இந்திய ஸ்டார்ட்அப் துறையைக் கவனித்தவர்களுக்கு யூனிகார்ன் என்றால் கட்டாயம் தெரியும், யூனிகார்ன் என்றால் ஒரு நிறுவனம் மதிப்பு எப்போது 1 பில்லியன் டாலர் அளவீட்டைத் தொடுகிறதோ அப்போது, அந்நிறுவனத்தை யூனிகார்ன் நிறுவனம் என்று சொல்வது வழக்கம்.
அந்த வகையில் இந்திய விளையாட்டுத் துறையில் முதல் முறையாக ஒரு விளையாட்டு அணி யூனிகார்ன் அந்தஸ்தைப் பெறப்போகும் அணி கட்டாயம் சிஎஸ்கே-வாகத் தான் இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
தோனி
தல தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4வது முறையாக ஐபிஎல் கோப்பை வென்று தமிழ்நாட்டு மக்களை ஆனந்தக் கண்ணீரில் ஆழ்த்தியது. அதிலும் வெற்றி கோப்பை பெற்று அணியில் கையில் கொடுத்துவிட்டு தோனி வழக்கம் போல் ஓரமாக நின்று அணியில் மகிழ்ச்சியடைவதைப் பார்த்தது தனி அழகு.
சிஎஸ்கே அணி
இந்த வெற்றி சிஎஸ்கே அணியின் மதிப்பை மிகப்பெரிய அளவில் உயர்த்தியுள்ளது என்றால் மிகையில்லை, சிஎஸ்கே அணியின் பங்கு விலை ஏப்ரல் 2021ல் இருந்து கடந்த வாரம் வரையில் சுமார் 68.75 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
இந்திய சிமெண்ட்ஸ்
இதைவிட முக்கியமான விஷயம் என்னவென்றால் சிஎஸ்கே அணியின் வெற்றி அதன் உரிமையாளரான இந்திய சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பையும் உயர்த்தியதோடு, இந்திய சிமெண்ட்ஸ் சந்தை மதிப்பீட்டை விடவும் சிஎஸ்கே உயர உள்ளது என்பது தான் ஷாக் கொடுக்கும் விஷயம்.
சிஎஸ்கே பங்கு விலை
பங்குச்சந்தையில் பட்டியலிடப்படாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஒரு பங்கின் விலை 135 ரூபாய் வரையில் உயர்ந்து மொத்த சிஎஸ்கே மதிப்பை 4,200 கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளது. இது 4வது முறையாக ஐபிஎல் கோப்பை வென்ற பின்பு நடந்தவை.
8,000 கோடி ரூபாய்
ஏப்ரல் 2021ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஒரு பங்கின் விலை 80 ரூபாய் மட்டுமே இதன் மூலம் சிஎஸ்கே அணியின் மதிப்பு 2,465 கோடி ரூபாயாக இருந்தது. இந்நிலையில் கூடிய விரைவில் சிஎஸ்கே அணியில் மொத்த மதிப்பு 8000 கோடி ரூபாய் அளவீட்டைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்படி..?
இரண்டு புதிய அணிகள்
அடுத்த ஐபிஎல் போட்டியில் இருந்து இரண்டு புதிய அணிகள் வர உள்ள நிலையில் மொத்த ஐபிஎல் வர்த்தகம் 4000 கோடி ரூபாய் முதல் 5000 கோடி ரூபாய் வரையில் உயர உள்ளது. இதன் மூலம் அனைத்து அணியின் மதிப்பும் அதிகரிக்கும்.
1 பில்லயன் டாலர் என்றால் 7,500 கோடி ரூபாய்.
200 ரூபாய்
அந்த வகையில் சிஎஸ்கே அணியின் ஒரு பங்கு மதிப்பு 200 ரூபாய் அளவீட்டைத் தொட்டால் சிஎஸ்கே அணியின் மொத்த மதிப்பு 8000 கோடி ரூபாய் வரையில் உயர்ந்து யூனிகார்ன் அந்தஸ்தை பெறும். இந்தியாவில் முதல் முறையாக ஒரு விளையாட்டு அணி யூனிகார்ன் அந்தஸ்தைப் பெறுகிறது என்றால் அது சிஎஸ்கே-வாக இருக்க அதிக வாய்ப்புகள் உண்டு.
இந்தியா சிமெண்ட்ஸ் மதிப்பு
இன்று சிஎஸ்கே அணியின் உரிமையாளரான இந்தியா சிமெண்ட்ஸ் பங்கு மதிப்பு 205 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில் இந்நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 6,370 கோடி ரூபாயாக உள்ளது. ஆனால் சிஎஸ்கே அணியின் மதிப்பு அடுத்த ஐபிஎல் போட்டியில் 8000 கோடி ரூபாய் அளவீட்டைத் தொட அதிக வாய்ப்பு உள்ளது.
என்.ஸ்ரீநிவாசன்
வர்த்தகப் பத்திரிக்கைக்குப் பேட்டிக் கொடுத்த இந்தியா சிமெண்ட்ஸ்-ன் நிர்வாக இயக்குனரும் மற்றும் சிஎஸ்கே அணியில் உரிமையாளரான என்.ஸ்ரீநிவாசன் விரைவில் இந்தியா சிமெண்ட்ஸ் மதிப்பை காட்டிலும் சிஎஸ்கே அணியின் மதிப்பு அதிகரிக்க உள்ளது எனக் கூறியுள்ளார்.