இந்தியாவில் பல தடைகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் மத்தியில் தான் கிரிப்டோகரன்சி முதலீட்டுச் சந்தை இயங்கி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு தான் கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் தளத்திற்கு இந்திய வங்கிகள் சேவை அளிக்கலாம் என ரிச்ரவ் வங்கி அறிவித்தது.
இந்நிலையில் மத்திய அரசு கிரிப்டோகரன்சி மசோதா-வை வெளியிடாத நிலையில், கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்யலாம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில், இன்று பட்ஜெட் அறிக்கையில் வெளியான அறிவிப்புகள் முதலீட்டாளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
டிஜிட்டல் கரன்சி
மத்திய நிதியமைச்சர் இன்று பட்ஜெட் அறிக்கையில் இந்திய ரிசர்வ் வங்கி விரைவில் டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்யும் என அறிவித்தார். அதாவது இந்திய ரூபாயை டிஜிட்டல் வடிவில் வெளியிடப்படும் இது டிஜிட்டல் பணப் பரிமாற்றத்திற்குப் பயன்படுத்தப்படும்.
கிரிப்டோகரன்சி Vs டிஜிட்டல் கரன்சி
கிரிப்டோகரன்சிக்கும், டிஜிட்டல் கரன்சிக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. இதேபோல் டிஜிட்டல் கரன்சியை வாங்குவதற்கு எவ்விதமான வரியும் இல்லை என்று விளக்கும் கொடுக்கப்பட்டு உள்ளது. சரி நம் கிரிப்டோகரன்சிக்கு வருவோம்.
30 சதவீதம் வரி
பட்ஜெட் அறிவிப்பில் டிஜிட்டல் சொத்துக்கான கிரிப்டோகரன்சி, NFT, போன்றவற்றின் முதலீட்டில் கிடைக்கும் அனைத்து வருமானத்திற்கும் 30 சதவீதம் வரி விதிக்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
நஷ்டம்
மேலும் கிரிப்டோ முதலீட்டில் ஏற்படும் நஷ்டத்தைப் பிற முதலீட்டு லாபத்தில் இருந்து குறைக்க முடியாது என்றும், கிரிப்டோகரன்சியை டிரான்ஸ்பர் செய்யும் போது 1 சதவீதம் TDS பிடிக்கப்படும் எனப் பட்ஜெட் அறிக்கையில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
உண்மை நிலவரம்
30 சதவீதம் வரி விதிப்பு என்பது அதிகப்படியான வரியாக இருக்கும் நிலையில், இந்த அறிவிப்பை கிரிப்டோ முதலீட்டாளர்கள் உண்மை நிலவரம் தெரியாமல் கொண்டாடி வருகின்றனர். என்ன பிரச்சனை..?
லீகல் ஆன முதலீடு
இந்தியாவில் கிரிப்டோகரன்சியின் எதிர்காலம் என்ன என்பது தெரியாமல் இருந்த நிலையில், தற்போது மத்திய அரசின் பார்வைக்கு வந்ததும், கிரிப்டோ முதலீட்டு மீது மத்திய அரசு வரி வசூலிப்பது மூலம் அரசு கிரிப்டோகரன்சியை அதிகாரப்பூர்வ முதலீடாக, சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் லீகல் ஆன முதலீடு என மறைமுகமாக அறிவித்துள்ளது என நம்பி வந்தனர். ஆனால் இங்கு தான் பிரச்சனை..
இதுதான் உண்மை நிலவரம்
இந்நிலையில் ப்ளாக்செயின் சட்ட நிறுவனமான கிரிப்டோ லீகல்-ன் நிறுவனர் புருஷோத்தம் ஆனந்தின் கூறுகையில், கிரிப்டோகரன்சி முதலீட்டில் இருந்து வரும் வருமானத்திற்கு வரி விதிக்கக் கிரிப்டோகரன்சியைச் சட்டப்பூர்வமாக்க அவசியமில்லை, ஏனெனில் வருமான வரியானது வருமானத்தைப் பெறும் விதம் அல்லது வழிமுறைகளைப் பற்றி எப்போதும் கண்டுக்கொள்வது இல்லை என விளக்கம் கொடுத்துள்ளார்.