நம் நாட்டின் முதுகெலும்பு விவசாயம் தான் என்று கூறினாலும், இன்றைய விவசாயிகளின் நிலையை நாம் முழுமையாக உணர வேண்டிய தருணத்தில் உள்ளோம்.
விவசாயிகளுக்கு பயிர்கடன், இலவச மின்சாரம் என பல சலுகைகள், அரசு கொடுத்து வந்தாலும், அவர்களின் வாழ்க்கைத் தரமானது இன்னும் மேம்படவில்லை எனலாம்.
நாளுக்கு நாள் விலைவாசி என்பது அதிகரித்துக் கொண்டே போனாலும், மறுபுறம் விவசாயிகளின் நிலை மிக மோசமாகிக் கொண்டே தான் போகிறது. ஒரு புறம் கடன் பிரச்சனை, மூலதன பொருட்கள் விலைவாசி ஏற்றம், சரியான விலையின்மை, இடைத்தரகர்களால் பிரச்சனை எனில், மறுபுறம் புயல், வெள்ளம் என்பனவும் அவர்களை இன்னும் மோசமான நிலைக்கு தள்ளுகின்றன.
விவசாயிகள் தவிப்பு
மொத்தத்தில் இன்றளவிலும் கடனிலும், கண்ணீரிலும் தான் மிதக்கின்றனர். எங்கள் ஊரில் விவசாயிகள் எல்லாம் நன்றாகத் தானே இருக்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கலாம். அவர்கள் எல்லோரும் தங்களின் இறுதி காலத்தினை எப்படியேனும் கழிக்க, ஆர்வத்தில் விவசாயம் செய்பவர்களாக இருக்கலாம். ஆனால் காலம் காலமாக விவசாயம் செய்யும் மக்கள் இன்றும் கடனில் தான் தவிக்கின்றனர்.
சராசரி கடன்
இதனைத் தான் இன்று நாம் பார்க்கவிருக்கும் NSO ஆய்வறிக்கையும் சுட்டிக் காட்டியுள்ளது. NSO நடத்திய ஆய்வில் நாட்டில் பாதிக்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்களும் 2019ம் ஆண்டு நிலவரப்படி, 74,121 ரூபாய் கடனில் உள்ளன. இதில் கவலையளிக்கும் விஷயம் என்னவெனில் வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் போன்ற நிறுவனங்களில். இருந்து 69.6% பேர் கடன் வாங்கியுள்ளனர். மீதம் 20.5% பேர் தனியார் கடன் வழங்குனர்களிடம் இருந்து பெற்றுள்ளதாக ஆய்வறிக்கை கூறுகின்றது.
கடனில் பாதி குடும்பங்கள்
மொத்தக் கடனில் 57.5% பேர் மட்டுமே விவசாய நோக்கங்களுக்காக பெற்றுள்ளனராம். கடன்பட்ட விவசாய குடும்பங்களின் விகிதம் 50.2% ஆகும். ஒரு விவசாய குடும்பத்திற்கு சராசரியாக 74,121 ரூபாய் கடன் உள்ளது. இது குறித்து NSO கடந்த ஜனவரி - டிசம்பர் 2019ல் ஒரு ஆய்வினை நடத்தியது. இது நாட்டின் கிராமப்புறங்களில் நிலம் மற்றும் கால் நடை வளர்ப்பு மற்றும் விவசாயிகளின் வருவாய் மதிப்பீடு பற்றிய ஆய்வினை நடத்தியது.
சராசரி மாத வருமானம்
2018 - 19ம் ஆண்டில் விவசாய குடும்பத்தின் சராசரி வருமானம் 10,218 ரூபாயாக இருந்துள்ளது. இதில் ஒரு குடும்பத்தின் சராசரி வருமானம் 4,063 ரூபாய், பயிர் உற்பத்தி மூலம் 3,798 ரூபாய், கால் நடை வளர்ப்பு மூலம் 1,582 ரூபாய். பண்னை அல்லாத வணிகம் மூலம் 641 ரூபாய் மற்றும் நிலம் குத்தகைக்கு 134 ரூபாய் என ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
எவ்வளவு நிலம்
இந்த ஆய்வின் படி, நாட்டில் விவசாய குடும்பங்களின் எண்ணிக்கை 9.3 கோடி. இந்த கணக்கெடுப்பில் கிராமப்புறங்களில் வசிக்கும் விவசாயம் சாராத குடும்பங்கள் 7.93 கோடி. கிராமப்புறங்களில் 83.5% குடும்பத்தினருக்கு 1 ஹெக்டேருக்கும் குறைவான நிலம் இருப்பதாகவும், 0.2% பேர் மட்டுமே 10 ஹெக்டேருக்கும் மேல் நிலம் வைத்திருப்பதாகவும் தரவுகள் சுட்டிக் காட்டியுள்ளன.
விவசாயிகள் எத்தனை சதவீதம்
நகர்புற இந்தியாவில் 4.9% குடும்பங்கள் நிறுவனமல்லாத கடன் அமைப்புகளுக்கு கடன் பட்டுள்ளன. இதே கிராமப்புறங்களில் 10.2% குடும்பங்கள் கடன் பட்டுள்ளன.
இதே கிராமப்புறத்தில் உள்ள 7% குடும்பங்களும், நகர்ப்புறங்களில் உள்ள 3% குடும்பங்களும் வங்கிகள் மற்றும் தனியார் கடன் வழங்குனர்கள் என இரு பக்கமும் கடன் பெற்றுள்ளனராம். மொத்தத்தில் கடன் இல்லாமல் இல்லை.