67 லட்சம் ஓய்வூதியதாரர்கள் மின்னணு வாயிலாக டிஜிட்டல் லைஃப் சர்டிபிகேட் (Digital Life certificate) சமர்பிப்பதற்கு, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு பல்வேறு வழிமுறைகளை அறிமுகப்படுத்தி உள்ளது.
இது இந்த கொரோனா காலத்தில் ஒய்வூதியம் பெறுபவர்களுக்கு ஏதுவாக, மத்திய அரசானது ஆயுள் சான்றிதழை ஆன்லைன் மூலமாகவே சமர்ப்பிக்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளது.
சரி எப்படி ஆன்லைன் மூலமாக ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிப்பது? வாருங்கள் பார்க்கலாம்.
ஆயுள் சான்றிதழ் (Digital Life Certificate)
ஓய்வூதியம் பெறுபவர்கள் அவர்களது ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பது அவசியமாகும். ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்களது ஓய்வூதியத்தைத் தொடர்ந்து பெறுவதற்கு, நவம்பர் மாதத்துக்குள் ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும் என்ற விதிமுறை நடைமுறையில் இருந்து வந்தது. ஆனால் கொரோனாவின் காரணமாக ஓய்வூதியம் பெறும் மூத்த குடிமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான கால வரம்பை மத்திய அரசு அதிகரித்துள்ளது.
ஆயுள் சான்றிதழை பெற என்ன வேண்டும்?
மத்திய அரசின் அனைத்து ஓய்வூதியதாரர்களும், நவம்பர் 1ம் தேதி, 2020 முதல் 2020 டிசம்பர் 31ம் தேதி வரையில் தங்களது ஆயுள் சான்றிதழை தாக்கல் செய்யலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதோடு அதனை டிஜிட்டல் முறையில் தாக்கல் செய்து கொள்ளலாம். இவ்வாறு டிஜிட்டல் முறையில் ஆயுள் சான்றிதழை பெறுவதற்கு, விண்ணப்பதாரரிடம் ஆதார் எண், மொபைல் எண் இருக்க வேண்டும்.
ஜீவன் பிரமான் ஆப்
டிஜிடல் முறையில் எப்படி தாக்கல் செய்வது? ஜீவன் பிரமான் ஆப்பினை (Jeevan Pramaan) பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதில் புதிய பதிவு (new registration) என்பதனை கிளிக் செய்து, ஆதார் எண், உங்கள் வங்கிக் கணக்கு எண், பெயர், மொபைல் எண், பென்சன் பேமெண்ட் ஆர்டர் (PPO) ஆகிய விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
என்னென்ன விவரங்கள் கொடுக்க வேண்டும்
PPO எண், பெயர், பென்சன் கொடுக்கும் நிறுவனத்தின் பெயர் போன்ற விவரங்களைப் பதிவிட வேண்டியிருக்கும். அதன் பின்னர் ஆதார் விவரங்களை வைத்து கை ரேகையை ஸ்கேன் செய்தால், ஜீவன் பிரமான் பத்திரம் திரையில் தோன்றும். லைஃப் சர்டிபிகேட் கிடைப்பது குறித்த உறுதிப்படுத்தும் செய்தி, உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு எஸ்எம்எஸ்- ஆக வரும்.
ஆயுள் சான்றிதழை வீட்டில் இருந்தே சமர்பிக்கலாம்
ஆக ஓய்வூதியம் வாங்குவோர் தங்களது லைஃப் சர்டிபிகேட்டினை வீட்டில் இருந்த படியே சமர்ப்பிக்கலாம். போஸ்ட் ஆபீஸ் மூலமாகவும் இந்த சேவை வழங்கப்படுகிறது. இதில் தபால் காரர்கள் வீடு தேடி வந்து ஆயுள் சான்றிதழை வாங்கி கொள்வார்கள். இதற்கு 70 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். ஆக இதன் மூலம் ஓய்வூதியதாரர்கள் வங்கிக் கிளைகளில் நாள் கணக்கில் காத்துக் கிடக்க வேண்டிய நிலை இனி இல்லை. இருந்த இடத்தில் இருந்த படியே லைஃப் சர்டிபிகேட்டினை சமர்ப்பிக்கலாம். உண்மையில் இது 67 லட்சம் பேருக்கு ஆறுதல் கொடுக்கும் நலல் விஷயம் தான்.