உலக நாடுகள் கிரிப்டோகரன்சி முதலீடு மற்றும் உற்பத்தி குறித்து முக்கியமான முடிவுகளை வேக வேகமாக எடுத்து வரும் நிலையில், இந்திய அரசும் களத்தில் இறங்கியுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கிரிப்டோகரன்சி குறித்த முடிவுகளை எடுக்கவும் ஆய்வு செய்யவும் பாராளுமன்ற நிலைக்குழு அமைத்துள்ளது அனைவருக்கும் தெரியும்.
கிரிப்டோகரன்சிக்கான பாராளுமன்ற நிலைக்குழு-வின் முதல் ஆலோசனைக் கூட்டத்தில் சில முக்கியமான விஷயத்தை ஆலோசனை செய்து முக்கியமான முடிவும் எடுக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவின் முடிவு
இளம் முதலீட்டாளர்கள் நிறைந்த இந்தியா, சீனா-வை போல் கிரிப்டோகரன்சி சார்ந்த வர்த்தகத்தை மொத்தமாக மூடுவதா இல்லை அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா போலக் கிரிப்டோகரன்சி பயன்பாட்டை ஆதரிப்பதா என்ற முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய நிலையில் மத்திய அரசு உள்ளது.
ஜெயந்த் சின்ஹா
இதற்காக நாடாளுமன்ற உறுப்பினரான ஜெயந்த் சின்ஹா தலைமையில் நிதித்துறை பாராளுமன்ற நிலைக்குழு உருவாக்கப்பட்டு உள்ளது. இக்குழு திங்கட்கிழமை கிரிப்டோகரன்சி துறையைச் சார்ந்த பல முக்கிய அதிகாரிகள் மற்றும் நிபுணர்களிடம் ஆலோனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் ஐஐஎம் கல்லூரி அறிவுரை பெறப்பட்டு உள்ளது.
கிரிப்டோகரன்சி
கிரிப்டோகரன்சி-காக அமைக்கப்பட்ட நிதித்துறை பாராளுமன்ற நிலைக்குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டத்தில், பெரும்பாலான வல்லுனர்கள் கருத்தின் படி, இந்தியாவில் கிரிப்டோகரன்சியைத் தடை செய்வதால் எவ்விதமான பலனும் இல்லை, ஆனால் இதே கிரிப்டோகரன்சி சந்தை ஒழுங்கு முறைப்படுத்தி வர்த்தகத்தைத் தொடர்ந்தால் இத்துறை டெக்னாலஜி மூலம் எதிர்காலத்தில் இந்தியாவிற்குப் பல வகையான நன்மை கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.
பாராளுமன்ற நிலைக்குழு
இந்நிலையில் அடுத்த ஆலோசனைக் கூட்டம் விரைவில் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் கிரிப்டோகரன்சி மிக முக்கிய முதலீடாக மாறியுள்ள நிலையிலும் அதிகப்படியான முதலீட்டாளர்களைக் குறுகிய காலகட்டத்தில் ஈர்த்துள்ள காரணத்தாலும் இதுகுறித்த முடிவை விரைவில் எடுக்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.
முக்கியப் பிரச்சனைகள்
மேலும் இந்தக் கூட்டத்தில் சில கிரிப்டோகரன்சிகள் அதிகப்படியான லாபத்தை அளிக்கும் காரணத்தால் ஒழுங்கு முறைப்படுத்த வேண்டும் என்றும், முதலீட்டாளர்களை ஆபத்தில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் கிரிப்டோகரன்சி குறித்த வெளிப்படைத்தன்மை அற்ற விளம்பரங்கள் அதிகமாக உள்ளதாகவும் இக்கூட்டத்தில் கூறப்பட்டு உள்ளது.
மத்திய அரசு
மோடி தலைமையிலான மத்திய அரசு கிரிப்டோகரன்சி குறித்த மசோதாவை ஏற்கனவே தயாரித்துள்ளது. இதற்கான அறிவிப்பை பட்ஜெட் வெளியிடும் போது அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் அனைத்து தனியார் கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச்-ம் தடை செய்ய வேண்டும் எனத் திட்டமும் சில மாதங்களுக்கு முன்பு ஆலோசனையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.