சமீபத்தில் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட டெல்லிவரி, மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதன்படி கடந்த நிதியாண்டின் 4ஆம் காலாண்டில் ரூ.1,003 கோடியாக இருந்த வருமானம், தற்போது இரண்டு மடங்கு அதிகரித்து ரூ.2,072 கோடியாக உயர்ந்துள்ளதாக அறிவித்துள்ளது.
அதேபோல் இந்நிறுவனத்தின் நிகர இழப்பு மார்ச் காலாண்டில் ரூ 120 கோடி என்றும், இதே கடந்த ஆண்டின் காலாண்டில் ரூ 118 கோடியாக இருந்தது என்றும் அறிவித்துள்ளது.
டெல்லிவரி
டெல்லிவரி நிறுவனத்தின் நிகர இழப்பு கடந்த ஆண்டு காலாண்டில் 415 கோடி ரூபாயாக இருந்த நிலையில் இந்த ஆண்டின் காலாண்டில் 1,011 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என்பது அந்நிறுவனத்தின் வருடாந்திர நிதிநிலைகள் அறிக்கையில் இருந்து தெரிய வருகிறது. ஆனால் அதே நேரத்தில் 89 சதவிகிதம் வருமானம் அதிகரித்துள்ளது.
செலவு
டெல்லிவரி நிறுவனம் தனது ஊழியர்களின் நலன்களுக்கான செய்த செலவு இந்த காலாண்டில் 98 சதவீதம் உயர்ந்து ரூ.341 கோடியாக உள்ளது. அதேபோல் எரிபொருள் விலை அதிகரித்த போதிலும் டெல்லிவரி நிறுவனம் சரக்குக் கையாளுதல் கட்டணத்தை கடந்த ஆண்டின் காலாண்டை விட இந்த ஆண்டின் காலாண்டில் குறைத்துள்ளது.
ஐபிஓ
டெல்லிவரி நிறுவனத்தின் ஐபிஓ மே 11 அன்று அறிமுகம் செய்யப்பட்டு, இதன் மூலம் ரூ 5,235 கோடி நிதி ஈட்டியது. இந்நிறுவனத்தின் ஐபிஓ பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் நாளில் அதன் பங்குகள் 10 சதவீதம் உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சேவை
இந்தியாவில் உள்ள 19,300 பின்கோடு நகரங்களில் 17,045 பின்கோடு நகரங்களுக்கு டெல்லிவரி நிறுவனம் சேவை செய்து வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் தனது நெட்வொர்க்கை உருவாக்கியுள்ளது.
பங்கு விலை
கடந்த 2011 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்ட டெலிவரி நிறுவனத்தின் வருமானம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே வருவது இந்நிறுவனத்தின் வளர்ச்சியை காண்பிக்கிறது. நேற்று பங்குச்சந்தை நிறைவடையும்போது டெல்லிவரியின் பங்குகள் ரூ.521 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.