இந்தியாவின் அடுத்த தலைமுறைக்கான 5ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் ஏலம் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் 4 நிறுவனங்கள் கலந்து கொண்டு வருகின்றன என்பதும் ஏலம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் முதல் நாளில் ரூ.1.45 லட்சம் கோடியும் இரண்டாவது நாளில்
சுமார் 4 ஆயிரம் கோடியும் 5ஜி ஏலத்தின் மூலம் வருமானம் பெற்ற அரசாங்கம் மூன்றாவது நாள் ஏலத்தில் பேர் சுமார் 200 கோடி மட்டுமே ஏலத்தின் மூலம் பெற்றுள்ளது.
இதுவரை 16 சுற்றுகள் ஏலம் முடிவடைந்த நிலையில் இன்று முதல் 17 வது சுற்று ஏலம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
5ஜி ஏலம் 16 சுற்றுகள்
5ஜி தொழில்நுட்பத்திற்கான டெலிகாம் அலைக்கற்றை ஏலம் மூன்றாவது நாளான நேற்றும் தொடர்ந்தது. முதல் நாள் 4 சுற்றுகள், இரண்டாம் நாள் 5 சுற்றுகள், மூன்றாம் நாள் 7 சுற்றுகள் என இதுவரை மொத்தம் 16 சுற்றுகள் நடைபெற்றுள்ள நிலையில் மொத்த ஏலத்தொகை ரூ.1,49,623 கோடியாக உள்ளது.
முதல் நாள், 2வது நாள் ஏலம்
5ஜி ஏலத்தின் இரண்டாவது நாளான புதன்கிழமை 9வது சுற்று முடிவில் பெறப்பட்ட ரூ.1,49,454 கோடி மதிப்பிலான ஏலத்தை விட 3வது நாளில் 16வது சுற்றின் முடிவில் கிடைத்த தொகை சற்று அதிகமாகும். ஏலத்தின் முதல் நாளான செவ்வாய்கிழமையன்று, அரசாங்கம் சுமார் ரூ.1.45 லட்சம் கோடிக்கு ஏலம் கண்டது. மொத்தம் 72 ஜிகாஹெர்ட்ஸ் (ஜிகாஹெர்ட்ஸ்) ரேடியோ அலைகளை ரூ.4.3 லட்சம் கோடி மதிப்பிலான ஏலத்தில் அரசாங்கம் வைத்துள்ளது.
கிராமப்புற சேவை
நேற்று 16வது சுற்று மாலை 6.30 மணிக்கு முடிந்த நிலையில் ஒவ்வொரு சுற்று ஏலத்திற்கும் 45 நிமிடங்கள் எடுத்தது. இதில் நல்ல விஷயம் என்னவென்றால், கிராமப்புறங்களுக்கு 5ஜி சேவைகளை எடுத்து செல்வதில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அக்கறை காட்டி வருகின்றன. எனவே இனி கிராமப்புறங்களுக்கும் 5ஜி வசதி கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ரூ.1.49 லட்சம் கோடி
நேற்றைய ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பல்வேறு பேண்டுகளில் தீவிர ஏலத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் வரும் நாட்களிலும் இந்த இரண்டு நிறுவனங்கள் ஏலம் எடுக்கும் திறன் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் ஏலம் சுமார் ரூ.1.20 லட்சம் கோடியில் முடிவடையும் என்று பல்வேறு ஆய்வு நிறுவனங்கள் எதிர்பார்த்த நிலையில் தற்போது அது ரூ.1.49 லட்சம் கோடியை தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.