கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பின்னர் பல நிறுவனங்கள் வொர்க் ஃப்ரம் ஹோம் என்ற முறையை முடிவுக்கு கொண்டு வந்து அலுவலகத்திற்கு வந்து வேலை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளன.
டெஸ்லா போன்ற நிறுவனங்கள் அலுவலகத்திற்கு வந்து வேலை செய்யாதவர்கள் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளன.
இந்த நிலையில் டெல் நிறுவனத்தின் சிஇஓ மைக்கேல் சால் டெல், ஊழியர்கள் தங்கள் விருப்பம் போல் செயல்படலாம் என்றும் ஊழியர்களின் வேலை மட்டுமே முக்கியம் என்றும் எங்கிருந்து வேலை பார்க்கிறார்கள் என்பது முக்கியம் இல்லை என்றும் தெரிவித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டில் இருந்து வேலை
உலகெங்கும் உள்ள பல நிறுவனங்கள் தற்போது மீண்டும் ஊழியர்களை அலுவலகத்திற்கு வர வலியுறுத்தி வருகின்றன என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். குறிப்பாக கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள், தங்கள் ஊழியர்கள் வாரத்தில் சில நாட்களாவது அலுவலத்திற்கு வந்து வேலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. அமேசான் நிறுவனம் தனது பணியாளர்களுக்கு இப்போதைக்கு அலுவலகம் வரவேண்டிய அவசியமில்லை என்று கூறியுள்ளது. ஆனால் டெஸ்லா போன்ற நிறுவனங்கள் கண்டிப்பாக அலுவலகம் வந்து வேலை செய்ய வேண்டும் என தனது ஊழியர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல் சி.இ.ஓ
இந்த நிலையில் டெல் நிறுவனத்தின் சிஇஓ மைக்கேல் சால் டெல் அவர்கள் தனது லிங்க்ட்-இன் பக்கத்தில் ஊழியர்கள் அலுவலகத்திற்கு வந்து வேலை செய்வதோ அல்லது வீட்டில் இருந்து வேலை செய்வதோ பெரிதல்ல என்றும் அவர்களது வேலை மட்டுமே முக்கியம் என்றும் அவர்கள் எங்கிருந்தும் வேலை பார்க்க வேண்டும் என்ற ஒரு சுதந்திரமான நிலை ஏற்படவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
விருப்பமான இடம்
ஒரு நிறுவனத்தை வெற்றிகரமாக மாற்றுவதற்கு ஊழியர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து தான் வேலை செய்ய வேண்டும் என்பது அவசியமில்லை என்றும் அவர்கள் தங்களது விருப்பமான இடத்தில் இருந்து விருப்பமான வேலையை செய்தால் அந்நிறுவனம் நிச்சயம் முன்னேற்றம் அடையும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பதவி உயர்வு
மேலும் அலுவலகம் வந்து வேலை செய்யும் ஊழியர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு மற்றும் முன்னேற்றம் போன்ற வாய்ப்பு உள்ளது என்ற நம்பிக்கையை ஊழியர்கள் மத்தியில் ஏற்படுத்த கூடாது என்றும் ஊழியர்களின் வேலைத்திறனை மட்டுமே கண்காணிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார்.
கொரோனா பாதிப்புக்கு முன்பே
ஊழியர்களை அலுவலகத்திற்கு கண்டிப்பாக வரவேண்டும் என்று கட்டாயப்படுத்துவது சரியான முறையாக இருக்காது என்றும் தனது லிங்க்ட்-இன் பக்கத்தில் மைக்கேல் சால் டெல் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு முன்னரே டெல் நிறுவன ஊழியர்கள் சிலர் வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதிக்கப்பட்டனர் என்றும் அவர் தெரிவித்தார்.
கருத்துக்கணிப்பு
தொழில்நுட்ப நிறுவன நிபுணர்கள் சமீபத்தில் 10,000 ஊழியர்களை உள்ளடக்கிய ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியதில் 80 சதவீத ஊழியர்கள் அலுவலகத்தில் இல்லாமல் வீட்டில் இருந்து பணிபுரிய விரும்புவதாக தெரிவித்து இருந்தனர் என்பதையும் மைக்கேல் சால் டெல் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்வு
இந்த கருத்துக் கணிப்பு குறித்து கூறிய டெல் சி.இ.ஓ மைக்கேல் சால் டெல், 'ஊழியர்கள் தொலைதூரத்திலிருந்து வேலை செய்வது மற்றும் ஹைபிரிட் முறையில் வேலை செய்வது என்பது அவர்களது தேர்வாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
லைக்ஸ்
டெல் சி.இ.ஓ மைக்கேல் சால் டெல் அவர்களின் இந்த லிங்க்ட்-இன் பதிவு தற்போது வைரலாகி வருகிறது என்பதும் இந்த பதிவிற்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.