இன்று (ஜனவரி 07, 2020) மத்திய அரசின் புள்ளியியல் அலுவலகம் (Central Statistical Office), ஜிடிபி தொடர்பாக ஒரு தரவை வெளியிட்டு இருக்கிறார்கள்.
இந்த 2019 - 20 நிதி ஆண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக் குறியீடுகளின் ஒன்றான ஜிடிபி எவ்வளவு வளர்ச்சி காணும் என ஒரு கணிப்பு தான் அந்த தரவுகள்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும், மத்திய புள்ளியியல் அலுவலகமே வெளியிட்டு இருக்கும் கணிப்பு, அரசை நெளிய வைக்கும் விதத்தில் அமைந்து இருக்கிறது.
5% தான்
மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட, 2019 - 20 நிதி ஆண்டுக்கான ஜிடிபி வளர்ச்சி, வெறும் ஐந்து சதவிகிதம் வளர்ச்சி காணலாம் எனச் சொல்லி இருக்கிறது. மத்திய ரிசர்வ் வங்கி கூட, 2019 - 20 நிதி ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 5 சதவிகிதம் வரை வளரலாம் எனச் சொல்லி இருந்தது குறிப்பிடத்தக்கது.
11 வருட சரிவு
மத்திய புள்ளியியல் அலுவலகம் சொல்வது போல, இந்தியா, இந்த 2019 - 20 நிதி ஆண்டில் வெறும் 5 சதவிகித வளர்ச்சி மட்டுமே கண்டால், அது கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத சரிவு என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த மூன்று மாத காலத்துக்குள், மத்திய அரசு எதையாவது செய்து, இந்த 11 வருட சரிவைத் தொடாமல் இருக்க வேண்டும். சரிவைத் தொடாமல் இருக்குமா..?
காரணம் என்ன
இந்தியாவில் பொருளாதார மந்த நிலை நிலவிக் கொண்டு இருப்பதை நாம் அறிவோம். அதையே தான் மத்திய புள்ளியியல் அலுவலகமும் சொல்லி இருக்கிறது. இந்தியாவின் உற்பத்தித் துறை சரிந்து வருவதைச் சுட்டிக் காட்டி இருக்கிறார்கள். இந்த 2019 - 20 நிதி ஆண்டில் இந்தியாவின் உற்பத்தித் துறை சுமார் 2 சதவிகிதம் வரை சரிவைக் காணலாம் எனச் சொல்லி இருக்கிறார்கள். விவசாயத் துறையும் சுமார் 2.9 சதவிகிதம் மட்டுமே வளர்ச்சி காணும் எனவும் கணித்து இருக்கிறார்கள்.
ஜிவிஏ
gross value added (GVA) என்று சொல்வார்கள். இந்தியாவின் மொத்த ஜிடிபி தொகையில், நிறுவனங்கள் மற்றும் மக்கள் செலுத்தும் வரித் தொகைகளைக் கழித்துவிட்டால் கிடைப்பது தான் இந்த ஜிவிஏ. ஜிடிபியை விட இந்த ஜிவிஏ, இந்தியப் பொருளாதார வளர்ச்சியை கச்சிதமாகப் பிரதிபலிக்கும் எனச் சொல்லலாம். இந்த ஜிவிஏ-வும் இந்த 2019 - 20 நிதி ஆண்டில் 4.9 சதவிகிதம் வளரலாம் எனச் சொல்லி ஷாக் கொடுத்து இருக்கிறது.
அடுத்த காலாண்டு
ஏற்கனவே கடந்த ஜூன் 2019 காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 5 சதவிகிதமும், செப்டம்பர் 2019-ல் 4.5 சதவிகிதம் ஜிடிபி வளர்ச்சியும் கண்டு மத்திய அரசை பெரும் சோதனைக்கு உள்ளாக்கியது. இந்த டிசம்பர் 2019 காலாண்டுக்கான ஜிடிபி வளர்ச்சி டேட்டாக்கள் வரும் பிப்ரவரி 28-ம் தேதி வெளியாக இருக்கிறதாம். பொறுத்திருந்து பார்ப்போம். மத்திய அரசு நடவடிக்கைகள் பலன் கொடுத்து இருக்கிறதா..? இல்லையா..? என தெரிந்து விடும்.