இந்தியாவின் மிகப்பெரிய பென்ஷன் பண்ட் திட்டத்தை நிர்வாகம் செய்யவும், பாதுகாவலராக இருக்கவும் பல முன்னணி வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் போட்டிப்போட்டு வரும் நிலையில் டாய்ச் வங்கி யாரும் எதிர்பார்க்காத வகையில் வருடத்திற்கு வெறும் 100 ரூபாய் போதும் எனத் தனது விருப்ப விண்ணப்பத்தைச் சமர்ப்பித்துள்ளது.
இப்படி இந்தப் பென்ஷன் பண்ட் திட்டத்தில் என்ன இருக்கு..? ஒன்னு இல்ல ரெண்டு இல்ல சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீடுகள் பல்வேறு திட்டத்தின் கீழ் உள்ளது.
பென்ஷன் பண்ட் திட்டம்
இந்திய மக்களின் மிக முக்கியமான முதலீட்டுத் திட்டமாக விளங்கும் NPS திட்டத்தின் பென்ஷன் பண்ட் திட்டத்திற்குத் தற்போது பாதுகாவலராக (custodian) இருக்கும் ஸ்டாக் ஹோல்டிங் கார்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனம் NPS திட்டம் மட்டும் அல்லாமல் பொதுத்துறை நிறுவனங்கள் பலவற்றுக்கு டெப்பாசிட்டரியாக விளங்குகிறது.
ஸ்டாக் ஹோல்டிங் கார்பரேஷன் ஆப் இந்தியா
தற்போது ஸ்டாக் ஹோல்டிங் கார்பரேஷன் ஆப் இந்தியா அமைப்பு NPS திட்டத்தின் நிர்வாகம் செய்யவும், பாதுகாவலராக இருக்கவும் வருடத்திற்குக் கிட்டதட்ட 19 கோடி ரூபாய் அளவிலான தொகையைக் கட்டணமாகக் கோரியுள்ளது.
பாதுகாவலர்
தற்போது NPS திட்டத்தை நிர்வாகம் செய்யப் பல முன்னணி தனியார் மற்றும் நிதி நிறுவனங்கள் போட்டிப்போட்டு வருகிறது. இந்த ஆர்வத்திற்கு மிகப்பெரிய காரணம் உண்டு. பாதுகாவலராக (custodian) இருக்கும் நிறுவனம் இத்திட்டத்தில் செய்யப்படும் முதலீடுகள் மற்றும் பத்திரங்களை முதலீட்டாளர்களுக்குப் பதிலாக இந்நிறுவனம் இருப்பு வைத்திருக்கும்.
பணப் புழக்கம்
புதிய திட்டத்தில் புக்கிங் மற்றும் முதலீடு செய்வதற்கு மத்தியில் 2 அல்லது 3 நாட்கள் இந்தத் தொகை பாதுகாவலராக (custodian) இருக்கும் நிறுவனத்தின் கையில் தான் இருக்கும். இத்திட்டத்தில் சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் அளவிலான தொகை இருக்கும் காரணத்தால் இந்த ஒப்பந்தம் வெல்லும் நிறுவனம் மிகப்பெரிய பணப் புழக்கத்தைப் பெறும்.
என்பிஎஸ் திட்டம்
தற்போது என்பிஎஸ் திட்டத்திக்கு பாதுகாவலராக (custodian) இருக்கச் சிட்டி, எஸ்பிஐ - எஸ்ஜி மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியவை 1 கோடி ரூபாய் என்ற தொகையை விருப்ப விண்ணப்பத்தில் சமர்ப்பித்துள்ள நிலையில் டாய்ச் வங்கி வெறும் 100 ரூபாயை ஒரு வருடத்திற்கான கட்டணமாக அறிவித்துள்ளது.
எல்ஐசி
சமீபத்தில் இந்தியாவின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி பாதுகாவலராக (custodian) இருக்க வெளிநாட்டு வங்கிகளுக்குத் தடை விதித்த நிலையில், தற்போது மத்திய அரசு என்பிஎஸ் திட்டத்திற்காகப் பாதுகாவலராக வெளிநாட்டு வங்கியான டாய்ச் வங்கியை நியமிக்குமா..?