கிரிப்டோகரன்சிகளின் முதன்மையாக கரன்சியாக பார்க்கப்பட்ட பிட்காயின், முதலீட்டாளர்களின் பெரும் நம்பிக்கைகளில் ஒன்று எனலாம். ஆனால் பிட்காயின் மதிப்பானது மிக மோசமான சரிவினைக் கண்டு வருகின்றது எனலாம்.
இதற்கிடையில் பிட்காயின் மதிப்பானது 25000 டாலர்களுக்கு கீழாக காணப்படுகின்றது.
இதற்கிடையில் மற்ற அனைத்து ட்ஜிட்டல் கரன்சிகளும் பலத்த சரிவினைக் கண்டு வருகின்றது.
சந்தை மூலதனம் சரிவு
என்ன தான் காரணம்? ஏன் இந்தளவுக்கு மோசமான சரிவினைக் கண்டுள்ளது? இனியாவது ஏற்றம் காணுமா? இனி கிரிப்டோகளின் எதிர்காலம் எப்படியிருக்கும்? நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கிரிப்டோ சந்தையின் மூலதன மதிப்பானது, 1.04 டிரில்லியன் டாலர் என்ற அளவுக்கு (காலை 8 மணி நிலவரப்படி) சரிவினைக் கண்டுள்ளது.
பிட்காயின் நிலவரம் என்ன?
தற்போது 3 மணி நிலவரப்படி 12.06% சரிவினைக் கண்டு 24,167.79 டாலர்களாக சரிவினைக் கண்டு வர்த்தகமாகி வருகின்றது.
கொரோனா காலகட்டத்தில் பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் டாலரின் மதிப்பானது மிக மோசமான சரிவினைக் கண்டது. அந்த காலட்டத்தில் மக்களின் வாழ்வாதரத்திற்காக மத்திய வங்கியானது பணத்தினை அச்சிட தொடங்கியது. வேலையிழந்தவர்களுக்கு நேரடியாக கைகளில் பணப்புழக்கத்தினை அதிகரித்தது. இதன் காரணமாக டாலரின் மதிப்பானது சரிவினைக் கண்டது. இதன் காரணமாக அப்போது முதலீடுகள் அனைத்தும் அமெரிக்க சந்தையில் இருந்து வெளியேற தொடங்கின. இது பாதுகாப்பு புகலிடமான தங்கம், பத்திர சந்தை, கிரிப்டோகரன்சி என பிரிந்தன.
முதலீடுகள் திரும்பலாம்
இந்த நிலையில் தற்போது அமெரிக்க வளர்ச்சியினை மேம்படுத்தும் விதமாகவும், அதிகரித்து வரும் பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வரவும் வட்டி விகிதத்தினை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. வரவிருக்கும் கூட்டத்திலும் வட்டி விகிதம் கட்டாயம் அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இதன் காரணமாக வளர்ச்சி விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலீடுகள் வெளியேற்றம்
இதற்கிடையில் அமெரிக்க சந்தையில் இருந்து வெளியேறி வந்த முதலீடுகள் மீண்டும் சந்தையில் குவியத் தொடங்கியுள்ளன. இதன் காரண்மாக கிரிப்டோகரன்சிகளில் இருந்த முதலீடுகளும் வெளியேறத் தொடங்கியுள்ளன. இதற்கிடையில் தான் கிரிப்டோசந்தையும் சரிவினைக் கண்டு வருகின்றது.
ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம்
கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து டாலரின் மதிப்பு ஏற்றத்தில் இருந்து வருகின்றது. ஜூன் 14 அன்று சந்தையில் அதிக ஏற்ற இறக்கம் இருக்கலாம் என்றும், இது சந்தையில் மிகப்பெரிய அளவிலான தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக முதலீட்டாளார்கள் கவனமுடன் வர்த்தகம் செய்வது நல்லது என நிபுணர்கள் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications