதைய ஏற்ற இறக்கத்தின் மத்தியில் ரிஸ்க் எடுக்கவும் தயாராக இல்லை. ஆக இதுவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் பதற்றம்
தற்போது சர்வதேச அளவில் நிலவி வரும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், செல்லிங் அழுத்தம் அதிகம் காணப்படுகின்றது. பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் பணவீக்க விகிதமானது உச்சத்தினை எட்டியுள்ளது. இதற்கிடையில் ரெசசன் அச்சமும் சந்தையில் நிலவி வருகின்றது. இதுவும் கிரிப்டோகரன்சிகள் சரிவுக்கு காரணமாக அமைந்துள்ளது.