தொழில்நுட்பம் அதிகரிக்க அதிகரிக்க மக்களுக்கு தேவையான வசதிகளும் அதிகரித்து வரும் நிலையில் தொழில்நுட்ப மோசடிகளும் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் கடந்த சில வருடங்களாக மிக அதிகமாக சைபர் தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது.
இந்த சைபர் தாக்குதல் மூலம் ஏராளமானோர் தாங்கள் சேமித்து வைத்த பணத்தை இழந்துள்ளனர் என்பது குறித்த புகார்கள் குவிந்து வருவதை பார்த்து வருகிறோம்.
6 மணி நேரம்
இந்த நிலையில் பங்கு தரகர்கள் மற்றும் டெபாசிட்தாரர்கள் அனைத்து சைபர் தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள், மோசடி, விதிமீறல்கள் போன்ற சம்பவங்களை கண்டறிந்த 6 மணி நேரத்துக்குள் புகாராக தெரிவிக்க வேண்டும் என செபி கேட்டுக்கொண்டுள்ளது.
புகார்கள்
இத்தகைய சம்பவங்களை குறிப்பிட்ட நேரத்திற்குள் புகார் தெரிவித்தால் மட்டுமே பரிமாற்றங்கள் மற்றும் வைப்புத் தொகைகளில் செய்யப்படும் மோசடிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் எனவே இதுகுறித்த புகார்களை உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்றும் செபி தெரிவித்துள்ளது.
சுற்றறிக்கை
இதுகுறித்து செபி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தேசிய முக்கியமான தகவல் உள்கட்டமைப்பு பாதுகாப்பு மையத்தால் (NCIIPC) 'பாதுகாக்கப்பட்ட அமைப்பு' என அடையாளம் காணப்பட்ட பங்கு தரகர்கள் மற்றும் டெபாசிட்தாரர்கள் சைபர் தாக்குதல் குறித்து உடனடியாக புகார் அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
சைபர் தாக்குதல்கள்
அனைத்து சைபர் தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள், சைபர் சம்பவங்கள் ஆகியவற்றை சந்திக்கும் பங்கு தரகர்கள் மற்றும் டெபாசிட்தாரர்கள் மோசடி சம்பவங்களைப் பற்றி கவனத்திற்குக் கொண்டுவரப்பட்ட ஆறு மணி நேரத்திற்குள் செபிக்கு தெரிவிக்கப்படும் என்றும் செபி உரிய நடவடிக்கையை உடனே எடுக்கும் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலாண்டு அறிக்கைகள்
பங்கு தரகர்கள் மற்றும் டெபாசிட்தாரர்கள் சந்திக்கும் இணையத் தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள், இணையச் சம்பவங்கள் மற்றும் மீறல்கள் பற்றிய தகவல்களைக் கொண்ட காலாண்டு அறிக்கைகள் மற்றும் சைபர் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்புகள், அதுகுறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவை ஒவ்வொரு காலாண்டின் முடிவில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.