இந்திய ஆயுத படையில் இளம் தலைமுறையினரை அதிகளவில் கொண்டு வர வேண்டும் என்பதற்காக ஜூன் 14, 2022 அன்று, மத்திய அமைச்சரவை, அக்னிபாத் எனப்படும் ஆட்சேர்ப்புத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.
இத்திட்டம் அறிவிக்கும் போது பெரிய அளவிலான வரவேற்பு இருந்த நிலையில், இதன் உண்மை தன்மை அறிந்த பின்பு இத்திட்டத்திற்குக் கடுமையான எதிர்ப்பு உருவாக்கி நாடு முழுவதும் கடுமையாகப் போராட்டங்களை மக்கள் செய்து வரும் நிலையில், மத்திய அரசு வங்கிகள் மற்றும் நிதியியல் அமைப்புகளிடம் அக்னிவீரர்-களுக்கு எவ்வாறு நிதி திரட்டி சப்போர்ட் செய்வது என்பது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளது.
அக்னிபாத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்கள் 'அக்னிவீரர்கள்' என்று அழைக்கப்படுவார்கள்.
மத்திய நிதிச் சேவை துறை
மத்திய அரசு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் 'அக்னிவீரர்'-களின் பணிக்காலம் முடிந்ததும் அவர்களுக்கு ஆதரவளிக்கும் வழிகளைக் கண்டறியும் வகையில், நிதிச் சேவை துறையின் (DFS) செயலாளர் இன்று பொதுத்துறை வங்கிகளின் (PSBs) தலைமை நிர்வாகிகளுடன், பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் (PSICs) மற்றும் நிதி நிறுவனங்கள் (FIs) உடன் முக்கியமான ஆலோசனை கூட்டத்தை நடத்தினார்.
அக்னிபாத் போராட்டம்
இந்தியா முழுவதும் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்தும் நிலையிலும் மத்திய நிதிச் சேவை துறையின் (DFS) செயலாளர் தலைமையில் நடந்த கூட்டத்தில், ராணுவ விவகாரத் துறை இணைச் செயலாளர் அக்னிபாத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து விளக்கமளித்துக் கூட்டத்தைத் துவக்கிவைத்துள்ளார்.
வேலை வாய்ப்புகள்
இக்கூட்டத்தின் போது பொதுத்துறை வங்கிகள், பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் அக்னிவீரர்களின் கல்வித் தகுதிகள் மற்றும் திறன்களின் அடிப்படையில் தகுந்த சலுகைகள்/ தளர்வுகள் உடன் பொருத்தமான வேலை வாய்ப்புகளைத் தேடி அளிக்கப்பட வேண்டும் எனத் தீர்மானம் எடுக்கப்பட்டு உள்ளது.
நிதியுதவி
இதேபோல் இக்கூட்டத்தில் அக்னிபாத் திட்டத்தில் சேர்ந்து வெளியேறும் அக்னி வீரர்களுக்குத் திறன் மேம்பாடு, புதிய தொழில் துவங்கக் கல்வி, சுய தொழில் துவங்குவதற்கான நிதியுதவிகளைச் செய்வதற்கான பணிகளைச் செய்யத் திட்டமிடப்பட்டு உள்ளது.
முத்ரா, ஸ்டான்ட்அப் இந்தியா
இதேபோல் மத்திய அரசு ஏற்கனவே பயன்பாட்டில் வைத்துள்ள முத்ரா, ஸ்டான்ட்அப் இந்தியா போன்ற திட்டத்தின் கீழ் அக்னிபாத் திட்டத்தின் அக்னிவீரர்களுக்கு உதவு தீர்மானம் எடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் என்ன உதவி, எவ்வளவு தொகை ஆகியவற்றை இனி வரும் காலக்கட்டத்தில் தான் முடிவு செய்யப்படும்.
4 வருட ஒப்பந்தம்
இந்திய பாதுகாப்புத் துறையில் அக்னி வீர் என்ற புதிய வேலைவாய்ப்பு துறையை உருவாக்கி உள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. அக்னிபாத் திட்டத்தின் மூலம் இந்திய ராணுவத்தின் 3 படை பிரிவுகளிலும் திறன், தகுதி அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டு 4 வருட ஒப்பந்தத்தில் "அக்னிவீரர் " எனப்படும் வீரர்கள் பணிக்கு அமர்த்தப்பட்ட உள்ளனர்.
40,000 ரூபாய் வரை சம்பளம்
அக்னிவீரர் என அழைக்கப்படும் இவர்களுக்கு 30,000 முதல் 40,000 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 4 வருடங்கள் கழித்து இந்த வீரர்களில் 25 சதவீத பேர் மட்டுமே ராணுவத்தில் நிரந்தரமாக 15 வருட ஒப்பந்தத்தில் சேர அனுமதிக்கப்படுவார்கள்.
விருப்பம்
இத்திட்டத்தில் விருப்பம் இல்லை என்றால் 4 வருடத்திற்குப் பின் வெளியேறலாம், விருப்பம் உள்ளவர்கள் நிரந்தரமாகச் சேர விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பத்தின் அடிப்படையில், அவர்களின் 4 வருட பணி ஆகிய தகுதிகளை அடிப்படையாக வைத்துத் தகுதியானவர்களை நிரந்தரமாக 15 வருடம் பணியாற்றத் தேர்வு செய்யப்படுவர்.
இளம் தலைமுறையினர்
அக்திபாத் திட்டத்தில் பெண்கள், ஆண்கள் இரு பாலினரும் சேர முடியும், இத்திட்டத்தில் சேர்வதற்கு 17.5 - 21 வயது கொண்டவர்களுக்கு மட்டும் அனுமதி. 10 ஆம் வகுப்பு அல்லது 12 ஆம் வகுப்பு வரை குறைந்தபட்சம் படித்து இருக்க வேண்டும். இந்த வயது கட்டுப்பாட்டுக்கு முக்கியக் காரணம் இந்திய ஆயுத படையில் இளம் தலைமுறையினரை அதிகம் சேர்க்கப்பட வேண்டும் என்பதற்காகத் தான்.
மக்கள் எதிர்ப்புக்கு இதுதான் காரணம்
இந்தத் திட்டத்தில் 4 வருடம் பணியாற்றுவதற்குச் சம்பளம் கொடுக்கப்பட்டாலும் பென்சன் கிடையாது. அதேபோல் 25 சதவிகிதம் பேர் மட்டுமே நிரந்தரப் பணியான 15 வருட ஒப்பந்தத்தில் சேர அனுமதிக்கப்படுவார்கள். 4 வருடம் கழித்து 75 சதவிகிதம் பேர் வேலையின்றி வெளியேறும் நிலை ஏற்படும். இதனால் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் கடுமையான போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.