இன்று உலகம் முழுவதும் விரும்பப்படும் விருப்பமான முதலீடுகளில் ஒன்றாக கிரிப்டோகரன்சி முதலீடு பார்க்கப்படுகிறது.
ஆனால் இந்தியாவிலோ, கிரிப்டோகரன்சிகளை தடை செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.
அதோடு புழக்கத்தில் இருக்கும் அனைத்து வகையான கிரிப்டோகரன்சிகளையும் தடை விதிக்கும் மசோதாவை மத்திய அரசாங்கம் நாடாளுமன்றத்தின் கூட்டத்தில் கொண்டுவரப் போவதாகத் தகவல் வெளியானது.
நிதியமைச்சரின் கருத்து
இதற்கு பல தரப்பிலும் விமர்சனம் கிளம்பிய நிலையில், நம் நாட்டுக்கு ஏற்ற மாதிரியான கிரிப்டோகரன்சிகளை, ரூபாயின் மதிப்பில் உருவாக்க மத்திய அரசாங்கம் முனைப்புடன் இருப்பதாகத் கூறப்படுகிறது. இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உச்ச நீதிமன்றமும், இந்திய ரிசர்வ் வங்கியும் குறிப்பிட்டிருப்பதுபோல, வெளிநாட்டு கிரிப்டோகரன்சிகள் தடை செய்யவும், இந்தியாவுக்கு ஏற்ற மாதிரியான கிரிப்டோ கரன்சிகள் உருவாக்கம் ஆரம்பநிலையில் உள்ளது. ஆகையால், கிரிப்டோகரன்சி முதலீட்டை முற்றிலுமாகத் தடை செய்யும் நிலை இருக்காது.
விரைவில் கிரிப்டோகரன்சி குறித்த அறிவிப்பு வரும்
கூடிய விரைவில் இந்திய கிரிப்டோகரன்சி குறித்த விஷயங்கள் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் வெளியாகும். அதற்கான விதிமுறைகள் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த நடவடிக்கைகள் செயல்பாட்டில் உள்ளன என கூறினார். ஆக மேற்கண்ட கருத்துக்களை வைத்து பார்க்கும் போது, அரசாங்கம் இன்னும் பிட்காயின் குறித்த உறுதியான அறிவிப்புகளை எடுக்கவில்லை எனலாம்.
இந்தியாவில் கிரிப்டோகரன்சி முதலீடு அதிகரிப்பு
தற்போதைய நிலவரப்படி அரசாங்கம் பிட்காயின் குறித்த குறிப்பை அரசாங்கம் தயாரித்து வருகிறது. கடந்த 2018ல் இந்தியாவின் மத்திய வங்கி கிரிப்டோகரன்சி வர்த்தகத்தினை தடை செய்தது. ஆனால் மார்ச் 2020ல் கிரிப்டோகரன்சி மீதான தடையை நீக்கியது. இதற்கிடையில் இந்தியாவின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்சான WazirXல், பிப்ரவரி 2021ல் கிட்டதட்ட 2.3 பில்லியன் டாலர் மதிப்பிலான கிரிப்டோகரன்சிகள் வர்த்தகம் செய்யப்பட்டன. இது டிசம்பர் 2020ல் 1.4 பில்லியன் டாலராக இருந்தது. கிரிப்டோகரன்சியை இன்னும் பெரும்பாலான இடங்களில் பயன்படுத்த முடியாததால், இது ஊகங்களால் உந்தப்படுகின்றன.
அரசாங்கம் கவலை ஏன்?
அதெல்லாம் சரி, பிட்காயின் பற்றி அரசாங்கமும் மத்திய வங்கிகளும் கவலைப்படுவது ஏன்? ஏனெனில் பிட்காயின் என்பது பிரதான முதலீடாகிவிட்டால், வட்டி விகிதங்கள் மற்றும் பண வழங்கல் போன்றவற்றின் மீதான கட்டுப்பாட்டை அவர்கள் இழக்கக்கூடும். இது பொருளாதாரத்தினை கட்டுபடுத்தும் திறனை பாதிக்கும். அதோடு அரசாங்கம் வரி வருவாயிலும் தடுமாற்றத்தினை காணலாம்.
இந்தியாவுக்கு தான் இழப்பு
கிரிப்டோகரன்சிகள் இந்த வேகத்தில் தொடர்ந்தால், அதனை கட்டுப்படுத்துவதை தவிர்க்க முடியாது. அதனை பற்றிய ஒழுங்குமுறை மிக கடினம். இருப்பினும் கிரிப்டோகரன்சிகளும், பிளாக்செயினும் நிதி தொழில்நுட்பத்தில் விளிம்பில் உள்ளன. அரசாங்கம் இதற்கு கட்டுப்பாட்டினை அதிகரித்தால், அதனால் இந்தியாவுக்கு இழப்பு தான் அதிகம்.
ஒவ்வொரு துறையிலும் பயன்
ஏனெனில் பல துறைகளில் ஒப்பந்தங்களை எளிதாக்கும். குறிப்பாக வங்கி, இன்சூரன்ஸ் மற்றும் கணக்கியல் என ஒவ்வொரு துறையிலும் மேம்படுத்த முடியும். ஆக கிரிப்டோகரன்சியை தடை செய்வதன் மூலம் இந்தியா தவறு செய்கிறது என்று தான் கூற வேண்டும். இன்று உலக நாடுகளில் ஒரு முதலீடாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கிரிட்டோகரன்சிகள், வருங்காலத்தில் பிரம்மாண்ட வளர்ச்சியினைக் கூட காணலாம்.
பிட்காயின் மதிப்பு
அந்த வகையில் இன்று உலகின் பெரும்பாலான நாடுகளும் ஏற்றுக் கொண்ட ஒரு டிஜிட்டல் நாணயம் தான் பிட்காயின். இதன் மதிப்பு நாளுக்கு நாள் உச்சம் தொட்டு வருகின்றது. அவ்வப்போது சரிவினைக் கண்டாலும், தொடர்ந்து ஏற்றப்பாதையில் தான் காணப்படுகிறது. இன்று இதன் விலையானது 55,000 டாலர் என்ற லெவலில் உள்ளது. இது கடந்த ஞாயிற்றுகிழமையன்று அதன் வரலாற்று உச்சமான 61,711.87 டாலர்களை தொட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சரிவானது புராபிட் புக்கிங் காரணத்தினால் இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.