மும்பை: மாருதி சுசுகி நிறுவன டீசல் மாடல் வாகனங்களுக்கான தேவை திடீரென அதிகரித்து வருகிறது. புதிய எமிஷன் விதிமுறைகள் நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் டீசல் வாகனங்களை தள்ளுபடி விலையில் வாங்கிவிடலாம் என வாடிக்கையாளர்கள் அலைமோதுவதே இதற்கு காரணம்.
பாரத் ஸ்டேஜ்- IV தரத்திலான வாகனங்களை, ஏப்ரல் மாதத்திற்கு பிறகு விற்பனை செய்ய முடியாது என்பதால், பெரும் தள்ளுபடிகள் மற்றும் நீட்டிக்கப்பட்ட வாரண்டி போன்றவற்றை மாருதி வழங்கி தனது இப்போதைய டீசல் வாகனங்களை விற்பனை செய்ய ஆர்வம் காட்டி வருகிறது.
இந்த நிலையில்தான், கடந்த இரண்டு மாதங்களில், மாருதி சுசுகியின், விட்டாரா பிரெஸ்ஸா டீசல் மாடலின் சில்லறை விற்பனை முந்தைய மாதங்களை விட கிட்டத்தட்ட 13,000-14,000 யூனிட்டுகளாக அதிகரித்துள்ளது.
வாகன உற்பத்தி அதிகரிப்பு
விற்பனை அதிகரிப்பால், சுசுகி நிறுவனம் இப்போது ப்ரெஸ்ஸா வாகன, உற்பத்தியை மேலும் ஒரு மாதத்திற்கு, அதாவது ஜனவரி வரை நீட்டித்துள்ளது. மேலும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் திட்டமிடப்பட்ட உற்பத்தியை 3,000-4,000 யூனிட்டுகள் வரை, அதிகரித்து சுமார் 12,000 யூனிட்டுகள் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.
பாதி அளவு அதிகம்
அனைத்து வகை கார் மாடல்களையும் எடுத்துக் கொண்டால், அடுத்த மூன்று மாதங்களில் சுமார் 30,000 யூனிட் டீசல் வாகனங்களை உற்பத்தி செய்ய சுசுகி திட்டமிட்டுள்ளது. இது அதன் முந்தைய திட்டத்தை விட கிட்டத்தட்ட 30-50% அதிகமாகும். விற்பனை அதிகரிப்புதான், சுசுகிக்கு இந்த உற்சாகத்தை கொடுத்துள்ளது.
மீண்டும் பணிக்கு அமர்த்தியது
இந்நிறுவனம் முன்பு பிரெஸ்ஸா மற்றும் டிசையர் டூர் வகை, டீசல் கார் உற்பத்தி பிரிவிலிருந்து வெளியேற்றிய 1,000 தற்காலிக தொழிலாளர்களை மீண்டும் பணியமர்த்தியுள்ளது. மேலும் புதிய வேகன்ஆர், எஸ்-பிரஸ்ஸோ மற்றும் எக்ஸ்எல் 6 போன்ற மாடல்களுக்கான வெயிட்டிங் காலமும் அதிகரித்துள்ளது.
டீசல் வாகனங்கள்
சுசுகி நிறுவனம் ஏற்கனவே பாரத் VI எமிஷன் தரங்ளுக்கு ஏற்ற வாகனங்களைத் தயாரிக்கத் தொடங்கியுள்ளது. இப்போது டீசலில் மட்டுமே கிடைக்கும் ப்ரெஸாவின் பெட்ரோல் மாடல்களையும் சுசுகி உற்பத்தி செய்கிறது. புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தவுடன் டீசல் வாகனங்களின் உற்பத்தியை நிறுத்த சுசுகி முடிவு செய்துள்ளது.
மாற்றம்
மாருதி சுசுகி ஏற்கனவே பிஎஸ்-IVலிருந்து BS-VI மாடல்களுக்கு மாறியுள்ளது. மார்ச் 31ம் தேதி காலக்கெடுவுக்கு முன்னதாக இப்படி சுமூகமாக மாறிவிடலாம் என சுசுகி நினைக்கிறது. செப்டம்பர் காலாண்டில் டீசலில் இயங்கும் வாகனங்கள் சுசுகி நிறுவனத்தின் மொத்த விற்பனை அளவில் 22% ஆக இருந்தது, ஆனால் மொத்த கார் சந்தையில் டீசல் வாகன விற்பனை 33% ஆகும்.
நிறுவனங்கள்
வேறு சில வாகன உற்பத்தி நிறுவனங்களும், தங்கள் டீசல் மாடல் உற்பத்திகளை மறுபரிசீலனை செய்யப்போவதாக அறிவித்துள்ளன. ஏனெனில் புதிய விதிமுறைப்படி டீசல் என்ஜின்களை உருவாக்குவதற்கு ஆகும், அதிக செலவுதான் இதற்கு காரணம்.
டொயோட்டா கார்
கிர்லோஸ்கர் குழுமத்துடன் இணைந்து, இந்தியாவில், செயல்படும் டொயோட்டா, சிறிய டீசல் வாகனங்களின் உற்பத்தியை நிறுத்த உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (டி.கே.எம்) தயாரிக்கும், எஸ்.யூ.வி வாகனங்களான இன்னோவா மற்றும் பார்ச்சூனர் தொடர்ந்து டீசல் மாடல்களில் கிடைக்கும். அதே வேளை, தற்போது எட்டியோஸ், எட்டியோஸ் கிராஸ், லிவா மற்றும் கொரோலா அல்டிஸ் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் உற்பத்தி நிறுத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்னோவா, பார்ச்சூனர் இருக்க கவலை ஏன்
டீசல் வாகனங்கள்தான், தற்போது டொயோட்டோ நிறுவனத்தின் 85% விற்பனை அளவைக் கொண்டுள்ளன. ஆனால், 60% க்கும் அதிகமான விற்பனை இன்னோவா மற்றும் பார்ச்சூனரால்தான் கிடைத்து வருகிறது. எனவே இந்த நிறுவனம் தங்களுக்கு டீசல் இன்ஜினை நிறுத்துவதால் பெரிய பாதிப்பு ஏற்படாது என நம்புகிறது.