உலகம் முழுவதும் வேகமாக வளர்ந்து வரும் கிரிப்டோ சந்தைக்கு ஆதரவாகப் பல நாடுகள் முக்கியமான முடிவுகளை எடுத்து வருகிறது, தடை செய்ய முடியாத காரணத்தாலும், உடனே கிரிப்டோ முதலீட்டையும், கிரிப்டோ சந்தையையும் ஒழுங்கு முறைப்படுத்த வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் இருப்பதாலும் இந்த முடிவை எடுக்க முக்கியக் காரணமாக விளங்குகிறது.
இந்நிலையில் கிரிப்டோ முதலீடுகள் சந்தைக்குப் பிரபலமாகி 10 வருடங்களே ஆன நிலையில் நிலையில் கிரிப்டோ சந்தை முக்கிய இடத்தை அடைந்துள்ளது.
கிரிப்டோ முதலீடு
கிரிப்டோ முதலீட்டுச் சந்தையில் இளம் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் முன்னணி டிஜிட்டல் கரன்சிகளில் அதிகப்படியான முதலீடுகள் குவிந்து வருகிறது. இதனால் மொத்த கிரிப்டோ சந்தையின் மதிப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
கிரிப்டோகரன்சி
கிரிப்டோகரன்சியின் மொத்த சந்தை மதிப்பு 3 டிரில்லியன் டாலர் அளவீட்டை எட்டியுள்ளது. இது கிட்டதட்ட ஆப்பிள், மைக்ரோசாப்ட், கூகுள், பேஸ்புக் ஆகிய நிறுவனங்களைக் காட்டிலும் அதிக மதிப்புடையதாக விளங்குகிறது. பங்குச்சந்தைகள் நாடு வாரியாகப் பிரியும் வேளையில் கிரிப்டோ சந்தை மொத்தமான கணக்கிடப்படும் காரணத்தால் குறைந்த காலகட்டத்திலேயே மிகப்பெரிய வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
பிட்காயின்
கிரிப்டோ சந்தையில் முக்கியக் கிரிப்டோ-வாக இருக்கும் பிட்காயின் இன்று வரலாற்றிலேயே முதல் முறையாக 68,000 டாலர் அளவீட்டைக் கடந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் 3 சதவீதம் வரையில் உயர்ந்து 68,192.92 டாலருக்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. இன்றைய வர்த்தகத்தில் 68,525.84 டாலர் என்ற வரலாற்று உச்ச அளவீட்டைப் பதிவு செய்துள்ளது.
எதிரியம்
இதேபோலே எதிரியம் 4,808.06 டாலர் அளவீட்டையும் தொட்டு உள்ளது, மேலும் ரிபிள், சோலானோ, கார்டானோ ஆகியவை வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இதேவேளையில் சமீபத்தில் மிகவும் பிரபலமான டோஜ்காயின் மற்றும் ஷிபா இனு சரிவைச் சந்தித்துள்ளது. மேலும் இன்றைய வர்த்தகத்தில் அதிகப்படியாக 4,839.92 டாலர் அளவீட்டைத் தொட்டு உள்ளது.
கிரிப்டோ ஆதிக்கம்
இதேவேளையில் பல நாடுகள் கிரிப்டோகரன்சியை அதிகாரப்பூர்வ நாணயமாக அறிவிக்க முயற்சி செய்து வருகிறது. மேலும் பல நிறுவனங்கள் கிரிப்டோகரன்சியைப் பேமெண்ட் ஆகப் பெற துவங்கியுள்ளது. இதனால் கிரிப்டோகரன்சியின் தேவை மற்றும் பயன்பாடு அதிகரித்துள்ள காரணத்தால் தொடர்ந்து முதலீடு பெற்று வருகிறது.