அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத இறக்குமதி வரியை கடந்த ஆகஸ்ட் மாதம் நடைமுறைக்கு கொண்டு வந்தார். இது இந்தியாவை சார்ந்த ஏற்றுமதி துறை சார்ந்த இயக்கக்கூடிய நிறுவனங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.
குறிப்பாக இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் திருப்பூர், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் பெரிய அளவில் அமெரிக்க சந்தையை தான் சார்ந்து இருக்கிறார்கள். டிரம்பின் 50% வரி லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்பட செய்தது. குறிப்பாக புதிய ஆர்டர்கள் கிடைக்காமலும் ஏற்கனவே வந்த ஆர்டர்களை நஷ்டத்திற்கு ஏற்றுமதி செய்யும் நிலைக்கும் ஜவுளி உற்பத்தியாளர்கள் தள்ளப்பட்டனர்.

அமெரிக்க சந்தையை இழந்ததால் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள் மாற்று சந்தையை தேடும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த நிலையில் அமெரிக்க வர்த்தக வாய்ப்பு குறைந்தாலும் சர்வதேச அளவில் கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவில் ஆயத்த ஆடை ஏற்றுமதி என்பது அதிகரித்து இருக்கிறது. கடந்த நான்கு மாதங்களாக இந்திய சந்தையில் ஆடைகளுக்கான ஆர்டர் வரத்து மந்தமாகி இருக்கிறது.
இருந்தாலும் மாதாந்திர அடிப்படையில் டிசம்பர் மாதத்தில் ஆடை ஏற்றுமதி வர்த்தகம் மிதமான வளர்ச்சியை அடைந்திருக்கிறது. டிசம்பர் மாதத்தில் மட்டும் இந்தியாவில் 13,550 கோடி ரூபாய் மதிப்புக்கு ஆடை ஏற்றுமதி நடந்துள்ளது. இது 2024 டிசம்பர் மாதத்தில் 12,427 கோடி ரூபாயாக மட்டுமே இருந்தது. அப்படி பார்க்கும்போது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த டிசம்பர் மாதத்தில் 9.07 சதவீதம் என ஆடை ஏற்றுமதி நடந்திருக்கிறது.
கடந்த நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில் 94, 940 கோடி ரூபாய் மதிப்பிலான ஆடை ஏற்றுமதி நடந்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாத ஏற்றுமதி 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டி இருக்கிறது. இது 6.05 சதவீதம் அதிகமாகும். ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலிங் தலைவரான சக்திவேல் கடந்த நிதி ஆண்டோடு ஒப்பிடும்போது இந்த நிதி ஆண்டில் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி 1.60 சதவீதம் மட்டுமே குறைந்திருக்கிறது என தெரிவித்திருக்கிறார்.
டிரம்பின் இறக்குமதி வரி விதிப்பால் வர்த்தக பாதிப்பு இருந்தாலும் ஆயத்த ஆடை ஏற்றுமதியில் மிதமான வளர்ச்சி அடைந்திருப்பது சாதகமாகவே இருக்கிறது என கூறுகிறார். அமெரிக்காவுக்கு மாற்று சந்தைகளை நாட தொடங்கியதும் மேற்காசிய நாடுகளில் அதிக கவனம் செலுத்தியதுமே மீண்டும் வர்த்தகம் வளர்ச்சி அடைவதற்கு காரணம் என தெரிய வந்திருக்கிறது.
திருப்பூரை அடிப்படையாகக் கொண்ட எஸ்டி எக்ஸ்போர்ட் நிறுவனத்தின் தலைவரான திருக்குமரன் நடராஜன் அமெரிக்க வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக திருப்பூரை சேர்ந்த ஏற்றுமதியாளர்கள் 15 லிருந்து 20% தள்ளுபடியில் ஆடைகளை ஏற்றுமதி செய்வதாக தெரிவித்து இருக்கிறார். இதுவே தொடர்ந்து ஜவுளித்துறை சீராக செயல்படுவதற்கு காரணமாக அமைந்துள்ளது என சுட்டிக்காட்டுகிறார்.
அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இன்னும் உறுதியாகாத நிலையில் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய யூனியன் உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஆகியவை ஜவுளி ஏற்றுமதி துறைக்கு சாதகமாக அமையும் என்றும் அமெரிக்க சந்தை கைவிட்டாலும் மற்ற நாடுகளின் சந்தி கைகொடுக்கும் என்றும் ஜவுளி ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications