இந்திய ரீடைல் கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்கள் கடந்த ஒரு வாரமாகக் கிரிப்டோ மசோதா குறித்து வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு இருந்த நிலையில், இன்று நாடாளுமன்ற கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சில முக்கியமான முடிவைத் தெரிவித்துள்ளார்.
கிரிப்டோகரன்சியை ஒழுங்குமுறை
இந்தியாவில் கிரிப்டோகரன்சியை ஒழுங்கு முறைப்படுத்த புதிய மசோதா-வை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளோம். ஏற்கனவே உருவாக்கப்பட்ட மசோதாவில் மாறுபட்ட கோணத்தில் மறு ஆய்வு செய்ய வேண்டிய நிலை இருக்கும் காரணத்தால் தற்போது புதிய மசோதா-வை உருவாக்க முடிவு செய்துள்ளோம் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ராஜியசபா கூட்டத்தில் தெரிவித்தார்.
ஆலோசனை
கிரிப்டோகரன்சியை ஒழுங்கு முறைப்படுத்துவதில் மிகப்பெரிய அளவிலான ஆலோசனை செய்ய வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளதால், புதிய மசோதா வரும் வரையில் காத்திருக்க வேண்டும் எனவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ராஜியசபா கூட்டத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்.
பிரைவேட் கிரிப்டோகரன்சி தடை
மத்திய அரசு Cryptocurrency and Regulation of Official Digital Currency Bill 2021, என்ற தலைமையில் உருவாக்கிய மசோதா குளிர்காலக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த மசோதாவின் மூலம் பிரைவேட் கிரிப்டோகரன்சி தடை செய்ய உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புதிய மசோதா வரும்
கிரிப்டோகரன்சியின் ஆபத்துகளையும், அது தவறான கைகளுக்குச் செல்வது குறித்துக் கண்காணிப்புச் செய்து வருகிறோம். இந்நிலையில் புதிய மசோதாவை உருவாக்கி, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் நிலையில் இருக்கிறோம் எனவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ராஜியசபா கூட்டத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்.
கிரிப்டோகரன்சி விளம்பர தடை
மேலும் கிரிப்டோகரன்சி விளம்பர தடை குறித்து இன்னும் எவ்விதமான முடிவும் எடுக்கப்படவில்லை. மக்களுக்கு ரிசர்வ் வங்கி மற்றும் செபி வாயிலாக விழிப்புணர்வு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் நிர்மலா சீதாராமன் கூறினார்.
மத்திய அரசு ஏற்கனவே தவறான மற்றும் பொய்யான கிரிப்டோ விளம்பரங்களைக் கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.