கொரோனா தொற்றின் முதல் அலையில் இருந்து இந்திய பொருளாதாரம் மீண்டு வர அனைத்து தரப்பிலும் பல்வேறு சலுகை அளிக்கப்பட்ட நிலையில், 2வது அலை தொற்று பொருளாதார வளர்ச்சியைக் கடந்த சில மாதங்களாகப் பாதித்து வருகிறது.
இந்நிலையில் இந்தியா-வில் தற்போது அதிகரித்து வரும் டெல்டா வகைக் கொரோனா வைரஸ் நாட்டின் பொருளாதாரத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்றும், நாட்டின் பணவீக்கத்தைப் பெரிய அளவில் அதிகரிக்கும் என்றும் ரெயூட்டர்ஸ் பொருளாதார வல்லுனர்கள் குழு தெரிவித்துள்ளது.
இந்திய பொருளாதாரம்
இந்திய பொருளாதாரம் தற்போது இருக்கும் சூழ்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி தனது கொள்கையில் முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டியது கட்டாயமாகியுள்ளது. இது மட்டும் அல்லாமல் கடந்த 2 மாதமாக நாட்டின் பணவீக்கம் அப்பர் லிமிட் ஆன 6 சதவீதத்தைத் தாண்டியுள்ளது.
ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி கடந்த வாரம் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைய சிறப்பான வாய்ப்புகள் உள்ளது, ஆனால் பணவீக்கம் அதிகரிப்பு பெரும் பிரச்சனையாக இருக்கும் என அறிவித்ததுள்ளது. இதன் மூலம் நாட்டின் முன்னணி வங்கிகளின் கணிப்பை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
டெல்டா வகைக் கொரோனா வைரஸ்
ஆனால் தற்போது இந்தியாவில் சில மாநிலங்களில் டெல்டா வகைக் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வாய்ப்புகளைப் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரெயூட்டர்ஸ் கருத்துக் கணிப்பு
52 பொருளாதார வல்லுனர்கள் பங்கு கொண்ட ரெயூட்டர்ஸ் கருத்துக் கணிப்பில் டெல்டா வகைக் கொரோனா வைரஸ் பாதிப்பு 2021-22 நிதியாண்டின் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் எனத் தெரிவித்துள்ளது. இதேபோல் பலர் பணவீக்கம் முக்கியப் பிரச்சனையாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.